அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மாலில் அமெரிக்க ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற பர்தா அணிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் இபோல்யா ரயன் (37). விவாகரத்தான அவர் கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள புட்பிரிண்ட்ஸ் ரெக்ரூட்டிங் என்ற ஆசிரியைகளை பணியமர்த்தும் நிறுவனம் மூலம் அபுதாபி வந்துள்ளார்.அபுதாபியில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளார். இபோல்யா தனது 11 வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் அபுதாபியில் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த திங்கிட்கிழமை பவ்டிக் மாலுக்கு சென்ற இடத்தில் அவருக்கும் பர்தா அணிந்த பெண்ணுக்கும் இடையே கழிவறையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த பர்தா அணிந்த பெண் இபோல்யாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.
படுகாயம் அடைந்த இபோல்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். அபுதாபி போலீசார் கொலை நடந்த 24 மணிநேரத்திற்குள் குற்றவாளியை அடையாளம் கண்டனர்.
மேலும் சம்பவம் நடந்த 48 மணிநேரத்திற்குள் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். பெரிய வில்லாவில் இருந்த அந்த பெண் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் இருந்த வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான பெண் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் இபோல்யாவை கொன்ற பிறகு அந்த மால் அருகே வசித்து வரும் எகிப்து-அமெரிக்க டாக்டரின் வீட்டில் வெடிகுண்டை வைத்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை தீவிரவாத வழக்காக கருதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அந்த பெண்ணுக்கு இபோல்யா மற்றும் டாக்டருடன் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவர்கள் அமெரிக்கர்கள் என்பதாலேயே இவ்வாறு செய்துள்ளார்.
அந்த பெண்ணுக்கும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க ஆசிரியர்களை கொல்லப் போவதாக ஜிஹாதிகள் இணையதளத்தில் செய்தி வெளியானதை பார்த்த அமெரிக்க தூதரகம் தனது நாட்டு குடிமக்களை எச்சரித்திருந்த நிலையில் இந்த கொலை நடந்துள்ளது.