அரசாங்கத்தில் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் உடனடியாக மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவேண்டும் என்று மல்வத்து, அஸ்கிரிய, ராமஞ்ஞ மற்றும் அமரபுர ஆகிய நான்கு பௌத்த பீடங்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
நான்கு பீடங்களினதும் பீடாதிபதிகள் கைச்சாத்திட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய பீடத்தில் நேற்று கூடிய நான்கு பீடங்களினதும் தேரர்கள் இது தொடர்பாக நீண்ட நேரம் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரிய, ராமஞ்ஞ மற்றும் அமரபுர ஆகிய நான்கு பௌத்த பீடங்களினதும் தேரர்கள் நேற்று பிற்பகல் அஸ்கிரிய பீடத்தில் ஒன்றுகூடி நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்ந்தனர்.
அதன்போது முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சுப் பொறுப்புக்களை கைவிட்டுள்ளமை கவலைக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சகல முஸ்லிம் தலைவர்களும் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு மல்வத்து பீடத்தின் நியங்கொட சிறி விஜித்த சிறி தேரர் கருத்து தெரிவிக்கையில்
பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. இதன்போது நான்கு பீடங்களினதும் பீடாதிபதிகளின் கையொப்பங்களுடன் அரசாங்கத்திடமும் மக்களிடமும் சில கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். அது கவலைக்குரிய விடயமாகும். அது அவ்வாறு நடந்திருக்கக்கூடாது.
எனவே அனைத்து முஸ்லிம் தலைவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். அரசாங்கத்தில் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் உடனடியாக மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்கவேண்டும் என்று கோருகின்றோம்.
நிர்வாக இயந்திரத்துக்குள் பிரவேசிக்குமாறு கோருகின்றோம். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சிலர் மட்டும் தாமாக முன்வந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
உங்கள் நிரபராதி தன்மையை நிரூபியுங்கள். இந்த கோரிக்கையை தயவுடனும் கருணையுடனும் விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் அரசாங்க பதவிகளிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கடந்த வௌ்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
அதனையடுத்து கடந்த திங்கட்கிழமை ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
அதனயைடுத்து அத்துரலியே ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் அதன் பின்னர் திங்கட்கிழமை மாலை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினா செய்தனர்.
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தபோதும் தாம் அரசாங்கத்தில் பின்வரிசை உறுப்பினர்களாக இருந்து அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே தற்போது மல்வத்து, அஸ்கிரிய, ராமஞ்ஞ மற்றும் அமரபுர ஆகிய நான்கு பௌத்த பீடங்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.