ஹரியாணாவில் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன், தனது ஆசிரியரை கண்மூடித்தனமாக அடித்ததில், அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஹரியாணாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்தில், பஹதுர்கார்ஹ் நகரத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன், தனது ஆசிரியரைத் தாக்கியதில், அவருக்கு தலை, கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம், வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அதில், யாரும் இல்லாத வகுப்பறையில் ஆசிரியர் உட்கார்ந்திருக்க, தனது பையில் இருந்து கூரிய ஆயுதத்தை எடுக்கும் மாணவன், ஆசிரியரை பலமாகத் தாக்குகிறான். அவனது தாக்குதலைத் தடுக்க முடியாத ஆசிரியர், அங்கிருந்து தப்பியோடுகிறார்.
வகுப்பறையில் இருந்து வெளியே ஓடிய பிறகும், மாணவன் தாக்குதலை நிறுத்தவில்லை.
வேறொரு ஆசிரியர் வந்து தடுக்கும்வரை பல முறை ஆசிரியர் தாக்கப்படுகிறார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் உடடினயாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனும், அவனுக்கு ஆயுதம் கொடுத்த மற்றொரு மாணவனும் கைது செய்யப்பட்டனர்.
கணக்குப் பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், அந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாகவும், பெற்றோருடனான சந்திப்பின் போது அவனைப் பற்றி பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று ஆசிரியர் மிரட்டியதாலும் இந்த கொடூர செயலில் மாணவன் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.