ஆண்களைப் போல தனக்கு `தாடி` வளர்ந்ததால் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான ஹர்னாம் கவுர் கேலி கிண்டலுக்கு உள்ளானார்.
எது அழகுஎன சமூகம் வரையறுத்து வைத்திருப்பதை உடைக்க தைரியமான ஒரு முடிவை எடுத்த ஹர்னாம் கவுர், தனது வாழ்க்கை போராட்டத்தினை விளக்குகிறார் .
எனக்கு 16 வயதாகும் போதே, தாடி வளர்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.
நான் பருவமடைந்ததில் இருந்து எனது முகத்தில் முடி இருந்தது. “ தாடி எனது முகத்தில் இருந்தால், எனது எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுவேன். எனக்கு தாடி வளரட்டும்“
முகத்தில் தாடி இருந்ததால் பள்ளியில் மோசமான கிண்டலுக்கு உள்ளானேன்.
எனது முகத்தில் தாடி வளர்வது பற்றியும், எனது உடல் நிலை பற்றியும் எனது பெற்றோர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். தாடி வளர்வதற்கு காரணமான “பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம்“ எனக்கு இருப்பதைக் கண்டறிந்தனர்.
முடி அகற்றும் கிரீம்கள், நூல் மூலம் முடி அகற்றுதல், சவரம், மெழுகு மூலம் முடி அகற்றுதல் என எனது முகத்தில் உள்ள முடியை அகற்ற ஒவ்வொரு சாத்தியமுள்ள முறைகளையும் முயற்சித்துப் பார்த்தேன்.
தினமும் சவரம் செய்வேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மெழுகு மூலம் முடியை அகற்றுவேன். ஆனால், மீண்டும் கருமையாகவும், நீளமாகவும், தடிமனாகவும் தாடி வளர்ந்தது.
என்னை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கும் நண்பர்களை நான் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை அக்கறையாகப் பார்த்துக்கொள்வார்கள்.
எனது சகோதரர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நான் அழும்போதெல்லாம் எனது சகோதரர் தான் தோள் கொடுத்து ஆதரவளிப்பார்.
சவரம் செய்வதை நிறுத்திவிட்டு, தாடி வளர்க்கலாம் என முடிவெடுத்த என்னை சகோதரரின் நண்பர்கள் கிண்டலடித்தார்கள். அதனால், தனக்கு நெருக்கமான நண்பர்களை விட்டு அவர் விலகினார்.
நான் இதுவரை செய்த விஷயங்களிலே, தாடி வளர்க்க வேண்டும் என முடிவு செய்தது மிகவும் கடினமான ஒன்று. நான் வித்தியாசமாக இருப்பேன் என தெரிந்தும், தாடி வளர்க்க முடிவு செய்தேன்.
கிண்டல்களைக் கேட்டு கேட்டு எனக்குச் சலித்துவிட்டது. எது அழகு என சமூகம் வரையறுத்திருக்கும் விதிமுறைகளுக்கு எதிராக நிற்க வேண்டும் என விரும்பினேன்.
சமூகத்தில், நிறையப் பேர் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
கேலி, கிண்டல் பாதிப்புகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க உதவுவது மற்றும் விழிப்புணர்வு அளிப்பது போன்ற வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன்.
நான் மிகவும் வலுவான, அழகான பெண் என்பதை அறிந்துகொண்டேன். எனக்கு இவ்வளவு குணங்கள் இருப்பதை முன்பு உணரவில்லை.
நீங்கள் கிண்டலுக்கு உள்ளாகும் போது உங்களைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களே உங்களுக்கு அதிகம் கேட்கும்.
அதனால், என்னை நானே விரும்ப ஆரம்பித்தேன். என்னைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை நேர்மறை கருத்துக்களாக மாற்றினேன்.
`அழகானவள்` என என்னை நானே அழைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் தகுதியுடையவள் என என்னிடமே கூறிக்கொண்டேன். மக்களுக்குத் தெரிந்ததை விட நான் மிகவும் வலுவானவள் என்பதை உணர்ந்தேன்.
எனது உடல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். மாற்றத்தை மனரீதியாக ஏற்றுக்கொள்ள நான் நிறையப் போராட வேண்டியுள்ளது.
எனது வயிற்றில் தற்போது திடீரென வெண்புள்ளிகள் தோன்றியுள்ளன. இதையும் நான் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
சுய காதல் என்பது, மாதங்கள் மற்றும் ஆண்டுகளாகத் தொடரும் பயணம். என்னை மேலும் காதலிப்பதற்காக என்னுள் இருக்கும் சில புதிய விஷயங்களைத் தேடி வருகிறேன்.
தன்னை தானே விரும்புவதை நிறைய மக்கள் மறந்துவிட்டார்கள். மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என விரும்புகிறோம். நம்மை நாமே விரும்பாத போது, மற்றவர்களை எப்படி விரும்ப முடிவும்?