‘உங்க வீட்டுல நடந்தா ஏத்துகுவீங்களா?’னு கேட்டவர்களின் கவனத்துக்கு…” – மகளின் காதல் திருமண கதை சொல்லும் லட்சுமி ராமகிருஷ்ணன்
இரண்டாவது மகளின் காதலையும் அங்கீகரித்து பஞ்சாபி மாப்பிள்ளையை மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளார், லட்சுமி ராமகிருஷ்ணன்.
இவரது இரண்டாவது மகள் ஸ்ருதி-அங்கிட் நிச்சயதார்த்தம் ஜனவரி மாதம் டெல்லியில் நடந்தது. கடந்த மாதம் இயற்கை எழில் சூழ்ந்த கேரளாவின் குமரகத்தில் திருமணம் முடிந்தது.
மூத்த மகளின் திருமணத்திற்கு மொத்த சினிமா இன்டஸ்ட்ரிக்கும் அழைப்பு விடுத்திருந்தவர், இந்தத் திருமணத்திற்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தை மட்டுமே அழைத்திருந்தார்.
”இவ்ளோ சைலன்டா ஏன், காதல் திருமணம் என்பதாலா?” – கேட்டால், ”லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நீங்க புரிஞ்சுகிட்டது இவ்ளோதானா? சென்னையில ஊரைக் கூட்டி நடத்தினேனே பெரிய பொண்ணு சாரதா திருமணம், அதுகூட லவ் மேரேஜ்தான்.
கோயம்புத்தூர்ல சாரதாவும் அஸ்வினும் ஒன்ணா படிச்சாங்க. அப்போ அவங்களுக்கிடையே காதல் வரலை. சில வருடங்கள் கழிச்சு மாஸ்டர் டிகிரிக்காக அமெரிக்கா போனா, என் பொண்ணு.
அஸ்வினும் அதுக்கு முன்னாடியே அங்க போயிருக்க, யதேச்சையா சந்திச்சாங்க. அதன்பிறகு ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சுப்போக, என் பொண்ணு எங்கிட்ட விஷயத்தைச் சொல்லி அனுமதி கேட்டா.
‘சொல்வதெல்லாம் உண்மை’யில் ‘உண்மையான காதலா இருந்தா சேர்ந்து வாழுங்க’னு சொன்னா, ‘உங்க வீட்டுல நடந்தா ஏத்துக்குவீங்களா’ன்னு எத்தனையோ கமென்ட்ஸ் கேட்டிருப்பேன்.
கேட்டவங்க கொஞ்சம் முன்னாடி வர்றீங்களா? ஷோவுல எப்படி உண்மையா நடந்திக்கிடுறேனோ, நிஜத்துலயும் அப்படித்தான் நான். ரெண்டும் எனக்கு வேற வேற இல்லை.
முடிவெடுக்கத் தெரிஞ்ச மெச்சூர்டான பொண்ணு. படிப்பு, வேலைனு வாழ்க்கையில ஒரு ஸ்டேட்டஸுக்கு வந்தபிறகே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து அனுமதி கேட்கிறா.
அதுக்குமேல அதுல நம்ம முடிவு என்ன இருக்கு? நானும் அவரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலைதான். ஆனாலும், சந்தோஷமா அந்தக் கல்யாணத்தை நடத்தி வெச்சோம். எனக்கு ஜாதி, மதம், இனமெல்லாம் பிரச்னையே இல்லை.
இந்த இடத்துல ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகணும். என்னோட எந்த முடிவுக்கும் என் கணவரோட சப்போர்ட் எப்பவும் உண்டு. எங்க வீட்டுல நடந்த முதல் விசேஷம்கிறதால கொஞ்சம் கிராண்டா இருந்துச்சு” என்கிறார்.
ஸ்ருதி-அங்கிட் லவ் ஸ்டோரி…
”அவ அக்கா மாதிரியே நடந்திருக்கு. கோ இன்டசிடென்ட். சி.ஏ., முடிச்சுட்டு டெல்லியில ஹையர் ஸ்டடீஸ் பண்ணினா. அங்கிட் அங்கே அவளோட கிளாஸ்மேட். டெல்லியில செட்டிலான பஞ்சாபி ஃபேமிலி. அங்கிட்டோட அப்பா, ரிட்டயர்டு ஆர்மிமேன்.
டெல்லியில படிக்கிற வரைக்கும் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமே. படிப்பு முடிஞ்சதும் லண்டன்ல ரெண்டு பேருக்கும் ஒரே கம்பெனியில வேலை கிடைக்க, ஏழு வருட புரிதல் காதலா மாறிடுச்சு.
அக்கா மாதிரியே இவளும் அனுமதி கேட்டா. சம்மதிச்சோம். நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை வீட்டுல நடந்திச்சு. கல்யாணத்தை ரெண்டு தரப்பும் சேர்ந்து செய்தோம்”.
திருமணத்துக்கு குமரகத்தைத் தேர்ந்தெடுத்த காரணம்…
”எம் பொண்ணுதான். ஆடம்பரமா திருமணம் வேணாம்னு சொல்லிட்டா. ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ பண்ணிக்க ஆசைப்பட்டா. அடர்ந்த காட்டுக்குள்ளே போய்க் கல்யாணம் செய்துக்கணும்கிறதுதான் அவளோட விருப்பம்.
ஆறு, ஏரி, படகு வீடுனு அமைதியும் அழகும் சூழ்ந்த இயற்கையான குமரகம் சரியான இடமா தெரிஞ்சது. மூணு நாள் என் பிள்ளைகளோட ஃப்ரெண்ட்ஸ், நெருங்கின சொந்தக்காரங்களோட அங்கே இருந்தோம். ஒவ்வொரு விஷயத்தையும் என்ஜாய் பண்ணினோம்.
அங்கிட் ஃபேமிலி ‘உங்க முறைப்படி திருமணம் நடத்துங்க’னு எங்ககிட்ட சொன்னாங்க. பஞ்சாபி முறைப்படி நடந்தா பார்த்து ரசிக்கலாம்னு நாங்க நினைச்சோம். கடைசியில பொதுவான ஆரிய சமாஜ் முறைப்படி நடந்துச்சு.
அவங்கவங்க விருப்பப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து நடத்தினோம். குமரகத்துல எல்லா டெக்கரேஷனையும் நானே செய்திருந்தேன். பிள்ளைகள் சந்தோஷத்துல பெத்தவங்க மனசு நிறையும்கிறதை என்னோட ரெண்டு மகள்கள் திருமணத்துலேயும் அனுபவப்பூர்வமா நான் உணர்ந்தேன்” என்றவரிடம்,
‘பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன் கிளம்பிட்டாங்களா’ என்றால்,
‘மூணாவது நாளே லண்டன் ஆபீஸ்ல டியூட்டியில ஜாயின்ட் பண்ணிட்டாங்க’ என்று சிரிக்கிறார்.