தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில், புதியதொரு அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றுகாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையகத்தில் உதயசூரியன் சின்னத்தைக் கொண்டதாக, இன்னமும் பெயர் தீர்மானிக்கப்படாத புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்பாட்டில், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எவ், ஈரோஸ் ஆகிய கட்சிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக- குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியைத் தோற்கடிக்கும் நோக்கில் இந்த புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் கொண்ட தலைமைக்குழு இந்தக் கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெலோ, தமிழ்க் காங்கிரஸ், புளொட் ஆகிய கட்சிகளையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய கூட்டமைப்பின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இது தொடர்பான பணிகள் முடிவடைந்ததும், உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீட்டுப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சிவகரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.