எரிமலைகளால் உருவாகும் தீவுகளே மிக எளிதாகவும் விரைவாகவும் உருவாகும் நிலப்பகுதி. அப்படி உருவானதுதான் இந்தச் சரளைக் கல் தீவும். வருத்தம் என்னவென்றால், இந்தத் தீவுக்கு ஆயுள் அவ்வளவு வலிமையாக இல்லை.
எரிமலை வெடிப்பதால் ஒரு புது நிலப்பகுதியே உருவாக வாய்ப்புண்டு. இதைப் பள்ளிப் பருவத்தில் படித்த நிலவியல் பாடங்களில் கற்றிருப்போம்.
ஆனால், அப்படியொரு நிகழ்வு நடக்க பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பார்கள். ஒருவேளை நம் வாழ்நாளில் அப்படியொரு நிகழ்வு நடந்தால்? எரிமலை வெடிப்பால் நம் காலத்திலேயே புதிதாக ஒரு நிலப்பகுதி தோன்றினால்?
தோன்றினால் என்ன… தோன்றிவிட்டது. பசிபிக் பெருங்கடலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்காத நிலப்பகுதி இப்போது உருவாகியுள்ளது. கடலுக்கடியில் நிகழ்ந்த ஓர் எரிமலை வெடிப்பு இந்தத் தீவை உருவாக்கியுள்ளது.
இந்தப் புதுத் தீவு, மற்ற கிரகங்களில் இதே போன்று நடக்கக்கூடிய நிலவியல் மாற்றங்களை ஆய்வுசெய்ய உதவி செய்யுமென்று நம்புகின்றனர்.
டோங்கா என்ற தீவு நிலத்தையொட்டித்தான் இது உருவாகியுள்ளது. அதிகாரபூர்வமாக அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இருப்பினும், அழைப்பதற்குப் பெயர் வேண்டுமல்லவா? அதனால் டோங்கா தீவை வைத்தே ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாபாய் (Hunga Tonga Hunga Ha’apai) என்று பெயரிட்டுள்ளார்கள் ஆய்வாளர்கள்.
டோங்கா ஹுங்கா என்ற தீவுகளை இணைக்கும் விதமாக இது உருவாகியிருப்பதால் தற்காலிகமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எரிமலைகளால் உருவாகும் தீவுகளே மிக எளிதாகவும் விரைவாகவும் உருவாகும் நிலப்பகுதி. மற்ற தீவுகளில் மொத்த கன பரிமாணம், நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை முதலில் ஆய்வுசெய்ய வேண்டும்.
பூமியின் மற்ற தீவுகளில் இதுவரை இந்த அளவுகோல்களை ஓரளவுக்கே கணக்கிட்டுள்ளனர். அதுதான் அத்தீவில் ஏற்படும் நில அரிப்புச் செயற்பாட்டின் விகிதங்களைத் துல்லியமாகக் கணக்கிட உதவும்.
அந்த அளவுகோல்களே எரிமலைச் சாம்பல்களால் உருவான இந்தச் சின்னஞ்சிறு தீவு எப்படித் தாக்குப்பிடித்து நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
எரிமலை வெடிப்பால் உண்டான சரளைக் கல் தீவு
கடந்த ஆண்டு இந்தத் தீவைக் கண்டுபிடித்தபோது விரைவில் கடல் நீரில் கரைந்து காணாமல் போய்விடுமென்று எதிர்பார்த்தனர் நாசா விஞ்ஞானிகள்.
அதைத் தாண்டி இன்னமும் நிற்கிறது ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாபாய். பூமியில் ஒரு தீவு உருவாக நீண்டகாலம் பிடிக்கும். இந்தத் தீவும் அதன் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது.
முழுமையாக உருவாகி முடிப்பதற்குள் மழை மற்றும் வேகமான கடல் அலைகளின் காரணமாக அரிக்கப்பட்டு இல்லாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகமென்று அனைவரும் நினைத்தனர்.
கடந்த 150 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புதான் மாதக்கணக்கில் நீண்டது. அதன் விளைவாகவே இந்தப் புதிய தீவும் உருவாகிக் கொண்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்துக்கு உருவாகியுள்ள இதன் மொத்த பரப்பு 1.1 மைல்கள். செயற்கைக்கோள் உதவியுடன் இதன் நிலப்பரப்பை ஆய்வுசெய்த நாசா தன் விஞ்ஞானிகளை நேரடி ஆராய்ச்சிக்காக அங்கு அனுப்பியது.
இத்தகைய புதிய தீவில் அதுவும் நம் காலத்தில் தோன்றிய தீவில் கால்பதிக்க யாருக்குத்தான் ஆவல் இருக்காது. நாசா விஞ்ஞானிகளுக்கும் அப்படியே இருந்ததது.
“நாங்கள் பார்ப்பதற்குப் பள்ளிக் குழந்தைகளைப் போல் காட்சியளித்தோம். இப்படியொரு சந்தர்ப்பத்தில் யாராயினும் அப்படித்தானே இருக்கும்” என்று முதன்முதலில் தம் வாழ்நாளில் தோன்றிய புதுத்தீவுக்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார் விஞ்ஞானி டான் ஸ்லேபேக் (Dan Slayback).
மேலும், “அந்தத் தீவு முழுவதும் கறுப்பு சரளைக் கற்களால் ஆனது. அதை மணலென்று சொல்லமுடியாது. முழுக்க முழுக்கப் பட்டாணி அளவே இருந்த சரளைக் கற்குவியல்.
நாங்கள் அணிந்து சென்றிருந்த காலணிகள் அதற்குப் போதுமானதாக இல்லை. எங்கள் கால்களுக்கு உள்ளே சென்ற சரளைக் கற்களால் பாதங்கள் வலிக்கத் தொடங்கிவிட்டன.
அந்தத் தீவு செயற்கைக் கோளில் பார்த்ததுபோல் சமவெளியாக இல்லை. ஓரளவுக்குச் சமமான நிலத்தைக் கொண்டிருந்தாலும், அவை அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு மேடு பள்ளங்களாகவும் மாறியுள்ளது” என்கிறார்.
கடந்த நான்கே ஆண்டுகளுக்குள் புதிய தீவொன்று உருவாகியுள்ளது என்பதே நமக்கு ஆச்சர்யமாகத்தான் உள்ளது. அங்குச் சென்றிருந்த ஆய்வுக் குழு மற்றுமோர் அதிசயத்தையும் நமக்குப் பரிசளிக்கிறார்கள்.
தீவு முழுக்க சரளைக் கற்களால் ஆனது என்பதால் அதற்கு நாமும் தற்காலிகமாக `சரளைக் கல் தீவு’ என்று பெயரிட்டு அழைப்போம்.
சரளைக் கல் தீவு முழுவதும் தற்போது தாவரங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. புதிய நிலப்பகுதியில் வேர்விடத் தொடங்கியிருக்கும் அவை அந்தத் தீவில் உருவாகத் தொடங்கியிருக்கும் பிசுபிசுப்பான சேற்று மண் பரப்பில் வளர்ந்து வருகின்றன.
செயற்கைக் கோள் ஒளிப்படங்களில் அவற்றை மெல்லிய நிறங்களில் நம்மால் பார்க்கமுடியும். அவைதான் அந்தச் சேற்றுமண்.
களிமண் நிறத்திலிருக்கும் அவற்றில்தான் தாவரங்கள் வளரத் தொடங்கியுள்ளன. அது சாம்பலல்ல. அதேசமயம் அவை எங்கிருந்து வந்தன, எப்படி அந்தத் தீவில் உருவாகின என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.
சரளைக் கல் தீவின் மேட்டுப் பகுதிகளை அளக்கும்போது அங்கு உருவாகியிருந்த பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்து வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
33 மாதங்களாகச் செயற்கைக்கோள் உதவியுடன் அவற்றைக் கவனித்ததில் கடல் அரிப்பு அந்தத் தீவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டேயிருப்பது தெரிந்தது.
அதைவிட மழை காரணமாக அதன் அரிப்பு அவர்கள் எதிர்பார்த்ததைவிட இன்னும் அதிகமாக இருக்கின்றது. கடல் அலைகள் தெற்கே அதன் கரைகளை நொறுக்கிக்கொண்டிருக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மொத்த தீவுமே மீண்டும் கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்குமுன் அந்த இடத்தில் வெறும் கடல்தான் காட்சியளித்தது. தற்போது 2 மீட்டர் ஆழமுள்ள கடற்கரையோடு ஒரு தீவு காட்சியளிக்கிறது. இதுவே அதிசயம்தான். அந்தத் தீவு மீண்டும் மூழ்குவதற்குள் சில ஆய்வுகளை மேற்கொண்டாக வேண்டும்.
உதாரணத்துக்கு, ஒருகாலத்தில் இதேபோன்ற ஈரநிலமாக இருந்திருந்த நிலப்பகுதிகள் செவ்வாய் கிரகத்திலும் இருந்துள்ளன.
இதேபோன்ற செயல்கள் அங்கும் நிகழ்ந்திருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவலாம். செவ்வாயில் நடக்கும் மாற்றங்களை நாம் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவியதே பூமியோடு அதன் மாற்றங்களை ஒப்பிட்டதன் மூலமாகத்தான்.
செவ்வாயிலும் இத்தகைய எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதோடு அங்கு நீர் இருந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய சரளைக் கல் தீவு முழுவதும் ஆய்வு நடத்துவதன் மூலம், அதன் மாற்றங்களைக் கவனிப்பதன் மூலம் செவ்வாயில் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ள மாற்றங்களை நம்மால் ஓரளவுக்குக் கணிக்கமுடியும்.
சரளைக் கல் தீவில் முளைத்திருக்கும் தாவரங்கள்
இப்போது சரளைக் கல் தீவில் நடந்துகொண்டிருக்கும் அரிப்பு, அந்தத் தீவு முழுவதையும் எப்படியும் மூழ்கடித்துவிடும். அது அடுத்த பத்தாண்டுகளில்கூட நடக்கலாம்.
அதற்குள் இந்த ஆய்வுகளை நடத்தி நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டியாக வேண்டும். இத்தகைய கன்னி நிலத்தை ஆய்வு செய்வதென்பது நாசா விஞ்ஞானிகளுக்குப் புதிய அனுபவமாக உள்ளது. அதனால் அவர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
“நம் கண்முன்னே உருவான நிலத்தில் நாமே சென்று நிற்பதென்பது எந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தருமென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆகவே என் மட்டற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு விளக்கித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. நான் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன். இங்கு இன்னும் என்னென்ன மாற்றங்கள் நடக்கப் போகின்றனவோ!” – டான் ஸ்லேபேக்.