கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டார்கள் என்ற ஒரு காரணமற்ற நம்பிக்கை, தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளிடமும் இருந்தது.
இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை இயக்கம் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிக் காத்து வந்தது.
1998இன் இறுதிப் பகுதியில் சுதந்திரப் பறவைகள்’ பத்திரிகையை வெளியிடும் பொறுப்பு தலைவரால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னர் பல தடவைகள் இயக்கத்தின் தலைவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் பேசிய சந்தர்ப்பம் சுதந்திரப் பறவைகள் தொடர் பான சந்திப்பாகத்தான் அமைந்தது.
பத்திரிகையில் புதிய பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்தது. “பெண்களின் பிரச்சனைகளைப் பெண்களே வெளிக்கொணர வேண்டும்.
பெண்களைவிட ஆண்கள் அதிகம் சிறப்பாகப் பெண் விடுதலை பற்றிப் பேசுவார்கள், ஏன் நான்கூட உங்களை விடவும் நன்றாகப் பெண்ணியம் பேசுவேன்.
ஆனால் உங்களின் பிரச்சனைகளை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எந்த ஆண்களாலுமே பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது.
பெண்களின் பிரச்சனைகளைப் பெண்கள்தான் பேச வேண்டும், எழுத வேண்டும். அப்போதுதான் அது உண்மையானதாக இருக்கும். ஆகவே சுதந்திரப் பறவையில் பெண்கள் அதிக அளவில் எழுத வேண்டும்.
எழுத்தாற்றல் உள்ள பெண் போராளிகளை இனங்கண்டு எழுத்துப் பயிற்சிகள், கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அரசியல்துறையின் பொறுப்பில் ‘மாலதி பதிப்பகம்’ என்ற அச்சுக்கூடம் இருந்தது. அங்கேதான் விடுதலைப் புலிகள் பத்திரிகையும் அச்சிடப்பட்டது.
wwww.ilakkiyainfo.com
கணினியோ, ‘ஓப்செட் பிரிண்ட்’ வசதிகளோ வன்னியில் இல்லாத காலத்தில், ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோத்து, படங்களைப் புளக் செய்து பத்திரிகை வெளியிடுவது பற்றாக்குறைகள் நிறைந்த காலத்தில்பணியாக இருந்தது.
பத்திரிகைகளை அச்சுப் பதிப்பதற்காகப் பாவிக்கப்படும் தாள் தடைசெய்யப்பட்டிருந்த காரணத்தால், அரசியல்துறை மூலமாகவே எமக்குத் தேவையான தாள்களைப் பெற்றுக்கொண்டோம்.
கல்விக் குழு, சுதந்திரப் பறவைகள், அரசியல் விஞ்ஞானப் பிரிவு ஆகிய மூன்று மகளிர் பிரிவுகளின் நிர்வாகப் பணிகளுடன் பிரதேச பரப்புரை வேலைகளிலும் நான் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.
கிழக்கு மாகாணப் போராளிகள் ஜெயசிக்குறு களமுனைக்காக அடர்ந்த காடுகளுக்கூடாகப் பல இடர்ப்பாடுகளையும் இராணுவத்துடனான மோதல்களையும் சந்தித்து, பல மாதக் கணக்காக நீண்ட தூரம் நடந்து பயணித்து வன்னிக்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை வன்னியிலிருந்தும் சில தேவைகளுக்காக அணிகள் கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
1998இன் இறுதி அல்லது 1999 ஆரம்ப காலமாகவோ இருக்க வேண்டும்.
இந்த அணி புறப்பட்டுச் சென்ற ஒரு மாத காலத்தின் பின்னர் ஒரு பயங்கரமான செய்தி வந்திருந்தது.
அந்த அணியினர் சென்றுகொண்டிருந்த பயணத்தின் இடை நடுவில் ‘கொலரா’ என்கிற கொடிய வாந்திபேதி நோயினால் அவர்களில் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பலர் நோயின் தாக்கத்தினால் உயிரிழந்து விட்டதாகவும் எஞ்சியவர்கள் அனைவருமே மோசமான பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகவும், அவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தி வந்த ஓரிரு நாட்களின் பின் நள்ளிரவுக்குப் பின்னரான பொழுதில் அவசரமாக முல்லைத்தீவுக் கடற்கரைக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தோம்.
நானும் வேறு சில பெண் போராளிகளுமாக அங்குச் சென்றபோது, கடற்புலிகள் உயிரிழந்த நிலையிலும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையிலும் தளபதி கீரனுடன் மட்டக்களப்புக்குச் சென்ற போராளிகளில் எஞ்சியவர்களைக் கொண்டுவந்து சேர்த்திருந்தனர்.
அவர்களது உடல்களை ஏற்கனவே அங்குத் தயாராகக் காத்திருந்த வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
எனக்கு மிகவும் அறிமுகமான நிரோஜினி என்ற போராளி கொலராவினால் உயிரிழந்து காட்டுப் பாதையிலேயே புதைக்கப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.
சுதர்சினி என்கிற இன்னுமொரு போராளி கடுமையான பாதிப்படைந்த நிலைமையில் உயிரற்ற சடலம் போலக் கண்மூடிக் கிடந்தார்.
அதே நிலையில்தான் ஏனையவர்களும் இருந்தனர். அதுவரையிலும் உயிர் ஊசலாடிக்கொண் டிருந்த கீரன். முல்லைத்தீவுக் கரையை வந்தடைந்த பின்னர் உயிரிழந்துவிட்டிருந்தார்.
மோசமான நிலைமையிலிருந்தவர் களுக்குச் சிகிச்சையளிப்பதற்காகத் தனியிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீவிர மருத்துவச் சிகிச்சையின் மூலம் அவர்கள் முழுமையாகக் குணமடைவதற்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் சென்றது.
ஆனாலும் அவர்கள் முழுமையான சுகதேகிகளாவதற்குப் பல மாதங்கள் சென்றன. அவர்கள் குணமடையத் தொடங்கிய பின்னரே அவர்களுக்குக் கொலரா நோய்த் தாக்கம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய முனைந்தோம்.
இந்த அணியினர் சென்றுகொண்டிருந்த பாதையில் இராணுவத்தினருடனான தொடர்ந்த மோதல்களி னால் அதிகமான நாட்கள் மறைவிடங்களில் தங்க நேரிட்ட தாகவும், தாங்கள் எடுத்துச் சென்ற உணவுப் பொருட்கள் முடிவடைந்துவிட்ட காரணத்தால்…..,
ஏற்கனவே அங்குத் தங்கிச்சென்ற அணியினரால் பதப்படுத்தப்பட்ட நிலையில்…..
விழிப்புணர்வு வேலைத் திட்டமும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கான சிகிச்சை யளித்தலும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டன.
அனைத்துப் பிரதேசங்களிலும் பல அணிகளாகப் பிரிந்து ஓய்வொழிச்சல் இன்றிக் கண்ணயராது செயற்படத் தொடங்கினோம்.
‘கொலரா வாந்திபேதிக்கான அறிகுறிகள் பற்றியதும், அதன் பாதிப்புகள் பற்றியதுமான விளக்கம் ஒலி பெருக்கிகள் மூலமாகவும், ஈழநாதம் பத்திரிகை, புலிகளின் குரல் வானொலி என்பவற்றுக்கூடாகவும், விசேட துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் மக்களுக்கு அதிவேகமாக எடுத்துச் சொல்லப்பட்டது.
மக்களும் எமது தடுப்பு நடவடிக்கைகளில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். கொலரா நோய் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரையும் கிராமத்தவர்களே முன்வந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ ஏற்பாட்டிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
வன்னியில் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சலும் மக்களை மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டிருந்தது. மக்களும் போராளிகளும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
“குளொரோ குயீன், பிறீமா குயின், தாரா பிறீம்” என அதற்கான மாத்திரைகளின் பெயரைக் கேட்டாலே வாந்தி ஏற்படும் உணர்வு ஏற்படும்.
ஆறு மாதத்திற்கொரு தடவை என்னையும் பீடித்த மலேரியா காய்ச்சலால் நானும் மிகுந்த உடல் வேதனைப்பட்டேன்.
இயக்கத் தின் மருத்துவப் பிரிவினர் தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு மாத்திரைகளை விநியோகித்து வந்த காரணத்தால் சற்றுக் காலத்தின் பின்னர் வன்னியில் மலேரியா நோய்த் தாக்கம் இல்லாமல் போனது.
1998.08.13 அன்றைய தினத்தில் சுதந்திரப் பறவை பத்திரிகைக் கான களமுனைக் கட்டுரை ஒன்றுக்காகத் தகவல்களைத் திரட்டுவதற்காகக் கிளிநொச்சிப் பகுதியின் களமுனைத் தளபதி தீபனைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தேன்.
யுத்தக் களத்தை அண்மித்திருந்த திருவையாறு பகுதியில் அவருடைய கட்டளை மையம் அமைந்திருந்தது.
முதல் நாளிரவு கோணாவில் பகுதியில் இராணுவத்தினருடன் மோதல் ஒன்று நிகழ்ந்திருந்தது எனக்குத் தெரியும். ஆனால் ஒருத்தி என்னைக் கண்டதும் ஓடிவந்து எனது கையைப் பற்றிக்கொண்டு சொன்ன செய்தி எனக்குள் நெருப்புப் போல இறங்கியது.
சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் நாங்களிருவரும் அப்போதும் சண்டை போட்டுக்கொண்டோம்.
என்னைப் போல எந்த நேரமும் புத்தகத்துடன் பொழுது போக்காமல் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகள் எல்லாம் செய்வாள். உறவினர்களின் வீடுகளுக்குப் போய் வருவாள்.
“நான் கெதியிலை, அப்பாவுடன் போயிடுவன். நீ அம்மாவைப் பாத்துக்கொள்” எனச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நான் வழக்கம்போல இரண்டு குத்துக் கொடுத்துவிட்டுப் “பைத்தியம் மாதிரி அலட்டாதே” எனக் கடிந்துகொண்டேன்.
அப்போது எனது தாயாரும் சகோதரர்களும் விசுவமடு பிரதேசத்தில் இளங்கோபுரம் என்னும் கிராமத்தில் எமக்கிருந்த காணியொன்றில் வசித்துவந்தனர். குடும்பத்தில் கடும் வறுமை நிலவியிருந்தது.
எனது மூன்றாவது தங்கை திருமணம் முடித்திருந் தாள். தம்பி படிப்பை இடையில் நிறுத்திவிட்டுக் கடையொன்றில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். ஏனைய தங்கைகள் படித்துக்கொண்டிருந்தனர்.
அம்மா வீட்டைச் சுற்றிச் சிறிய தோட்டமொன்றினைப் பயிரிட்டிருந்தார். தங்கையின் இழப்பு குடும்பத்தவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
தொடர்ந்துகொண்டிருந்த போரில் எனக்கும் ஏதாவது நேரிட்டு விடுமென அம்மா அதிகமாகப் பயந்தார்.
தங்கையின் இறுதி நிகழ்வுகள் முடிந்த கையோடு எனது முகாமுக்குச் செல்ல நான் புறப்பட்டபோது என்னை கட்டியணைத்தபடி “இனிக்காணும் இயக்கத்திலிருந்து விலத்தி வந்துவிடம்மா’ எனக் கதறியழுதார்.
என்னை நம்பி இயக்கத்தில் பல வேலைகள் தரப்பட்டிருந்தன. அத்துடன் எனது அன்புக்குரிய பல போராளிகள் உயிரிழந்து விட்டிருந்தனர்.
அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கான திராணி என் மனதிற்கு அக்கணத்தில் இருக்கவில்லை. மௌனமாகத் தலையைக் குனிந்தபடி அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு நெஞ்சில் நிறைந்த சுமையோடு எனது முகாமைச் சென்றடைந்தேன்.
1997-98இல் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக இரண்டுக் கும் மேற்பட்ட தடவைகள் புலிகள் இயக்கம் மிகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.
இம்முயற்சிகளில் கரும்புலிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் உயிரிழந்திருந்தனர். மூன்றாவது தடவையாக 1998 செப்டெம்பர் மாதம் ‘ஓயாத அலைகள்-02’ நடவடிக்கை மூலம் கிளிநொச்சியைப் புலிகள் கைப்பற்றிருந்தனர்.
இந்தச் சண்டை மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றது. முதல்நாள் புலிகளின் தாக்குதல் அணிகளால் கைப்பற்றப்பட்டிருந்த இடங்கள் இரண்டாவது நாள் மீண்டும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
அப்போது தலைவருடைய பிரதான கட்டளை மையத்தில் நின்றிருந்த தமிழ்ச்செல்வனிடம் ஒரு முக்கியமான பணியைத் தலைவர் கொடுத்திருந்தாராம்.
அது என்னவெனில், தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தளபதிகளின் மனநிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து வருவதாகும்.
தமிழினி
தொடரும்..
(தொகுப்பு-கிபாஸ்கரன்- சுவிஸ்)
(ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் .1..2.3…4….5..6)
தமிழியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“: “கள்ள இன்பம்“ தேடும் தமிழ்த்தேசியவாதிகள்!
இத்தனை பெரிய போராட்டத்தை நடத்தியும் ஏன் அது தோல்வியில் முடிந்தது? இவ்வளவு இழப்புகளும் ஏன் மதிப்பற்றுப் போயின? போராட்டத்தில் என்ன நடந்தது? யார் இதற்கெல்லாம் பொறுப்பாளிகள்?
மிகக் கடினமான ஒரு போராட்டத்துக்காக அதிகளவில் இழப்புகளைச் சந்தித்த மக்கள், ஏன் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பதிலாக தோல்வியையும் துயரத்தையும் பெற்றார்கள்?
உண்மையில் என்ன நடந்தது? என்ற விசயங்களைத் தன்னுடைய அறிதல்களின் வழியாகவும், தன்னுடைய அனுபவங்களின் துணைகொண்டும் விளக்க முற்படுகிறது.
அவரே சொல்வதைப்போல, “இது எமது போராட்டத்தின் முழுமையான வரலாறு அல்ல. …. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் என் தொண்டைக்குள் அடைத்துக் கிடக்கும் உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.
ஒரு இனத்தின் அரசியல் அபிலாஷைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக்கொண்ட எமது போராட்டமானது, இலட்சோபலட்சம் உயிர்களின் தியாகத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டது.
இறுதியில் அதன் போக்கிடம் ஏனிப்படிப் புச்சியமானது? உலகமே அதிர்ந்து போய்க் கேட்டுக்கொண்ட கேள்வி இது“ என்பதற்கு தன்னளவில் விடைகாணுவதற்கும் அந்த விடையை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் தமிழினி முயன்றிருக்கிறார்.
இப்பொழுது உருவாகியிருக்கும் சர்ச்சை நாம் மேலே பார்த்தவாறு “இந்தப் புத்தகம் உண்மையில்லை“ எனவும் “இடைச்செருகல்கள் செய்யப்பட்டுள்ளன“ என்றும் “புலிகளின் மீது அபகீர்த்தியை உண்டாக்குவதற்காக தமிழினியின் பெயரில் இந்தப் புத்தகத்தில் சில விசயங்கள் வேண்டுமென்றே எழுதப்பட்டுள்ளன“ எனவும் சொல்லப்பட்டதிலிருந்தே உருவானது.
இதற்கெல்லாம் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஒரு சம்பவம் துரதிருஷ்டமாக அமைந்து விட்டது.
இந்தப் புத்தகம் இலங்கையில் ஒரு பதிப்பாகவும் இந்தியாவில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் இன்னொரு பதிப்பாகவும் சமகாலத்தில் வெளியானது.
இரண்டு பதிப்பிலும் புத்தகத்தின் உள்ளடக்கம் ஒன்றாகவே உள்ளது. அட்டைப்படத்தில் மட்டும் சில மாற்றங்கள் உள்ளன.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்திலுள்ள அட்டைப்படத்தின் பின் பக்கமாக உள்ள குறிப்பை எழுதியவர் தமிழினி என உணரக்கூடியதாக அமைந்த குறிப்பானது பிரேமா ரேவதி என்பவரால் எழுதப்பட்டது.
அதைத் தன்னுடைய புத்தகத்தில் பின்னட்டைக்குறிப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழினி தேர்வு செய்து வைத்திருந்திருக்கிறார்.
ஆனால் தமிழினி இறந்த பின்னர் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டதால் இதைப்பற்றிய சரியான விவரத்துடன் பதிப்புக்குக் கொடுக்க முடியவில்லை அவருடைய கணவரால்.
இதனால் அந்தக் குறிப்பு தமிழினியின் பெயரிலேயே அச்சாகி விட்டது. அந்தக் குறிப்புக்கும் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.
பதிலாக அந்தக் குறிப்பு பெண்போராளிப் புலிப்பெண்களைப்பற்றிய வரலாற்று நோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு விமர்சனத்தின் முக்கியமான பகுதி. அதைத் தன்னுடைய புத்தத்தின் – சிந்தனையின் பொருத்தம் கருதி தமிழினி தேர்வு செய்து வைத்திருந்திருக்கிறார்.
இதைப் பிரேமா ரேவதி சுட்டிக்காட்டியதை அடுத்து இதைப்பற்றிய விளக்கத்தை ஜெயக்குமாரனும் காலச்சுவடு பதிப்பகத்தின் இயக்குநர் கண்ணனும் அளித்திருக்கிறார்கள்.
இப்படி நேர்ந்த தவற்றினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, புத்தகத்தையும் புத்தகத்தை வெளியிட்ட கணவரையும் பதிப்பாளரையும் பின்னி எடுக்க முற்படுகிறார்கள் சிலர்.
உண்மையில் என்ன நடந்தது என்ற விளக்கத்தை உரியவர்கள் பொதுவெளியில் அளித்த பின்னும் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது உண்மைகளை எதிர்கொள்ளத் திராணியற்ற நிலையிலிருந்தே ஏற்படுகிறது. தாங்கள் விரும்பும் ஒன்றை, அது பொய்யாக இருந்தாலும் அதை நிறுவி விடவே முயற்சிக்கின்றனர்.
இவர்கள் மலத்தை அமுது என்றெண்ணி அதையே உண்டு வாழ விரும்புகிறார்கள். விசத்தை அமுதமென்று ஏற்றுக்கொள்கிறார்கள். இது வரலாற்றுக்கும் வாழ்வுக்கும் நேரெதிரானதாகும்.
இது ஏன்? உண்மைகளைப் பேசுவது தமது அரசியல் இருப்புக்கு பாதகமானது என்று கருதுவதன் விளைவே இது.
நடந்தவைகளை எழுதுவதும், பேசுவதும் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பது பற்றி இவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
நடந்தவைகளைப் பற்றி எழுதுவதையும், பேசுவதையும் விவாதிப்பதையும் தடுப்பதன் மூலம் தாம் எதிர்காலத்தில் நடக்கவுள்ள போராட்டத்திற்கு துரோகம் செய்கின்றோம் என்பதைப் பற்றி இந்தத் தரப்பு கவலைப்படவில்லை.
பதிலாகத் தமது அரசியல் இருப்புப் பற்றி மட்டுமே அது கவலைப்படுகிறது. இதனால் உண்மைகளையும் படிப்பினைகளையும் எழுதுபவர்களை எந்த அளவிற்கும் கேவலப்படுத்துவதற்கு அது தயாராக இருக்கிறது.
எழுதுபவர்களையும் உண்மைகளை உரைப்போரையும் அது துரோகி என்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், அவர்கள் அதை எழுதவே இல்லை என்றும் சொல்லி விடுகிறது.
ஆனால், முப்பது ஆண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டம் மிகப் பெரிய அழிவுகளை தந்து விட்டதன் பின்னர், நடந்த நிகழ்வுகள், சரி மற்றும் தவறுகள், அறம் சார்ந்தவை, சாரதவை பற்றிய ஆழமான கற்கைகளை மேற்கொள்ளாமல் தீவிரம் மிக்க போராட்டங்களில் தமிழ் மக்கள் இறங்கப் போவது இல்லை.
போராட்டங்களைச் சரியாக நடத்தவும் முடியாது. படிப்பினைகளையும் உண்மைகளையும் திறந்த மனதுடன் வரவேற்கும்போதே வரலாறும் நிகழ்காலமும் செழுமை அடையும். அந்தச் செழுமையிலிருந்தே எதிர்காலத்தைப் பலமாக அமைக்க முடியும்.
முப்பது ஆண்டு காலப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள், நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்று எல்லோரிடம் இருந்தும் தமிழ் மக்கள் பலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.
அவர்கள் வெளிப்படையாக நடந்தவைகளை எழுத வேண்டும், பேச வேண்டும்.அதன் அடிப்படையில் நடந்தவைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடத்தி, அதில் இருந்து பெறுகின்ற கற்கைகளின் அடிப்படையிலே தமது அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் தயாராவார்கள் என்பதுதான் அது.
அதுதான் அவசியமானதும் கூட. இதற்கான அடிப்படையாகவே தன் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு போராட்டத்தை மறுபார்வை செய்யும் தமிழினியின் பங்களிப்பு முக்கியமாகிறது. தமிழினியைப் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமாக அமைய வேண்டும்.
தமிழினி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். பரந்தன் இந்து ம.வியில் கல்வி கற்றவர். பாடசாலைக் காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்.
ஆரம்பத்தில் போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களையும் கொண்டவர். தமிழினியின் குடும்பம் மிக வறிய பொருளாதார நிலையைக் கொண்டது. அவருடைய இறுதி நிகழ்வுகளை நடத்தக் கூடிய வீட்டு வசதியைக்கூட கொண்டிருக்காத குடும்பம்.
இதேவேளை தமிழினியைப்போல அவருடைய இன்னொரு தங்கையும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியாகப் போராளி போர்க்களத்தில் சாவினைத் தழுவிக் கொண்டவர்.
இப்படியான பங்களிப்பைக் கொண்ட தமிழினி தான் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலேயே இந்தப் புத்தத்தை எழுதித் தந்திருப்பது தமிழர்களுக்குக் கிடைத்த கொடையாகும்.
இந்தப் புத்தகம் தமிழ்ச்சூழலில் எதிர்மறையான அடையாளத்தையும் பிம்பத்தையும் தனக்குத் தரும் என்று அவர் தெரிந்தே வைத்திருந்தார்.
இதைப்பற்றிக் கூட அவர் தன்னுடன் உரையாடியவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், போராளியாக இருந்தபோது அவர் எப்படி ஓர்மமாகவும் விடுதலையைப் பெற வேண்டும் என்பதில் விசுவாசமாகவும் இருந்தாரோ அதே அளவுக்கு, ஓர்மமாகவும் துணிச்சலாகவும் இருந்து கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
இது அவரை எப்பொழுதும் ஒரு போராளியாகவே அடையாளம் காண வைக்கிறது.
இதனால் தமிழினியின் இந்த நூல் தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றுக்கும் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கும் முக்கியமான ஒரு பங்களிப்பாகும்.
ஆனால் இதை உய்த்துணரக் கூடிய நிலையில் தமிழ் அறிவுச் சூழலும் இல்லை. தமிழ் அரசியற் சூழலும் இல்லை. ஒரு காலம் மகிமைக்குரிய போராளியாக கொண்டாடப்பட்ட தமிழினியையும் அவர் முன்னிறுத்தும் அரசியல் உண்மைகளையும் காண மறுக்கும் தமிழ் அரசியற் சூழலையும் தமிழ் அறிவுச் சூழலையும் என்னவென்று சொல்வது?
தமிழ் அறிவியலும் அரசியலும் இன்னும் தடுமாற்றங்களிலும் பின்னோக்கிய திசையிலும் இருப்பதன் விளைவுகளே இதுவாகும்.
இந்த நூலைப்படிப்பதற்கு ஒவ்வொருவரும் பெரிய ஆர்வத்தோடிருக்கிறார்கள். பலரும் இந்தப் புத்தகத்தைத் தேடித்திரிகிறார்கள்.
ஆனால் இதை வெளிப்படையாகச் செய்யும் துணிச்சல் பலருக்கும் இல்லை. இவர்கள் கள்ளத்தனமாகவே படிக்கவும் அறியவும் விரும்புகிறார்கள்.
இன்பத்தை ருசிக்கவும் அனுபவிக்கவும் கள்ள உறவை வைத்துக் கொள்ளும் கூட்டம் அதைப் பகிரங்க வெளியில் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அதன் தொடர்ச்சியே இது. இது எவ்வளவு கேவலமானது? உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற மனம் எப்படியெல்லாம் நாடமாடுகிறது என்று பார்த்தீர்களா?
ஒரு பக்கத்தில் தமிழினியின் புத்தகத்தைச் சந்தேகிக்கிறது. மறுபக்கத்தில் அதை அறிய விரும்புகிறது. இது தமிழினிக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கும் அநீதியல்ல.
முன்னர் ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, அற்புதன், டி.பி.எஸ். ஜெயராஜ், தராகி, சி. புஸ்பராஜா, சுகன், கற்சுறா போன்றோருக்கும் பின்னர், சாத்திரி எழுதிய ஆயுத எழுத்துக்கும் நிலாந்தனின் எழுத்துகளுக்கும் கருணாகரனின் கவிதைகளுக்கும் யோ. கர்ணனின் கதைகளுக்கும் தமிழ்க்கவியின் ஊழிக்காலம் நாவலுக்கும் நடந்ததே. இப்பொழுது தமிழினிக்கு.
ஆனால், பகுதி பகுதியாகப் பல உண்மைகள் வெளியாகிக் கொண்டேயிருக்கும். இதை யாராலும் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.
தொடரும்…
-தமிழினி-