தமிழர்களும் முஸ்லிம்களும் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோத்தபயவின் வாக்குகள் சரிந்து, எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் அதிகரித்துள்ளன. இதை இந்தியா கூர்ந்து கவனிக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று, முன்னாள் ராணுவ அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 2020-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @GotabayaR அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன்.— Narendra Modi (@narendramodi) 17 novembre 2019
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா என்றும் இருக்கும் என்பதை உணர்த்தத்தான், கோத்தபயவுக்கு தமிழிலில் வாழ்த்து சொல்லி பிரதமர் மோடி செக் வைத்துள்ளார்.
.சீனாவுக்கு நெருக்கமான குடும்பமாக அறியப்படும் ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியிருப்பதை இந்தியாவும் கவனிக்கத் தவறவில்லை. புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆங்கிலம், சிங்கள மொழிகளைத் தொடர்ந்து தமிழிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி-யின் தேசிய நிர்வாகி ஒருவர், “இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய வெற்றி பெற்றிருப்பது, இந்திய-இலங்கை வெளியுறவுக் கொள்கையில் சிறு தேக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சீனாவின் கனவுத் திட்டமான `பெல்ட் அன்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்துள்ள இலங்கை, கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாகப் பெற்று, ஏற்கெனவே கடன் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதில் 60 சதவிகிதம் கடன் சீனாவிடமிருந்து பெற்றதுதான்.
தற்போது துபாய், சிங்கப்பூருக்குப் போட்டியாக, கொழும்பு துறைமுகம் பகுதியில் சர்வதேச நிதி மையத்தை உருவாக்கும் திட்டத்துடன் 116 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகையில் சீனாவுக்கு இலங்கை அளித்துள்ளது. கடனிலிருந்து இலங்கையை மீட்பதுதான் கோத்தபய ராஜபக்சேவின் முதல் சவாலாக இருக்கும். நடந்து முடிந்த தேர்தலில், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் தென்பகுதி மாநிலங்களில் கோத்தபய அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழர்களும் முஸ்லீம்களும் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோத்தபயவின் வாக்குகள் சரிந்து, எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் அதிகரித்துள்ளன. இதை இந்தியா கூர்ந்து கவனிக்கிறது.
2009 போர்க்குற்றங்களில் தொடர்புடைய கோத்தபய இலங்கையின் புதிய அதிபராகியிருப்பதால், சிங்கள ஆதிக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறார், தமிழர்களுக்கான அங்கீகாரத்தை எப்படி வழங்கப்போகிறார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இதில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா என்றும் இருக்கும் என்பதை உணர்த்தத்தான், கோத்தபயவுக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி பிரதமர் மோடி செக் வைத்துள்ளார்.
தமிழர்களின் அரசியல், கலாசாரம், மொழி சார்ந்த உரிமையில் இலங்கை அரசாங்கம் வாலாட்ட நினைத்தால், இந்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காது என்பதுதான் மோடி மறைமுகமாக அனுப்பியுள்ள மெசேஜ்” என்றார்.
வரும் 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், இலங்கை அரசியலில் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்றங்கள், இந்தியா-இலங்கை வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கிறது டெல்லி சோர்ஸ்.