சசிகலா சகாப்தம் ஆரம்பம்
1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின.
வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது.
ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த காட்சிகள் அனைத்தையும் உருமாற்றியது.
அந்தப் படுகொலைக்குப் பிறகு, இந்தியாவின் பார்வை தமிழகத்தின் மீது பதற்றத்துடன் படரத் தொடங்கியது; தேர்தல் கணக்குகள் தூள் தூளாயின; கருத்துக் கணிப்புகள் நொறுக்கித் தள்ளப்பட்டன.
அந்த ஒரு படுகொலை… தமிழக அரசியலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவை ஆட்சியதிகாரத்தில் கொண்டு போய் அமரவைத்தது;
ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில் முன்னுரைக்கு முடிவுரை எழுதிவிட்டு, அவரின் அத்தியாயங்களை ஆரம்பித்து வைத்தது; தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் சசிகலாவின் சகாப்தத்துக்குக் கொடியேற்றம் செய்து வைத்தது;
அடுத்து வந்த 5 ஆண்டுகளும், தமிழகம் துயரங்களுக்குள் மூழ்கடிப்பட்டு துன்பப்படுவதற்குக் காரணமாக மாறின; ‘மன்னார்குடி குடும்பம்’ என்றொரு புதிய உடைமை வர்க்கம் தமிழகத்தில் உருவாக வழிவகுத்துக் கொடுத்தது.
இப்படிப்பட்ட எல்லாப் பிழைகளுக்கும் காரணமாக அமைந்த அந்தப் படுகொலை… ராஜீவ் காந்தியின் படுகொலை.
1991 ஜனவரி 30-ம் தேதி தி.மு.க அரசாங்கம் கலைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்த ‘மெஜாரிட்டி’ அரசாங்கத்தை, தகுந்த காரணம் இல்லாமல் மத்திய அரசு கவிழ்த்தது.
ராஜீவ்-ஜெயலலிதா நிர்பந்தங்கள் மட்டுமே கருணாநிதியின் அரசாங்கத்தைக் காவு வாங்கின. தமிழகம் தேர்தல் கோலம் பூண்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மீட்டெடுத்த ஆட்சியதிகாரத்தை பாதியில் தோற்ற கருணாநிதி, அடிபட்ட புலியின் சினத்தோடு வலம் வந்தார்.
அவருடைய அரசாங்கம் நியாயமற்ற முறையில் கலைக்கப்பட்டதை தமிழகமும் கொஞ்சம் உணர்ந்தே இருந்தது. அதனால் தி.மு.க மேல் ஒரு அனுதாபமும், கருணாநிதியின் மேல் ஒரு பரிதாபமும் அப்போது தமிழக மக்களிடம் உருவாகியிருந்தது.
கடுமையான சூழ்நிலைகளுக்கு இடையிலேயே கட்சியையும் வளர்த்து, தன்னையும் வளர்த்துக் கொண்ட கருணாநிதிக்கு அது கூடுதல் தெம்பைக் கொடுத்தது.
‘டெல்லியிடம் தோற்ற அதிகாரத்தை தமிழகத்தில் வென்றே தீர வேண்டும்’ என்ற வெறியோடு தேர்தல் களத்தில் ஓடிக் கொண்டிருந்தார்.
சென்னை துறைமுகம் தொகுதியில் அவர் போட்டியிட்டார். ‘பல ஆண்டுகளாக எட்டாத தொலைவிலிருந்த முதல்வர் நாற்காலி, இப்போது எட்டிப் பிடிக்கும் தூரத்துக்குள் வந்துவிட்டது.
கொஞ்சம் முயன்றால் அதைத் தொட்டுவிடலாம்’ என்ற எண்ணத்தோடு ஜெயலலிதாவும் முதல்வர் நாற்காலியைக் குறிவைத்து தேர்தல் களத்தில் ஓடிக்கொண்டிருந்தார்.
பர்கூர், காங்கேயம் என்று இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார். அவரும் தேர்தல் வேலைகளில் கொஞ்சமும் சுணக்கம் காட்டவில்லை.
வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியாகப் பரிணமித்து முதல்முறையாகத் தேர்தல் களம் கண்டிருந்தது. அந்தக் காலத்தில், தேர்தல் பிரச்சாரங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் காலக்கெடு, நேரக்கெடு என்பதெல்லாம் கிடையாது.
அதனால், இரவு-பகல் என எந்நேரமும் ‘மைக் செட்டு’கள் பெரியோர்களே… தாய்மார்களே… என விடாது முழங்கிக்கொண்டே இருந்தன.
கோரப் படுகொலையும்… வீண் பழியும்!
1991 மே மாதம் 21-ம் தேதி ராஜீவ் காந்தி சென்னை வந்தார்.
அன்று ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரக்கூட்டம். அதற்கு மறுநாள்-மே 22ம் தேதி-கிருஷ்ணகிரியில் ஒரு பிரசாரக்கூட்டம். அதில், ராஜீவ்காந்தி, ஜெயலலிதா, மூப்பனார், ப.சிதம்பரம், வாழப்பாடி ராமமூர்த்தி ஒரே மேடையில் பேசுவதாகத் திட்டம்.
அதற்குமுன்பு கிருஷ்ணகிரியில் 15 கிராமங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்வதாக நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்காக மே 21-ம் தேதியே ஜெயலலிதா, சசிகலா, நடராசன் அங்குச் சென்றுவிட்டனர்.
கிருஷ்ணகிரியில் பிரம்மாண்ட மேடை தயாராகிக் கொண்டிருந்தது. சென்னையில் விதி வேறு மாதிரி ஒரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது. மே 21-ம் தேதி இரவு ராஜீவ் காந்தி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு தன் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, காரில் ஸ்ரீபெரும்புதூர் கிளம்பினார்.
ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை அடைந்ததும், ராஜீவ் காந்தி காரைவிட்டுக் கீழிறங்கி மேடை நோக்கி வேகமாகச் சென்றார்.
அவர் மேடைக்குப் போவதற்கு முன்பே, காதைக் கிழிக்கும் வெடிச் சத்தம் கேட்டது.
அதன்பிறகு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை. சுற்றிலும் புகை மண்டலம்; அலறல் சத்தம்; கருகல் மணம் என்று களேபரமான காட்சிகளாக இருந்தன. புகை மண்டலம் லேசாகக் கலைந்தபோது, மனித உடல்கள் சிதறிக் கிடந்தன.
ரத்தத் கறைகளும், ரத்தத் திட்டுகளும் சதைத் துணுக்குகளுமாய் அந்த இடம் பலி பீடத்தைப் போல் காட்சி அளித்தது.
ராஜீவ் காந்தியைக் காணவில்லை. மூப்பனார் ஓடி வந்து, கிழே கிடந்த உடல்களுக்குள் ராஜீவ் காந்தியின் உடலைத் தேட ஆரம்பித்தார்.
ராஜீவ் காந்தியும் அங்கு அடையாளம் தெரியாத அளவுக்கு சதைத் துண்டங்களாய்ச் சிதறிக் கிடந்தார்.
இந்தியாவின் எதிர்காலப் பிரதமர், தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில், பனங்காடுகளுக்கு மத்தியில் உடல் சிதறிக் கிடந்தார்.
அந்தக் கோரக் கட்சிகள் கலர் படங்களாக எடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.
அதோடு சேர்த்து, ‘ஆட்சியைக் கலைத்த ஆத்திரத்தில் தி.மு.கதான் விடுதலைப்புலிகளை வைத்து ராஜீவ் காந்தியைத் தீர்த்துக்கட்டியது’ என்ற வதந்தியும் தீயாய்ப் பரப்பப்பட்டது.
வதந்தியை யார் பரப்பி இருப்பார்கள் என்ற ஆராய்சிக்குள் போகத் தேவையில்லை. ஆனால், தேர்தலுக்கு ஓட்டுக் கேட்பதை விட்டுவிட்டு, இந்த வதந்திக்கு விளக்கம் சொல்வதிலேயே தி.மு.க-வுக்கு நேரம் விரயமானது.
அழுகை… கண்ணீர்… அனுதாப சுனாமி!
ரோஜாப்பூ நிறத்தில் இருந்த ராஜீவ் காந்தி, சதைத் துணுக்குகளாய் சிதறிக் கிடந்த புகைப்படங்களும், பால்வடியும் சோக முகத்தோடு ராஜீவ் காந்தியின் சிதைக்கு ராகுல் காந்தி தீ மூட்டும் காட்சிகளும் இந்தியாவை உலுக்கியது.
தமிழகத்தை குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. அதில் தமிழகம் முழுவதும் ஒரு அனுதாபம் உருவானது.
அதைச் சாதரண அனுதாபம் என்று கணக்கிட முடியாது; அனுதாப அலை என்றும் எழுதிவிட முடியாது; சுனாமிப் பேரலையைப் போல் அந்த அனுதாபம் தமிழகத்தை வாரிச் சுருட்டி வைத்திருந்தது.
அந்த அனுதாபச் சுனாமியில், தமிழகம் போட்டு வைத்திருந்த தேர்தல் கணக்குகள் எல்லாம் துவம்சமாகிப் போனது.
ஆட்சியை இழந்ததால் தி.மு.க மேல் இருந்த அனுதாபம் அடித்துக் கொண்டு போனது.
அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 168 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க 164 தொகுதிகளை வென்றெடுத்தது. 65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளைக் கைப்பற்றியது.
பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா, இரண்டிலுமே வெற்றி பெற்றார். ஆனால், 176 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க மொத்தமே இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் கைப்பற்றியது.
ஜெயலலிதா என்ற ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க என்ற மாபெரும் கட்சியும் மொத்தமே இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றிருந்தது.
தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற அந்த இரண்டு வேட்பாளர்கள், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூரில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டுமே.
தி.மு.க கூட்டணியில் இருந்து 22 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் சார்பில் திருவாரூரில் போட்டியிட்ட தம்புசாமி வெற்றி பெற்றிருந்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட பழனிச்சாமி மட்டும் வெற்றி பெற்றிருந்தார்.
தாயக மறுமலர்ச்சி கழகம் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசு அறந்தாங்கியிலும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் சாத்தூரிலும் வெற்றி பெற்றிருந்தனர். பட்டாளி மக்கள் கட்சி 194 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், அந்தக் கட்சியின் சார்பில் பண்ரூட்டியில் போட்டியிட்ட பண்ரூட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றிருந்தார். ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குமாரதாஸ், கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
விருதுநகரில் இந்தியன் காங்கிரஸ் என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராமசாமி என்பவர் வெற்றி பெற்றிருந்தார். சுயேட்சையாகப் போட்டியிட்டவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி மட்டும் வெற்றி பெற்றிருந்தார்.
அசுர பலத்துடன் அ.தி.மு.க ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார்.
“ஜெ.ஜெயலலிதாவாகிய நான்…” என்று உறுதிமொழியேற்றுப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
காங்கேயம் தொகுதியில் பெற்ற வெற்றியை ரத்து செய்தார். அந்தத் தொகுதியில் ஆர்.எம்.வீரப்பனை போட்டியிட வைத்தார்.
அதற்கு முன்பே, அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். ஆரம்பம் நான்றாகத்தான் இருந்தது.
ஆனால், எதிர்பாராமல் கிடைத்த அசுரத்தனமான வெற்றி… பலவீனமான எதிர்கட்சிகள்… சட்டமன்றத்தில் எதிர்த்துக் கேள்வி கேட்க ஆள் இல்லாத நிலை… ஜெயலலிதாவின் கண்ணை மறைத்தது.
“இனி ஜெயலலிதா தான் தமிழகம்… தமிழகம்தான் ஜெயலலிதா” என தனக்குத்தானே அவர் நினைத்துக் கொண்டார். ஜெயலலிதா சகாப்தம் தொடங்கியது. அதே நேரத்தில் நடராசனும் சசிகலாவும், “இனி சசிகலாதான் ஜெயலலிதா… ஜெயலலிதாதான் சசிகலா” என்றும் நினைக்க ஆரம்பித்தனர். அங்கிருந்து சசிகலா சகாப்தமும் ஆரம்பமானது.
கதை தொடரும்…