பெங்களூரு: இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, நிலாவில் அடுத்தகட்ட ஆய்வு பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தனர்.
இந்த விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.
இந்த 3 பகுதிகளிலும் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை சுமந்து கொண்டு சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணுக்கு புறப்பட்டது.
கடந்த 2-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அமைப்பு தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
அதன்பிறகு விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்தது. 2 தடவை விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டு நிலவுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.
நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.