மூன்றரை வயதுச் சிறுமியொருவரை, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சிறுமியின் மாமா முறை உறவினரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி உத்தரவிட்ட சம்பவமொன்று, நேற்று (9) இடம்பெற்றது.
மாத்தளை – ஓவிலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதான திருமணமாகாத ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து காணாமற்போன மேற்படிச் சிறுமியைத் தேடிச்சென்ற போது, தேயிலைத் தோட்டமொன்றில், ஆடைகள் களையப்பட்ட நிலையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்தே, குறித்த சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளாரென்பதை அறிந்த உறவினர்களும் பிரதேசவாசிகளும், சம்பவத்துக்குக் காரணமாக சந்தேகநபரைப் பிடித்துக் கடுமையாகத் தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்தே, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைகளுக்காக, மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனக் கூறிய மாத்தளை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.