புத்தர் தான் என் குரு. சீடனாக இருப்பது ஓர் அற்புதமான அனுபவம்’ என்ற காஸ்யபர்.
புத்தரிடம் சீடனாக இருந்த மகா காஸ்யபன் ஞானம் பெற்று விட்டார். இதையடுத்து அவரை, உலகம் முழுவதும் சுற்ற அனுப்பி வைக்க எண்ணினார் புத்தர். தனது எண்ணத்தை கூறுவதற்காக காஸ்யபனை அழைத்தார்.
‘காஸ்யபா! நீ உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும். இப்போதே புறப்படு. ஞான தாகம் கொண்டவர்களிடம் போய் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டு. உனக்கு கிடைப்பதை, அனைவருக்கும் பகிர்ந்து கொடு. ஞானத்தை பரப்பு’ என்றார் புத்தர்.
காஸ்யபரோ மறுப்பு தெரிவித்தார்.
‘குருவே! இது உங்கள் கடைசிப்பிறவி. நான் உங்களை விட்டு பிரிந்தால், உங்கள் திருவடிகளைத் தொட்டு வணங்க முடியாமல் போய்விடும். உங்களைத் தரிசிக்காமல் என்னால் இருக்க முடியாது’ என்றார்.
புத்தர், காஸ்யபரை சமாதானப்படுத்தினார்.
‘காஸ்யபா! நீ இதை செய்துதான் ஆக வேண்டும். எல்லோருடைய ஞான தாகத்தையும் நான் ஒருவனே, நேரில் சென்று தீர்க்க முடியுமா? என்னுடைய பங்கை நீயும் கொஞ்சம் பிரித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நான் உன்னுடனேயே இருப்பேன். புறப்படு’ என்று கூறினார்.
‘நான் கூறும் இரண்டு நிபந்தனைகளுக்கு தாங்கள் ஒப்புக் கொண்டால், நான் இங்கிருந்து புறப்படுகிறேன்’ என்றார் காஸ்யபர்.
புத்தர் என்ன ஏதென்று கேட்கும் முன்பாக அவரே தொடர்ந்தார்.
‘ஒன்று– எனக்குத் தெரியாமல் நீங்கள் உயிர்விடக் கூடாது. அந்த வேளையில் நான் உங்களுடன் இருக்க வேண்டும். இரண்டு– நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.’
புத்தருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ‘என்னப்பா இது! நீ சொல்வது சாத்தியமான ஒன்றா?. நீ வரும் வரை நான் மரணத்தைத் தள்ளிப்போட முடியுமா? மரணத்திடம், காத்திருக்கும்படி கெஞ்ச முடியுமா?. என்னை சங்கடத்தில் ஆழ்த்தாதே’ என்றார்.
காஸ்யபர் விடுவதாக இல்லை. ‘அப்படியானால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ என்றார் விடாப்பிடியாக. வேறு வழியின்றி புத்தர், காஸ்யபரின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து காஸ்யபர் அங்கிருந்து புறப்பட்டார். புத்தரும், தாம் செல்லும் இடங்கள் பற்றி அவருக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார்.
காஸ்யபர் காலையும், மாலையும் புத்தர் இருக்கும் திசை நோக்கி மண்ணில் விழுந்து வணங்கினார்.
இதைக் கண்ட மக்கள் வியப்படைந்தனர். அவரிடம் மக்களின் கேள்வி இதுவாக இருந்தது. ‘சுவாமி! தாங்களே ஒரு குரு. அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் ஒரு சீடனைப் போல குரு வணக்கம் செய்கிறீர்கள்’ என்றனர்.
‘புத்தர் தான் என் குரு. அவர் இந்த உலகில் உயிர் தாங்கி இருக்கும் வரை, அவரே என் குரு. சீடனாக இருப்பது என்பது, குரு என்னும் மரத்தின் நிழலில் இருப்பதைப் போல. குருவாக மாறிவிடும் போது, வெயிலில் இருப்பதுபோல ஆகிவிடும். சீடனாக இருப்பது ஓர் அற்புதமான அனுபவம்’ என்றார் காஸ்யபர்.
இதற்கிடையில் புத்தரின் இறுதிநாள் வந்தது. தனது பிரதான சீடனான ஆனந்தனை அழைத்த புத்தர், ‘காஸ்யபனுக்கு தகவல் அனுப்புங்கள்.
தாமதிக்கும்படி மரணத்திடம் கெஞ்சுவது என்பது என்னால் ஆகாதது. அப்படி யாரிடமும் கெஞ்சி எனக்குப் பழக்கமில்லை. என்னை அந்த சங்கடத்திற்குள் தள்ளிவிடாதீர்கள்’ என்றார். காஸ்யபருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அவரும் வந்து சேர்ந்து விட்டார்.
புத்தர் மகிழ்ந்தார். ‘நீ என்னை சங்கடத்தில் மாட்டிவிடமாட்டாய் என்று எனக்கு தெரியும். மரணமே.. இப்போது நீ வரலாம்’ என்றார் புத்தர். உன்னத சீடரான காஸ்யபரின் மடியில் புத்தரின் உயிர் பிரிந்தது.
ஆயிரக்கணக்கான சீடர்கள் இருக்க.. ஏன் ஆனந்தன், சாரிபுத்தன் போன்ற சிறப்பான சீடர்கள் இருக்க மகா காஸ்யபருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க என்ன காரணம்? என்று அங்கிருந்த பலருக்கும் கேள்வி எழுந்தது.
அதை உணர்ந்தவராக பதிலளிக்கத் தொடங்கினார் சாரிபுத்தன்.
‘ஞானம் பெற்று குருவாக மாறி வெளியில் சென்றவர்களில், மகா காஸ்யபர் ஒருவர் மட்டுமே சீடனாகவே இருந்தார்.
வெளியில் சென்ற பலரும் குருவாக மாறி, அவர்களின் குருவைப் பிரிந்ததும், அவரை மறந்து போனார்கள். காஸ்யபர், கடைசி வரை சீடராகவே இருந்ததால் தான் அவருக்கு இந்த பாக்கியம் கிடைத்தது’ என்று விளக்கினார்.
ஆம்! இது ஒரு சீடனுக்கு கிடைத்த மரியாதை.