சென்னை அயனாவரத்தில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜெபசீலனை வழிமறித்த மர்மக்கும்பல் அவரைக் கொலை செய்தது. மகள் கழுத்தில் தாலி ஏறிய நிலையில் அம்மா கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டதாக உறவினர்கள் சோகத்துடன் கூறினர்.
சென்னை அயனாவரம் திக்காகுளத்தைச் சேர்ந்தவர் ஜெபசீலன் (48). ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி பிரிசில்லா. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகள் ராணிக்கு கடந்த 10-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சி மீஞ்சூரில் கடந்த 13-ம் தேதி நடந்தது. ஜெபசீலனும் அவரின் மனைவியும் மட்டும் பைக்கில் மீஞ்சூருக்குப் புறப்பட்டனர்.
மற்றவர்கள் கார், வேனில் மீஞ்சூருக்குச் சென்றனர். பைக்கை ஜெபசீலன் ஸ்டார்ட் செய்தபோது அது, ஸ்டார்ட் ஆகவில்லை.
இதனால் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவரிடமிருந்து பைக்கை வாங்கிக்கொண்டு ஜெபசீலனும் அவரின் மனைவியும் கிளம்பினர். அப்போது, ஜெபசீலனின் பைக்கை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். அதை பிரிசில்லா தடுத்தார். அதனால் அவருக்கும் வெட்டு விழுந்தது.
ஜெபசீலனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது அந்தக் கும்பல். மனைவி கண் முன்னால் ஜெபசீலன் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். ஜெபசீலனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரிசில்லாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த ஜெபசீலனின் மகள் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஜெபசீலன், அந்தப்பகுதியில் சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளார். சில மாதங்களுக்கு முன், அந்தப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கும் மாநகராட்சி தற்காலிக ஊழியர் வினோத்துக்கும் நடந்த திருமணம் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்தத் திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வினோத், டிரைவர் ஜெபசீலன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
ஜெபசீலன் கொலை செய்யப்பட அவரின் மனைவியின் கழுத்திலிருந்த தாலி இறங்கியுள்ளது.
இதனால் அவர், ஜெபசீலனின் மகள் திருமணத்தை தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்துவிட்டது. இதனால், வரவேற்பு நிகழ்ச்சியாவது தடுக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளார்.
வினோத் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஜெபசீலனை வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்லவிடாமல் தடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காகத்தான் வினோத்தின் நண்பர்கள் அவரைத் தடுத்துள்ளனர். அப்போதுதான் ஜெபசீலன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
ஜெபசீலனின் சடலம் பிரேதபரிசோதனைக்குப் பிறகு இன்று அவருக்கு இறுதி அஞ்சலி நடத்தப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஜெபசீலனின் உறவினர் ஒருவரிடம் பேசினோம். “ஜெபசீலன், ஆட்டோ சங்க தலைவராக இருந்தார். அதனால் அவரிடம் வரும் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பார்.
எந்தப் பிரச்னைக்கும் அவர் செல்ல மாட்டார். நல்ல மனிதர். சமூக அக்கறையோடு செயல்பட்டதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஜெபசீலனுக்கு எதிரிகளாக உருவாகினர்.
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆத்திரத்தில் வினோத், ஜெபசீலனை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஜெபசீலனின் மகளின் கழுத்தில் தாலி ஏறியுள்ளது.
ஆனால், ஜெபசீலனின் மனைவி கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டது. கணவரைக் காப்பாற்ற பிரிசில்லா, கடுமையாகப் போராடியுள்ளார்.
ஆனால், உதவிக்கு யாரும் வரவில்லை. திட்டம்போட்டு அவரைக் கொலை செய்துவிட்டனர். இந்தக்கொலையில் தொடர்பு உள்ளவர்களுக்கு காவல் துறையினர் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்றார்.
அயனாவரம் திக்காகுளத்தில் ஆட்டோ டிரைவர் ஜெபசீலனைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். எந்தநேரமும் சவாரிக்கு அவரை அழைத்தால் செல்வார். பலருக்கு உதவியும் செய்துள்ளார்.
அவருக்கு இப்படியொரு நிலைமையா என்று திக்காகுளம் தெருவில் உள்ளவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.