ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக மெச்சத்தக்க வகையில் பணியாற்றியவர், வசந்தகுமாரி. ஓய்வுக்காலத்தையும் பயனுள்ள வகையில் கழித்துவருகிறார். தற்போதைய செயல்பாடுகள் குறித்து வசந்தகுமாரியிடம் பேசினோம்.
“காலங்கள் வேகமா ஓடிட்டிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் ஓய்வு பெற்றேன். பிறகு என் பி.எஃப் (வருங்கால வைப்பு நிதி) பணத்தை முழுமையா என்னிடம் கொடுக்காம சிலர் வேதனைகளைக் கொடுத்தாங்க.
அந்தப் பணம் என் வாழ்வாதாரத்துக்கு ரொம்பவே முக்கியமானது. கடும் முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லை. பிறகு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இன்னும் எனக்குச் சாதகமான தீர்ப்பு வரலை. இது ஒரு பக்கம் போயிட்டிருக்கு.
வசந்தகுமாரி
ஓய்வுக்குப் பிறகு, சில கல்வி நிறுவனங்கள்ல ஓட்டுநர் வேலைக்குக் கூப்பிட்டாங்க. ஆனா, வயோதிகம்தான் சிக்கலை உண்டாக்குது. சர்க்கரை வியாதி, தலைச்சுற்றல், உடல் சோர்வு அதிகம் இருக்குது.
அதனால, எந்த வேலைக்கும் போகலை. பென்ஷன் பணம் 8,500 ரூபாய் வருது. அதைவெச்சுதான் இப்போ என் வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கிறேன்.
நாகர்கோவில் அருகேயுள்ள பாம்பன்விளை கிராமத்தில் வசிக்கிறேன். பழைய மாருதி சென் கார் என்கிட்ட இருக்கு.
அதில், எங்க ஊரிலுள்ள வயதானவர்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போவேன்; கடைகளுக்குக் கூட்டிட்டுப்போவேன்.
என் கார்லயும், ஸ்கூட்டியிலயும் ஆர்வமுள்ள இளம் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்குப் பயிற்சி கொடுக்கிறேன்.
இதெல்லாமே சமூக நோக்கத்துடன் இலவசமாகத்தான் செய்கிறேன்” என்கிற வசந்தகுமாரியின் மனதில் முந்தைய பணிச்சூழல் வேதனைகள் ஆறாத வடுவாகவே இருக்கிறது.
வசந்தகுமாரி
“அதையெல்லாம் எப்படிங்க மறக்க முடியும்? பணிக்காலத்துல மட்டுமல்ல, ஓய்வுக்குப் பிறகும்கூட பெண்களுக்குத் தொந்தரவுகள் நீண்டுகிட்டேதான் இருக்கு.
இதற்கு நானே ஓர் உதாரணம். ஆசியாவுலயே முதல் பெண் பேருந்து ஓட்டுநரா இருந்தாலும், என் பணியிடச் சூழல்ல ஏகப்பட்ட தொந்தரவுகளை எதிர்கொண்டேன்.
அதையெல்லாம் வெளிப்படையா சொல்ல சங்கடமா இருக்கு. `ஓட்டுநர் வேலைக்கு வந்தாச்சு. என்ன பிரச்னைகள் வந்தாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு கரை சேர்ந்தாகணும்’னு உறுதியா இருந்தேன்.
தாயில்லாத பெண்ணாக இளமைக் காலத்துல இருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தேன். அந்த மன உறுதியாலதான் எல்லா வேதனைகளையும் தைரியமாக எதிர்கொண்டேன்.
என் பிரச்னைகளை கனிவுடன் கேட்டதுடன், எனக்கு உதவியும் செய்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவங்க மறைவால் இப்போவரை நான் வருத்தப்படறேன்.
சென்னையில் அண்ணாநகரில் ஒரு பெரிய வீடு… கொடைக்கானலில் ஒரு எஸ்டேட்.. பேங்க் இல் சில நூறு கோடி வைப்பு தொகை.. அதுக்கு நீங்க அ.தி.மு.க கொன்செலார் ஆ இருக்கணும்…
என் பணிக்காலத்துலயே பெண்கள் பலரும் ஓட்டுநர்களாகப் பணியில் சேர்ந்தாங்க. ஆனா, சில காலங்களிலேயே அவங்களை ஆபீஸ் வேலைக்கு மாத்திட்டாங்க. இப்போ பெண் நடந்துநர்கள் அதிகம் இருக்காங்க.
ஆனா, எனக்குத் தெரிஞ்சு பெண் பேருந்து ஓட்டுநர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியலை. அந்நிலை மாறி, பெண்கள் பஸ் ஓட்டுநர்களாக சாதிக்கணும்.
நான் ஓட்டுநராக இருந்தப்போ, என் பஸ்ல பயணிச்ச பள்ளி மாணவர்கள் பலரும் இன்னைக்கு நல்ல நிலையில் இருக்காங்க.
அவங்க பலரும் என்னை அடிக்கடி பார்த்து பாராட்டுவாங்க. அதனால் ஓய்வுக்காலத்தையும் மகிழ்ச்சியுடன் கழிக்கிறேன்” என்கிற வசந்தகுமாரியின் முகம் பிரகாசிக்கிறது.
தற்போது 60 வயதாகும் வசந்தகுமாரி, மனதளவில் இன்னும் உறுதியாகவே இருக்கிறார். “இறுதிக்காலம் வரை என் மன உறுதி மட்டும் குறையாது. என் பலமே அதுதான்.
இப்போகூட என்னால முன்புபோல கம்பீரமா பஸ் ஓட்ட முடியும். மறுபடியும் பஸ் ஓட்டணும்னு ஆசை இருக்கு. அது நடந்தால் சந்தோஷப்படுவேன். ஒரு விஷயத்தைச் சொல்ல ஆசைப்படறேன்.
`இத்தனை வருஷம் வேலை பார்த்தியே… எங்களுக்கு என்ன சம்பாதிச்சு வெச்சே?’னு என் மகனும் மகளும் என்கிட்ட கேட்டிருக்காங்க.
அந்த அளவுக்குத்தான் என் வாழ்க்கை நிலை இருக்குது. ஆனா, பசங்களுக்குச் சம்பாதிச்சு வெக்கலையேனு எனக்குத் துளியளவும் வருத்தமில்லை. ஏன் சம்பாதிச்சு வெக்கணும்? எக்கச்சக்க பணிச்சூழல் பிரச்னைகளை எதிர்கொண்டு மனவேதனையுடன் வேலை செய்தேன்.
என்னைப்போல இன்னொரு பெண் பேருந்து ஓட்டுநர் இதுவரை தமிழ்நாட்டில் வரவேயில்லை. அப்படியிருந்தும்கூட என் பிள்ளைகளை நல்லா படிக்க வெச்சு ஆளாக்கியிருக்கேன். ஒரு தாயாக இதுக்குமேல நான் என்ன செய்யணும்? படிப்புக்கு ஏத்த வேலைக்குப் போய் பிள்ளைங்க தங்களோட சொந்தத் திறமையாலதான் வளரணும்.
அதைச் சொல்லித்தான் என் பிள்ளைகளை வளர்த்திருக்கேன். இனி அவங்க எதிர்காலத்தை அவங்களேதான் பார்த்துக்கணும். படிச்சு முடிச்சு தங்களோட சொந்தக் காலில் எல்லாப் பிள்ளைகளும் சாதிக்கணும்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் நான் சொல்ற அட்வைஸ் இதுதான்” – அழுத்தமான குரலில் உறுதியாகக் கூறுகிறார், வசந்தகுமாரி.