அன்பார்ந்த வாசகர்களே!
‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலின் மிக முக்கியமான அத்தியாயம் ஒன்றிற்குள் நுழைகிறோம். ராணுவத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகித்தவரும், பிற் காலத்தில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடலாம் எனக் கருதப்பட்டவருமான ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ புலிகளால் வைக்கப்பட்ட நிலக் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தார்.
இவரது மரணத்தின் பின்னணியில் முன்னைய ஜனாதிபதி பிரேமதாஸ செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக காணப்பட்டது. அதன் காரணமாக கொப்பேகடுவவின் மரணச் சடங்கில் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. அவ் விபரங்களே தற்போது தொடர்கின்றன.
ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ
1992 ம் ஆண்டு என்பது வன்முறையின் உச்சத்தை எட்டிய காலமாகும். நாட்டின் எதிர் காலம் என்னவாகலாம்? என்ற ஏக்கம் நிரம்பியதாக அமைந்திருந்தது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அறந்தலாவ இற்கும் அம்பாறைக்கும் இடையே பயணித்தவர்கள் நிலக் கண்ணி வெடி காரணமாக 10 பயணிகள் இறந்தும் 23 பேர் காயமடைந்த செய்தியுடனேயே அந்த ஆண்டு ஆரம்பித்தது.
பெப்ரவரி, மார்ச் மாதங்களில் சற்று அமைதி காணப்பட்ட போதிலும் ஏப்ரல் 10ம் திகதி மகாரகம பகுதியிலிருந்த இளைஞர் கவுன்சில் தாக்கப்பட்டு அங்கிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 23 பேர் காயமடைந்தனர்.
கொழும்பிலுள்ள மருதானையில் மோட்டார் வாகனத்திலிருந்த குண்டு வெடித்ததில் 8 பொதுமக்கள் மரணமடைந்து 23பேர் காயமடைந்தனர். அம்பாறையில் பஸ் வண்டிக்குள்ளிருந்த குண்டு வெடித்ததில் 28பேர் மரணமாகி 26பேர் காணமடைந்தனர்.
முஸ்லீம் மக்களுக்கெதிரான தாக்குதல்களும் தொடர்ந்தன. பொலனறுவ மாவட்டத்திலுள்ள அலிச்சிபத்தன, கரபொல, முத்துகல ஆகிய பகுதிகளில் வாழ்ந்த 130 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 71 பேர் காயமடைந்தனர்.
இவ்வாறு மரணங்கள் தொடர்ந்த வேளையில் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதை இந்தியா தவிர்த்துக் கொண்டது.
ராஜிவ் காந்தி மரணித்த முதலாவது ஆண்டு நிறைவு அண்மிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.
இந்தியாவின் பிரபலமிக்க குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை பிரபாகரன் தாக்கியது மிகவும் தாக்கத்தை அளித்திருந்தது.
இதே செயலை ராணுவ அணி வகுப்பின் போது கடற்படை அதிகாரி ராஜிவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய வேளையில் இவ்வாறான பாரதூரமான விளைவு ஏற்பட்டிருந்தால் இதைவிடப் பலமான விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
இருப்பினும் பிரதமரின் மரணம் மட்டுமல்ல, 1155 இந்திய ராணுவ ஜவான்களின் மரணங்கள், காயப்பட்டோர், காணாமல் போனோர் என வகை, தொகை அற்று நடைபெற்ற சம்பவங்களுக்கெல்லாம் பதிலளிக்க இந்தியா தயாராகியதை அத் தடைச் செய்தி உறுதி செய்தது.
இருப்பினும் மத்திய அரசின் தடை தமிழகத்தில் எதிர்பார்த்த பிரகாரம் ஆர்ப்பாட்டங்களாக மாற்றமடைந்திருந்தன.
1992ம் ஆண்டின் நடுப்பகுதியில் அதாவது யூலை 15ம் திகதி காத்தான்குடியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ் வண்டி தாக்கப்பட்டு 19 பொதுமக்கள் மரணித்ததோடு, 7 பேர் காணமடைந்தனர்.
அடுத்த 6 நாட்களின் பின் அதாவது யூலை 21ம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற புகையிரதம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பறங்கியாமடு என்ற இடத்தில் தடுக்கப்பட்டு சகல பிரயாணிகளும் இறக்கப்பட்டு முஸ்லீம்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
யூலை 30 திகதி திருகோணமலை பஸ் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 9 பயணிகள் இறந்ததோடு, நால்வர் காயமடைந்தனர்.
1992ம் ஆண்டில் இவ்வாறு பொதுமக்களின் மரணங்கள் தொடர்ந்த போது ராணுவ தரப்பிலும் ஒரு போதும் எதிர்பார்த்திராத இழப்பு ஏற்பட்டது.
1992ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி ராணுவ தலைமைக் காரியாலயத்திலுள்ள எனது தொலைபேசி மணி அலறியது.
அந்த அழைப்பை எடுத்தபோது நான் ஒரு போதும் எதிர்பார்த்திராத துக்க செய்தி கிடைத்தது.
அந்தச் செய்தியை ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணிபுரியும் எனது நீண்ட நாள் நண்பர் மேஜர் ஜெகத் அல்விஸ் தனது கவலை தோய்ந்த குரலில் வாகனம் ஒன்றில் ஊர்காவற்துறையை நோக்கிப் பயணித்திருந்த ஜெனரல் கொப்பேகடுவ, பிரிகேடியர் விமலரத்ன ஆகியோர் நிலக் கண்ணி வெடியில் சிக்கி விமலரத்ன ஸ்தலத்திலேயே மரணமாகி, கொப்பேகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தது.
ஆனால் அவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறினார். அவ் வாகனத்தில் பயணித்த கேணல் பாலிப்பனவும் மரணமடைந்ததாக தெரிவித்தார்.
இச் செய்தி என்னைத் தூக்கிவாரிப் போட்டது. கேணல் பாலிப்பனவும், நானும் ஒரே ராணுவப் பிரிவில் பணி புரிந்தோம். நான் அவரைத் தந்தை போல் கருதிச் செயற்பட்டேன்.
இச் செய்தியை அறிந்த நான் எனது உயர் அதிகாரிக்குத் தெரிவிப்பதற்காக பிரிகேடியர் திலக் பொன்னம்பெரும இன் காரியாலயத்திற்குச் சென்றேன். பொதுவாகவே முன் அறிவித்தல் இல்லாமல் அவரது காரயாலயத்திற்குச் செல்வதை அவர் விரும்புவதில்லை. அதில் அவர் மிகவும் கறாராகச் செயற்பட்டார்.
இருந்த போதிலும் நான் திடீரென அவரது காரியாலயத்திற்குள் சென்று செய்தியைத் தெரிவித்த போது அவர் செய்வதறியாமல் தடுமாறினார்.
அங்கு அப்போது அங்கு வந்திருந்த செயற்பாட்டு இயக்குநர் பிரிகேடியர் லக்கி அல்கமோ மேலும் விபரங்களைத் தருகையில் ஊர்காவற்துறையில் ராணுவ செயற்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்காக நிலமைகளை ஆராயவென அராலி முனையை நோக்கிச் சென்ற போதே நிலக் கண்ணி வெடியில் சிக்கியதாக தெரிவித்தார்.
அப்போது யாழ் நகரமும், அதனை அண்டிய பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதனைக் கைப்பற்றும் திட்டத்தின் காரணமாகவே அங்கு அவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் சென்ற வாகனத்தில் மேலும் சில அதிகாரிகள் சென்றுள்ளனர்.
வட பகுதி கடற்படைக் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் மோகன் ஜெயமகா, லெப்ரினன்ட் கேணல் ஸ்ரீபன், ஆரியரத்ன, பாலிப்பன, மேஜர் நலின் அல்விஸ், அஸங்கா லங்காதிலக, கடற்படையைச் சார்ந்த விஜேதுங்க ஆகியோரும் அத் தாக்குதலில் மரணமாகியுள்ளனர். அந்த வாகனத்தின் சாரதியும் மரணமானார். ஒருவரே பலத்த காயங்களுடன் தப்பினார். அவர் கோப்ரல் உபாலி என்பவராகும்.
இச் செய்தி குறித்து எம்மவரில் பலரும் அதிர்ச்சியில் இருந்த போது பிரிகேடியர் அல்கம உரத்த குரலில் பல உயர் அதிகாரிகளும் ஒரே வாகனத்தில் ஏன் பயணம் செய்தார்கள்? இவ்வாறு பயணம் செய்யக்கூடாது என எமக்கு உத்தரவு பிறப்பித்த அவர்கள் அவ் விதியை தாம் ஏன் மீறினார்கள்? எனக் கதறினார்.
அவரது குற்றச்சாட்டு ஒரு புறத்தில் எனது கோபத்தைக் கிளறிய போதிலும் மறு புறத்தில் அவர் எழுப்பிய கேள்வி நியாயமானது எனத் தோன்றியது. மேலும் சில நிமிடத்தில் ராணுவத்தில் மிகவும் மதிப்பு மிக்க புதல்வனான டென்சில் கொப்பேகடுவவும் காலமாகியதாக செய்தி கிடைத்தது.
அன்று மாலையில் மரணித்த சகலரது சடலங்களும் கொழும்பை வந்தடைந்தன.
அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த பல பொது மக்கள் அங்கு பெருமளவில் திரண்டிருந்தார்கள். வெள்ளைக் கொடிகள் பல இடங்களில் பறக்;க விடப்பட்டிருந்தன.
மேஜர் ஜெனரல் கொப்பேகடுவவின் பூத உடல் கொழும்பிலுள்ள அவரது இல்லத்திற்கும், பிரிகேடியர் விமலரத்தனவின் உடல் கடவத்தையிலுள்ள அவரது சகோதரரின் இல்லத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து தமது இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள். மரணத்தின் பின்னர் பதவி உயர்த்தப்பட்ட லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ இலங்கை ராணுவத்தினால் தரப்பட்ட மிக கண்ணியமான அதிகாரியாகும்.
உயர்ந்த சிந்தனையுள்ள ‘ராணுவக் கனவான்’ (Officer and a Gentleman).
வன்னிக் காட்டிற்குள் கடமை புரிந்த வேளையில் பல தடவை மலேரியா நோயினால் நான் பீடிக்கப்பட்டிருந்தேன். அவ் வேளைகளில் என்னை வீட்டிற்கு அனுப்பி குணமடைந்து திரும்பும்படி ஏற்பாடு செய்தவர் அவராகும்.
எம்மிடம் உயர்ந்த பட்ச கடமையை எதிர்பார்க்கும் அவர், அதே அளவு கருணையையும் செலுத்தினார். ராணுவ அதிகாரி என்ற வகையில் அதிக பட்ச கண்ணியமாக நடப்பதை அவர் உறுதி செய்தார்.
எல்லைப்புறக் கிராமங்களின் பாதுகாப்பில் அவர் அதிக அக்கறை செலுத்தியதால் கிராம மக்கள் அவரைத் தெய்வம் போல் எண்ணினார்கள். ராணுவத்திலுள்ள சிலருக்கு அவரின் மறைவு மகிழ்ச்சியை அளித்திருக்கலாம்.
ஆனால் பலர் கவலை அடைந்தார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது மிகப் பாரிய இழப்பு மட்டுமல்ல இத்தகைய நேர்மை நிறைந்த அதிகாரிகள் இருந்தமையால்தான் இந்த நூலை உயிருடன் வாழந்து எழுதும் வாய்ப்புக் கிட்டியது என்பேன்.
மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்கள் போரை நடத்துவதற்கான யதார்த்த மனிதர் எனக் குறிப்பிடுவேன். தோற்றத்தில் மிகக் கடுமையானவராகக் காணும் அவர் காட்டிற்குள் நின்று போர்ப் பயிற்சியை வழங்கும் உண்மை அதிகாரி அவராகும்.
அவரே ராணுவத்தின் ‘கஜபா’ பிரிவின் தந்தையாகும். 30 வருடகால பயங்கரவாதப் போரில் அவரது பணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அவரது தலைமையில் செயற்பட்ட இன்றைய பல இளம் அதிகாரிகள் அவரது பயிற்சியில் வளர்ந்தவர்களாகும். ஈழப் போரின் ஆரம்ப முதல் இறுதி வரை பணி புரிந்தவன் என்ற வகையில் ராணுவத்தினரைப் பயிற்றுவிப்பதில் அவரைப் போல் எவரும் இல்லை எனக் குறிப்பிடுவேன்.
அவரது செயல்கள் பலருக்கு முன்மாதிரியானவை. அவை எனது கடமையின் போதும், தனிப்பட்ட வாழ்விலும் என்றும் உதவுகின்றன. தலைமை வகிக்கும் பல பண்புகள் அவரிடம் நிறைய உண்டு.
ராணுவ அனுபவங்கள் அவரிடம் அதிகம் உள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவிற்கு மிகவும் நெருங்கிச் செயற்பட்டார். இவர்களது இழப்பு என்பது ராணவத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே பாரிய இழப்பாகும்.
இம் மரணங்களின் பின்னணியில் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ செயற்பட்டதாக குற்றங்கள் தெரிவிக்கப்பட்டன. இவற்றை என்னால் நம்ப முடியவில்லை.
ஆனாலும் பின்னர் காலங்களில் சில ராணுவ உயர் அதிகாரிகளை நோக்கி விரல்கள் சென்றன. இவை தேசத்திற்குப் பெரும் தொண்டு செய்வதாகக் கூறும் சில போலி அதிகாரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
இம் மரணங்களின் பின்னணியில் தாம் இருந்ததாக வெளிவந்த செய்திகளை நம்பி அஞ்சிய பிரேமதாஸ, அந்த அவப்பெயரைத் துடைக்க எண்ணி டம்புல்ல என்ற இடத்தில் கட்டப்பட்ட அரச வைத்தியசாலைக்கு ‘வீரர் டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலை’ எனவும், இரண்டு பாடசாலைகளுக்கு ‘வீரர் விஜய விமலரத்ன மகா வித்யாலயம், வீரர் மோகன் ஜயாமகா மகா வித்யாலயம்’ எனவும் பெயர் சூட்டினார்.
ஆனாலும் இச் செயல்கள் ஜனாதிபதி பிரேமதாஸ மீதான தாக்குதல்களை அதிகரிக்கவே செய்தன. இப் படுகொலைகளுக்கும் தமக்குமான தொடர்புகளை மூடி மறைக்கவே இம் முயற்சிகள் எனக் கூறத் தொடங்கினர்.
மிக விரைவாகவே வழமை போலவே இம் மாவீரர்களின் நினைவுகள் மக்களின் மனதிலிருந்து விரைவாகவே கலைந்தன. அவர்களின் நினைவுகளை உணர்த்த ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் வைத்தியசாலைக்கும், இரண்டு பாடசாலைகளுக்கும் அவர்களின் பெயர்களை வைத்த போதிலும் என்னைப் பொறுத்த வரையில் அச் சிறந்த மனிதர்களை நினைவு கூரும் வகையில் இந்தக் கிராமப் புறங்களைத் தேர்ந்தெடுக்காமல் பலரின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கலாம் என எண்ணுகிறேன்.
இருப்பினும் இந்த ராணுவ அதிகாரிகளின் மரணம் குறித்த சந்தேகங்கள் மக்கள் மனதில் தொடர்ந்து காணப்பட்டன. இதனால் ஜனாதிபதி பிரேமதாஸ மீது மக்கள் கொண்டிருந்த மதிப்புப் படிப்படியாக சரிந்தே சென்றது.
லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் இறுதிச் சடங்குகள் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
அவரது பூத உடலுக்கு மரியாதை செலுத்தவென பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர். அங்கிருந்த மக்கள் மத்தியில் கோபமும், கவலையும் படர்ந்திருந்தன.
இதனால் மரண ஊர்வலம் குழப்பங்களுடன் தொடர்ந்தது. பிரேமதாஸவிற்கு எதிராக மக்கள் பெரும் குரல் எழுப்பினர். இதனால் மக்கள் மத்தியில் படிப்படியாக அமைதி குலைந்ததால் பொலீசார் தலையிட நேர்ந்தது.
கண்ணீர் புகை பாவிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் கோபமடைந்தனர். இதனால் மிகவும் மரியாதை மிக்க இந்த அதிகாரிகளின் மரண ஊர்வலம் மிகவும் குழப்பம் நிறைந்திருந்தது.
தனது தேசத்திற்காக தனது வாழ்வையும், உயிரையும் அர்ப்பணித்த லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் மறைவு மக்களின் மனதில் கண்ணீரை வரவழைத்தது.
(ஏனையோரின் மரணச் சடங்குகள் எவ்வாறு இடம்பெற்றன?
(தொடரும் )
இலங்கை ராணுவத்திற்குள் ஊழல்!!: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-18) -வி.சிவலிங்கம்