ராஜிவ் எப்படியும் பிரசாரத்துக்காகத் தமிழகம் வருவார், வேலையை முடித்துவிடலாம் என்று சிவராசன் தீவிரமாக அதற்கான ஆயத்தங்களை அப்போது செய்யத் தொடங்கியிருந்தார்.
அப்போது பொட்டு அம்மானிடமிருந்து அவருக்கு ஒரு ரகசியச் செய்தி வந்தது. (அவர்கள் வயர்லெஸ் தொடர்பு வைத்திருந்தார்கள்.) நாம் இதை டெல்லியில் செய்ய முடியுமா? ஒரு வரி வினா. அதற்கு சிவராசன் அனுப்பிய பதில் ஒருவரி ‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கேயே முடியும்.’……
முன்னைய தொடரின் தொடர்ச்சி…
(ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு)
ஆனால் மேற்கொண்டு அது பற்றி ஏதும் விவாதிக்காமல், பொட்டு அம்மான் ஏப்ரல் இறுதியில் ஆதிரை என்னும் பெண்ணை, கனகசபாபதி என்னும் ஒரு வயதான மனிதருடன் இலங்கையிலிருந்து தமிழகத்தின் கோடியக்கரைக்கு அனுப்பி வைத்தார்.
ராஜிவைக் கொல்வதற்காக இந்திய மண்ணுக்கு வந்த முதல் தற்கொலைப் போராளி ஆதிரை என்கிற சோனியா (இயக்கப் பெயர்) தான். சுபாவும் தணுவும் பின்னால் வருகிறவர்களே.
ஆதிரையும் கனகசபாபதியும் கோடியக்கரையில் கால் வைத்ததும் சென்னையில் இருந்த சிவராசனுக்குப் பொட்டு அம்மான் அவர்கள் வந்திருக்கும் விவரத்தைச் சொல்லி, டெல்லியில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி உத்தரவிட்டார்.
இந்தியாவில் ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கான பொறுப்பு சிவராசனுடையது.
தமிழகத்தில் முடிக்கலாம் என்பது அவரது விருப்பம். ஆனால் பொட்டு அம்மானின் உத்தரவின்படிதான் அவர் நடந்துகொண்டாக வேண்டும்.
எனவே மேற்கொண்டு இது பற்றி விவாதிக்காமல் சிவராசன், ஆதிரையையும் கனகசபாபதியையும் சென்னைக்கு அழைத்து வந்து தாம்பரத்தில் இருந்த டாக்டர் கருணாகரன் என்பவர் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.
கையோடு விருகம்பாக்கத்தில் வசித்து வந்த சரவணன் என்கிற வாணன் என்ற ஒரு கடத்தல்காரர் மூலம் (இவர் ஒரு விடுதலைப் புலி அனுதாபி. சிவராசனுக்கு நன்கு பழக்கமானவர்) கனகசபாபதியை டெல்லிக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.
டெல்லியில் அவர்கள் முதலில் ஒரு வீடு எடுத்துத் தங்கவேண்டும். ஆதிரை ஹிந்தி படிக்க வந்த பெண் என்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும். அதற்காக எங்காவது வகுப்பில் சேரவேண்டும்.
இதற்கான உதவிகளை அங்கே வைகோவின் நண்பரான தியாகராஜன் என்பவர் செய்வார் என்று சொல்லி, தியாகராஜனின் முகவரியைக் கனகசபாபதியிடம் அளித்தார் சிவராசன்.
இந்தத் தியாகராஜன் என்பவர் வைகோவுக்கு மிகவும் வேண்டியவர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு ஹவுஸில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
(முக்கிய குறிப்பு: இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களுக்கு..: (தியாகராஜன் என்பவர் வைகோவுக்க மிகவும் நெருக்கமானவர் எனும் பொழுது.. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவது பற்றி வைகோவுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். வைகோ மட்டுமல்ல, நெடுமாறன், சுப்பிமணிய சுவாமி, சந்திரசுவாமி… என பலபேர் சம்பந்தப்பட்டுள்ளார்கள். ஆனால் அப்பாவிகள் மட்டுமே சிறையில் உள்ளார்கள். எல்லாம் ‘றோ’ மயம்)
…………………………………………………………………………………………………………………………………………………………………………………..
ஹ்யூமன் ரிஸோர்ஸ் மேனேஜ்மெண்ட் என்றொரு நிறுவனத்தை அங்கே நடத்தி வந்தவர்.
அதன்மூலம் நேபாளத்துக்கு நிறையப் பேரை வேலை வாங்கிக் கொடுத்து அனுப்புவது அவரது தொழில். (ராஜிவ் கொலையில் ஈடுபட்டவர்களில் மிக முக்கியமான சிலரைத் தவிர மற்ற அனைவரையும் நேபாளம் வழியே எங்காவது தப்பித்துப் போகச் சொல்லித்தான் புலித்தலைமை உத்தரவிட்டிருந்தது!
சிவராசன், முருகன், நளினி, சுபா நால்வரை மட்டுமே எப்படியாவது இலங்கைக்கு வரவழைக்கப் பார்த்தார்கள்.) முகவரியை வாங்கிக்கொண்டு கனகசபாபதி வாணனுடன் விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார்.
அங்கே தியாகராஜன் அவர்களை வரவேற்று, ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே உள்ள கிருஷ்ணா லாட்ஜில் தங்க வைத்தார். அங்கிருந்தபடி மோதி பாக்கில் ஒரு மருந்துக் கடையில் விசாரித்து, சாணக்கிய புரி அருகே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தார்கள். மூவாயிரம் ரூபாய் அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது.
வேலை செய்துகொண்டிருந்த அதே சமயம், தேர்தல் பிரசாரத்துக்காக ராஜிவ் காந்தி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டது.
மே 17 அந்த அறிவிப்பு வந்தது. எனவே, சிவராசனின் திட்டப்படிதான் காரியம் நடந்தாக வேண்டும். ஆதிரை அல்ல, ஏற்கெனவே தமிழகம் வந்துவிட்டிருந்த சுபாவும் தணுவும்தான்!
(மாலையுடன் தற்கொலைதாரி தனு, சிவராசன்)
தற்கொலை தாக்குதலுக்கு பின்பு தனு.
காணாமல் போய்விடுங்கள்!
மே 21ம் தேதி ராஜிவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூரில் வைத்துக் கொல்வது என்று முடிவு செய்ததுமே சிவராசன் ஒரு காரியம் செய்தார்.
திட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தமுள்ள, சம்பந்தம் ஏதுமில்லாவிட்டாலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாக உள்ள நபர்கள் அனைவரையும் சம்பவ தினத்தன்று சென்னையில் இருக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
நினைத்தபடி காரியம் முடிந்துவிட்ட பிறகு சிவராசன், சுபா, நளினி, முருகன், ஹரி பாபு தவிர மற்ற அத்தனை நேரடித் தொடர்பாளர்களும் நேபாளம் வழியே எங்காவது தப்பித்துச் சென்று விடவேண்டுமென்று திட்டம்.
அதற்கு டெல்லி தியாகராஜன் உதவி செய்வார். பாஸ்போர்ட் போன்ற சடங்குகளுக்கு, தம்பியண்ணா என்பவர் உதவி செய்வார் என்று சொல்லப்பட்டது.
அவரிடம் தங்க பிஸ்கட்டைக் கொடுத்தால் அதைப் பணமாக்கி, பயண ஆவணங்கள் வாங்க ஏற்பாடு செய்து தருவார். எல்லா ஏற்பாடுகளும் தயாரான சமயத்தில் தமிழகத்தில்தான் சம்பவம் நடக்கவிருக்கிறது, டெல்லியில் அல்ல என்று தெரிந்ததும் கனகசபாபதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
அப்போது அவரைச் சென்னையில் வரவேற்று தங்குவதற்கு இன்னொரு விடுதலைப் புலி உளவுப்பிரிவு நபருடன் சென்னையில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தவன்.
டிக்சன், கனகசபாபதியுடன் முதல் முதலில் தமிழகம் வந்த ஆதிரையை முன்னதாக, சென்னை ராயப்பேட்டை கௌடியா மடம் சாலையில், சுபா சுந்தரம் ஸ்டுடியோவுக்கு அருகே வசித்து வந்த விமலா ஆன்ட்டி என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.
அவர்கள் அங்கே தங்க வேண்டும் என்பது ஏற்பாடு.
அந்த விமலா ஆன்ட்டி, தம்பியண்ணாவுக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் விஷயம் சுலபமாயிற்று.
ஆதிரை சென்னை வந்ததுமே ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் தனக்கொரு கணக்கு தொடங்கி, தன்னை ஈழ அகதி என்பதாகப் பதிவு செய்துகொண்டாள்.
அகதி அட்டை வாங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆதிரை சென்னைக்கு வந்து தங்கத் தொடங்கிய சமயத்தில்தான் சிவராசன், மே 21 அன்று சென்னையில் சம்பந்தப்பட்ட யாரும் இருக்கவேண்டாம் என்று சொன்னது.
சாத்தானின் படைகள் நூலை அச்சிட்டுக் கொடுத்த வசந்தகுமார் உள்பட அத்தனை பேருக்கும் பணம் கொடுத்து எங்காவது போய்ச் சுற்றிவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவிட்டுத்தான் அவர்கள் ஸ்ரீபெரும்புதூருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
ஆதிரை அப்போது சிதம்பரம், மாயவரம் என்று தென் தமிழ்நாட்டு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் போனார். திட்டமிட்டபடி ராஜிவ் காந்தி படுகொலை நடந்து முடிந்ததும்,
ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி அனைவரையும் நேபாளம் வழியே எங்காவது வெளிநாட்டுக்குச் செல்லச் சொல்லி சிவராசன் உத்தரவிட்டார்.
விமலா ஆன்ட்டி வீட்டுக்கு வந்து, ஆதிரையைச் சந்தித்த டிக்சன், அந்தத் தகவலைச் சொல்லி, உடனே புறப்பட்டு டெல்லிக்குச் சென்று அங்கிருந்து நேபாளம் போய்விடும்படி சொன்னான்.
மீண்டும் டெல்லி. சரியென்று கனக சபாபதியுடன் ஆதிரை புறப்பட்டபோது அவளுடன் சின்ன சாந்தனும் வருவான் என்று டிக்சன் சொன்னான்.
சின்ன சாந்தன், தமிழகத்தில் சிவராசனுக்கு வலக்கரம் போல் இருந்த ஓர் உளவுத்துறை நபர்.
அவன் அப்போது பழவந்தாங்கலில் தங்கியிருந்தான்.
டிக்சன், ஆதிரையை சின்ன சாந்தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட, ஆதிரையும் கனகசபாபதியும் டெல்லி செல்வதற்கு ஜி.டி. எக்ஸ்பிரஸில் டிக்கெட் வாங்கிக் கொடுத்து, அனுப்பி வைத்தது சின்ன சாந்தன்.
ஜூலை முதல் தேதி அவர்கள் ரயிலேறி விட்டார்கள். ஆனால் டிக்சன் சொன்னதுபோல் சின்ன சாந்தன் அவர்களுடன் டெல்லி செல்லவில்லை.
கடைசி நேரத்தில் சாந்தன் தன்னுடன் இருப்பதே நல்லது என்று சிவராசன் எண்ணியதுதான் காரணம். ராஜிவ் காந்தி கொலை நடவடிக்கையின்போது மட்டுமல்ல.
அதற்குப் பலகாலம் முன்னர் இருந்தே சிவராசனுக்கு சாந்தன் வெகு முக்கியமான உதவியாளர்.
இந்த நிலையில், ஆதிரை டெல்லிக்கு ரயில் ஏறிய அதே தினம் நாங்கள், எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் படி, விமலா ஆன்ட்டியை அவரது வீட்டில் பிடித்தோம்.
விசாரித்ததில்,‘அவர்கள் டெல்லிக்குப் போவதாகப் பேசிக்கொண்டார்கள்’ என்று அவர் சொன்னார். அந்த ஒருவரித் தகவலை வைத்துக்கொண்டு பரபரவென்று சாத்தியமுள்ள அனைத்துத் தரப்பிலும் விசாரணையை முடுக்கி விட்டோம்.
திருச்சிற்றம்பலம் என்கிற சின்ன சாந்தனுக்குத் தெரிந்த ஒரு ஆள் அகப்பட்டான். அவன் மூலம் ஆதிரையும் கனகசபாபதியும் டெல்லிக்கு ரயில் ஏறிவிட்டார்கள் என்பது தெரிந்தது.
அதாவது நாங்கள் விவரம் அறிவதற்கு முதல் நாள்!
எனவே ரயில் எப்படியும் போபால் வரைதான் சென்றிருக்கும் என்று முடிவு செய்து, போபாலில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம்.
நாக்பூரிலும் தகவல் சொல்லி, டெல்லி செல்லும் ஜி.டி. எக்ஸ்பிரஸில், இன்ன கோச்சில் இன்ன பெயர் கொண்ட பயணி இருக்கிறாரா, அவர் யார், எப்படி இருக்கிறார் என்று கவனியுங்கள், நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள் என்று கேட்டுக்கொண்டோம்.
ரயில்வே சார்ட்டில் ஆதிரை, கனக சபாபதி என்கிற பெயர்களிலேயே டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தபடியால், அடையாளம் காண்பது எங்களுக்கு எளிதாக இருந்தது.
விரைவில் நாக்பூர் அதிகாரிகள் எங்களைத் தொடர்புகொண்டுவிட்டார்கள். தகவலில் பிழையில்லை. ஆதிரை என்கிற பெண்ணும் கனகசபாபதி என்கிற முதியவர் ஒருவரும் டெல்லிக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அவர்களை என்ன செய்யலாம்? ரயிலில் ஒன்றும் செய்ய வேண்டாம். கவனமாகப் பின் தொடருங்கள். டெல்லிவரை சென்றபின் மறு உத்தரவு வரும் என்று சொன்னோம்.
அவர்கள் டெல்லியில் இறங்கியதும் பழைய கிருஷ்ணா லாட்ஜிலேயே அறை எடுத்துத் தங்கிய விவரம் கிடைத்தது. உடனே அங்கு சென்று கைது செய்யச் சொன்னோம்.
ஆதிரையைக் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்ததும் சதித்திட்டத்தின் வேறு சில பக்கங்களும் பரிமாணங்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.
அவளை இந்தியாவுக்கு அனுப்பியது பொட்டு அம்மான்.
டெல்லிக்குச் சென்று தங்க வைத்தது சிவராசன். ஆனால் ராஜிவ் படுகொலை தமிழகத்தில் நிகழ்த்தத் தீர்மானிக்கப்பட்டதால், அவள் வந்த வேலைக்கு அவசியம் ஏற்படவில்லை.
தப்பித்து நேபாளம் வழியே வெளியேற முடிவு செய்து போனபோது பிடிபட்டாள். ஒரு வகையில் தணுவின் இடத்தில் இருந்து, இல்லாமல் போயிருக்க வேண்டியவள் அவள்!
மனித வெடிகுண்டாகத்தான் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தாள். அவளது நேரம், அச்செயலில் இருந்து அவள் தற்செயலாக விடுவிக்கப்பட்டு, சி.பி.ஐ வசம் சிக்க வைத்திருந்தது.
ஆதிரை என்கிற சோனியாவின் மூலம் எங்களுக்குக் கிடைத்த தகவல்களுள் மிக முக்கியமானது, சின்ன சாந்தனின் இருப்பிடம் பற்றியது.
சிவராசனின் வலக்கரமான சின்ன சாந்தன். அவனைத்தான் தேடு தேடென்று தேடிக்கொண்டிருந்தோம். அவன் பழவந்தாங்கலில் இருப்பதாக ஆதிரை சொன்னாள்.
ஆனால் அவளுக்கு முகவரி சரியாகத் தெரியவில்லை. பிரவுன் கலர் யூனிஃபாரம் போடும் குழந்தைகள் படிக்கும்..பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்து வீடு என்று ஒரு மாதிரி அடையாளம் சொன்னாள்.
சின்ன சாந்தன் தங்கியிருந்த வீட்டை இரவுப் பொழுதில் முற்றுகையிட்டோம். மாட்டிக்கொண்ட விவரம் அறிந்ததும் சாந்தன், சயனைட் அருந்தி உயிர்விட முயற்சி செய்தான்.
ஆனால் அவனைக் காப்பாற்றி, கைது செய்து மல்லிகைக்கு அழைத்துச் சென்றுவிட்டோம். சின்ன சாந்தனின் கைது, ராஜிவ் கொலை வழக்குக்கு உதவி செய்ததைக் காட்டிலும், அதற்குமுன் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மிக பயங்கரமான நடவடிக்கையான பத்மநாபா கொலையில் பல சந்தேக முடிச்சுகளை அவிழ்க்கப் பேருதவி செய்தது.
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், விடுதலைப் புலி உறுப்பினரான சின்ன சாந்தன், பத்மநாபாவைத் தீர்த்துக் கட்டுவதற்காக மனப்பூர்வமாகத் தன்னை ஒரு ஈ.பி.ஆர்.எல். எஃப் ஆதரவாளனாக இனம் காட்டிக்கொண்டு சூளைமேடு ஈ.பி.ஆர்.எல்.எஃப் அலுவலகத்தில் இருந்தவர்களுடன் பேசியும் பழகியும் வந்தது.
பின்னால் இதே உத்தியைத்தான், மரகதம் சந்திரசேகரைச் சந்தித்து, அவரது மகனை நட்பாக்கிக்கொண்டு, ராஜிவ் காந்திக்கு மாலையிட அனுமதி பெற்றபோது சிவராசனும் பின்பற்றினார் என்பது அடுத்த வியப்பு. தாங்கள் திட்டமிட்ட பணி தடையில்லாமல் நடைபெற, தங்களுடைய ஜென்ம விரோதிகளின் அடையாளத்தைக் கூடத் தாற்காலிகமாக ஏந்தலாம் என்பது அவர்களுடைய கருத்தாக இருந்திருக்கிறது!
சுதேந்திர ராஜா (சுதந்திர ராஜா அல்ல) என்கிற மகேந்திரன் என்கிற சாந்தன் என்கிற ராஜு என்கிற சின்ன சாந்தனுக்குச் சிறு வயது முதல் சிவராசனைத் தெரியும்.
சிவராசன் என்கிற ரகுவரனின் நிஜப்பெயர் பாக்கியச் சந்திரன் என்பதைத் தொடக்கம் முதலே அறிந்த மிகச் சிலருள் அவரும் ஒருவர்.
சின்ன சாந்தன், சிவராசனின் தம்பியுடன் ஒன்றாகப் படித்தவர்.
அந்த வகையில் அறிமுகம். விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதில் சிவராசனின் செயல்பாடுகள் பற்றியும் சின்ன சாந்தனுக்கு நன்கு தெரியும்.
ஆனால் அவர் அப்போது இயக்கத்தில் இல்லை.
1988 பிப்ரவரியில் சிவராசன் திடீரென்று ஒருநாள் சின்ன சாந்தனைக் கூப்பிட்டு, ‘உனக்கு சென்னைக்குச் சென்று படிக்க விருப்பமா? இயக்கம் அதற்கு ஏற்பாடு செய்யும். நான் பார்த்துக்கொள்வேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
இது நடந்து சரியாக இரண்டு வருடங்கள் கழித்து, 1990ம் ஆண்டு பிப்ரவரியில் சிவராசன், சின்ன சாந்தனை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார்.
வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த நாகராஜன் என்கிற இலங்கைத் தமிழர் ஒருவர் வீட்டுக்கு அவர்கள் சென்றார்கள்.
நாகராஜன், தொழில்முறையில் ஒரு கடத்தல்காரர். சிவராசனுக்குப் பல காலமாகப் பழக்கமானவர். அவரிடம் சின்ன சாந்தன் சென்னைக்குப் படிக்க வந்திருக்கும் விஷயத்தைச் சொல்ல, அன்றைய தினமே நாகராஜனும் சிவராசனும் சாந்தனை எம்.ஐ.ஈ.டி.க்கு (Madras Institute of Engineering Technology) அழைத்துச் சென்று சேர்த்து விட்டார்கள்.
கையோடு அவரை அழைத்துக்கொண்டு பாண்டிபஜாருக்குச் சென்று வேண்டிய துணிமணிகள், இதர பொருள்களையும் சிவராசன் வாங்கிக் கொடுத்து, எம்.ஐ.ஈ.டி.யிலேயே ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு, கல்லூரிக்குச் சென்று படிக்கும்படியும் தாம் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.
படிக்கவும் வைத்து, வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து யார் இப்படித் தன்னை கவனிப்பார்கள் என்று சின்ன சாந்தனுக்கு சிவராசன் மீது மிகுந்த மதிப்பும் விசுவாசமும் உண்டாயிற்று.
பதினைந்து நாள்கள் ஒழுங்காகக் கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். அதன்பின் ஒருநாள் வள்ளுவர் கோட்டத்தில் சிவராசனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, சிவராசன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தைப் பற்றியும் பத்மநாபாவைப் பற்றியும் சின்ன சாந்தனிடம் சிறிது நேரம் பேசினார்.
‘அது ஒரு சமூக விரோத இயக்கம். இந்திய அமைதிப்படையிடம் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுப்பதே அவர்கள்தான். நீ அவர்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்’
தொடரும்…
பத்மநாபாவின் கடைசி நிமிடங்கள்..
மேலும் பத்மநாபாவின் படங்களை பார்வையிட இங்கே கிளிபண்ணவும்
வைகோ வன்னிக்கு சென்ற வீடியோ