மெட்ஃபார்மின், இதயப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இதயப் பிரச்னைகள் தடுக்கப்படுகிறது.
இந்தியர்களைத் தாக்கும் வாழ்வியல் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். இதில், டைப்-1 மற்றும் டைப்-2 என இரண்டு விதமான பாதிப்புகள் உள்ளன.
டைப்-2 சர்க்கரை நோயைக்காட்டிலும் டைப்-1 வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்து. எனவே, அதை எப்படித் தடுப்பது என்பதுபற்றி உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த நியூகேஸ்டல் பல்கலைக்கழக (Newcastle University) ஆய்வாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அதில், டைப்-1 டயாபட்டீஸ் உள்ளவர்களை எட்டு வாரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வின் முடிவில், ‘மெட்ஃபார்மின்’ (Metformin) மருந்துகளை, டைப்-1 சர்க்கரை நோயாளிகளுக்குத் தருவதால், அவர்களுக்கு ஏற்படும் இதயப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்பது தெரியவந்தது.
உடலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுதான் மெட்ஃபார்மினின் பணி. ஏற்கெனவே, இந்த மருந்துகள் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இதயப்பிரச்னைகள்
இதேபோல, நியூகேஸ்டல் பல்கலைக்கழத்தின் ஆய்வில், இதயப் பாதிப்புகள் இல்லாத டைப்-1 டயாபட்டீஸ் நோயாளிகள் 23 பேர் எட்டு வாரங்களுக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ‘மெட்ஃபார்மின்’ மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. கூடவே,
எந்தவித உடல் சார்ந்த பாதிப்புகளும் இல்லாத 23 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் தொடக்கத்தில், உடல் சார்ந்த பாதிப்பில்லாதவர்களைவிடவும், சர்க்கரை நோயாளிகளின் உடலில் ‘ஆண்டி-ஆஞ்சியோஜெனிக் மைக்ரோ ஆர்.என்.ஏ.’களின் (anti-angiogenic microRNAs) எண்ணிக்கை அதிகமிருப்பது தெரியவந்துள்ளது.
இவைதான், சர்க்கரை நோய்க்கும் அதனால் ஏற்படும் இதயப் பிரச்னைக்கும் அடிப்படைக் காரணம் எனக் கூறப்படுகிறது. இவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு மெட்ஃபார்மின் எடுத்துக்கொண்டபோது, அதன் அளவு சீராகியது தெரியவந்துள்ளது.
மைக்ரோ ஆர்.என்.ஏ-வின் வகைகளில், குறிப்பாக இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும் MIRNA-222 அளவு சீராகியுள்ளது.
இந்த ஆய்வுபற்றி நியூகேஸ்டல் பல்கலைக்கழகத்தின் சர்க்கரை நோய் நிபுணர் வீவர் கூறும்போது, “மெட்ஃபார்மின், ரத்த சர்க்கரை அளவை சீர்படுத்துவது போலவே, மைக்ரோ ஆர்.என்.ஏ-அளவையும் சீர்படுத்துகிறது. இதனால், இதயப் பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.