பிரபல ஆர்.ஜே மற்றும் பாடகியான சுசித்ரா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்தார். ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மேலும், காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து அதையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இப்படி எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது ட்வீட்கள் பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை அவர் டெலிட் செய்தும் வருகிறார். இதற்கிடையே, ‘சுசித்ராவின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது’ என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அதையும் மறுத்து, ‘என் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படவில்லை’ என்ற விளக்கத்தையும் போஸ்ட் ஆக பதிவு செய்துள்ளார் சுசித்ரா.
சுசித்ரா, நேற்று வேறு வேறு நேரங்களில் பதிவு செய்த ட்வீட்கள் இவைதான்:
”தனுஷ் ஒரு கடவுள். நான் அவர் பாதங்களைத் தொட விரும்புகிறேன்.”
”தனுஷ்… என்னிடம் இருந்து விலகி இருங்கள்.”
”த்ரிஷா ஒரு பெண் தெய்வம். தனுஷ் ஒரு கடவுள்! இதை ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.”
”இது என் கை – தனுஷ் தரப்பினரால் காட்டுத்தனமாகக் கையாளப்பட்ட கை.”
”சிம்புதான் வெற்றியாளர்.”
சுசித்ராவின் இந்த போஸ்ட்கள் குறித்த விளக்கம் கேட்க, அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. அவர் கணவர், நடிகர் கார்த்திக்கிடம் பேசினோம்.
”இது பெர்சனல் போஸ்ட். இந்த விஷயத்தை எல்லாமா பத்திரிகையாளர்களிடம் பேச முடியும்? ஒருவேளை சுசித்ரா பேச விரும்பினால், அவரிடமே பேசிக் கொள்ளுங்கள்” என்றார்.
பெர்சனலான விஷயம் என்றால், அதை சுசித்ரா சமூக வலைதளத்தில் ஏன் பகிர வேண்டும்? ஒரு பெண் தனக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக மறைமுகமாகச் சொல்லும்போது, அதற்கு கவனம் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால், பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள முடியாத புள்ளியில், அதைச் சுற்ற ஆரம்பிக்கும் யூகங்கள், பிரச்னையை இன்னும் சிக்கலாக்கவே செய்யும்.
சுசித்ரா… உங்கள் பிரச்னை பற்றி நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
– மகேஸ்வரி