தனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யக் கட்டாயப்படுத்தி இடமளித்ததுடன் அதனை வீடியோ படமெடுத்து பேஸ்புக்கில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவை ஒருவரிடமிருந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாதாள உலக தலைவன் மாமாஸ்மியின் சகா என கருதப்படும் ஒருவர் உள்ளிட்ட ஐவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டாயச் சிறைப்படுத்தியமை, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தமை, தாக்கியமை, பணம் கொள்ளையிட்டமை, பேஸ்புக்கில் பாலியல் உறவு வீடியோவை பதிவிடுவதாக மிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த ஐவரையும் கைது செய்த பொலிஸார் நேற்று அவர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்த நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் பிர்தெளஸ் மொஹம்மட் இம்ராஸ் என்பவரின் முறைப்பாட்டுக்கு அமைய இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களைக் கைது செய்ததாக மாளிகாவத்தை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
பொலிஸாரின் தகவல் பிரகாரம் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மாளிகாவத்தையைச் சேர்ந்த 38 வயதான, பாதாள உலக தலைவன் மாமாஸ்மியின் சகா எனக் கூறப்படும் பிரதான சந்தேக நபர் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த முறைப்பாட்டாளர் மொஹம்மட் பிர்தெளஸ் மொஹம்மட் இம்ராஸ் என்பவர் ஒரு தொகை பணம் கொடுக்க வேண்டி இருந்துள்ளது. ஐஸ் போதைப் பொருள் வர்த்தகத்தை மையப்படுத்தி இந்தப் பண கொடுக்கல் வாங்கல் நிலுவையில் இருந்துள்ளது.
இந் நிலையில் அண்மையில், மேற்படி நபர், தனக்கு பணம் தர வேண்டிய மொஹம்மட் இம்ராஸை தனக்கு இலாபத்துக்கு ஐஸ் போதைப் பொருள் கிடைத்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள தனது வீட்டுக்கு வருமாறும் கூறியுள்ளார்.
அதன்படி மாளிகாவத்தை வீட்டுக்குச் சென்றுள்ள மொஹம்மட் இம்ராஸ் எனும் நபரை வீட்டின் அறை ஒன்றில் பிரதான சந்தேக நபர் அடைத்து வைத்திருந்தமை விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.
பின்னர் அந்த அறைக்குள், பிரதான சந்தேக நபர் தனது 32 வயதான மனைவியையும் அடைத்து அவ்விருவரையும் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும் இம்ராஸும், பிரதான சந்தேக நபரின் மனைவியும் அதற்கு மறுக்கவே அவ்விருவரையும் 5 பேர் கொண்ட குழு பொல்லுகளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து வேறு வழியின்றி இருவரும் உறவு கொண்டுள்ளதாகவும் அதனை பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவரும் வீடியோ படமெடுத்ததாகவும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி, மறுநாள் சுமார் 5 இலட்சம் ரூபா பணம் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த மொஹம்மட் பிர்தெளஸ் மொஹம்மட் இம்ராஸிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே கடந்த 22 ஆம் திகதி மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக விசேட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேக நபருடன்மொஹம்மட் உவைஸ், மொஹம்மட் நிஸ்தார், மொஹம்மட் நவாஸ், மொஹம்மட் சாஜித் அல்லது சிபர் ஆகிய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். அவர்களையே எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(குறிப்பு: பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படுவதை தவிர்ப்பதற்காக அவரின் கணவரான பிரதான சந்தேக நபரின் பெயர் இங்கு வெளியிடப்படவில்லை)