2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தெற்கில் சிங்கள மக்கள் தொடர்ந்தும் மகிந்தவுடன் தான் உள்ளார்கள் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை ஒப்பிடும் போது மகிந்தவோ ரானிலோ பெரியளவிளான ஏற்ற இறக்கங்களை அடையவில்லை.
அதாவது அவர்களுக்கான மக்கள் ஆதரவில் மாற்றம் ஏற்படவில்லை. 2015 பாராளுமன்ற தேர்தலானது மகிந்த எதிர் நல்லாட்சி எனும் ஐக்கிய தேசியகட்சி இடையிலான தேர்தலாகவும் 2018 உள்ளுராட்சி தேர்தலானது மகிந்த எதிர் நல்லாட்சி (ரணில் மைத்திரி கூட்டு) என்ற தேர்தலாகவுமே தென்பகுதி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இது கீழேயுள்ள அட்டவணை மூலம் தெளிவாக புலப்படுகின்றது.
சிங்கள தேசியவாதம் (மஹிந்த) தொடர்ந்தும் அண்ணளவாக 45% என்றளவிலேயே தொடர்ந்து உள்ளது என்பதை இந்த அட்டவணை காட்டுகிறது.
சிறுபான்மை இனங்களின் வாக்குகளே 2015ல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது . மாறாக 2018 இவ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவானது வடக்கு-கிழக்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.
அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது (30.95%). ஓரிரு சபைகளை தவிர்த்து பெரும் பாலான சபைகளில் அக்கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் தமிழ் தேசிய பேரவை (தமிழ் தேசிய மக்கள் முன்னனி) வடக்கில் கணிசமான இடங்களை கைப்பற்றியுள்துடன் சில நகரசபைகளையும் பிரதேச சபைகளையும் கைப்பற்றியுள்ளது.
இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான மாற்று அரசியல் பாதையின் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ளதை தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் கேட்ட EPRLF கூட்டணியும் ஓரளவு இடங்களை வென்றுள்ளது.
இவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் எதிர்பார்க்கப்பட்டிருந்த தேர்தல் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய தோல்வியை சந்தித்திருக்கும்.
இதேவேளை, தெற்கின் பிரதான கட்சிகளும் கணிசமான இடங்களை வட கிழக்கில் கைப்பற்றியுள்ளன. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதன் காரணமான ஒரு சாதகமான பலன் ஆட்சியிலிருக்கும் இரு கட்சிகளுக்கும் கிடைத்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.
மேலும் வடக்கில் ஈபிடிபியும் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் பெற்றுள்ள கணிசமான ஆசனங்கள் அவர்கள் கடந்த கால ஆட்சியின்ஊடாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட நன்மைகளின் பிரதிபலன்களை வெளிகாட்டியுள்ளது.
அத்துடன் கிழக்கின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரசுக்கு விட்டுகொடுத்ததன் அதிருப்தியின் வெளிப்பாடாகவே சில பிரதேச சபைகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கைப்பற்றும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.
ஆக மொத்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதேச்சதிகார செயற்பாடு தமிழ் மக்களை பலகூறுகளாக சிதைத்துள்ளதை இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
அரசியல் செயற்திட்டத்தில் மக்களை பங்காளிகளாக கருதாமை, சிங்கள அமைச்சர்கள் போல் ராணுவ பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகளுடன் தமது சொந்த மக்களை அணுகிய அவர்களின் நடைமுறை, வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடுகள், ஊடகங்களை பகைத்துக்கொண்டமை போன்றவையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு காரணங்களாகும்.
மறுபுறத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் தேசிய முன்னணி தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் கொள்கை பற்றுறுதி மற்றும் அரசியல் நேர்மை தன்மை உள்ளூர் மற்றும் தேசிய அளவில் தமிழ் ஊடகங்கள் மத்தியில் கஜேந்திரகுமார் ஏற்படுத்திய நல்லுறவு, தமிழ் மக்கள் பேரவையுடனான காத்திரமான அதன் செயற்பாடுகள் ஆகியவை தமிழ் மக்கள் தேசிய முன்னனி வெற்றி பெறுவதற்கான காரணங்களில் சிலவாகும்.
கடந்த காலங்களில் தமிழ் ஊடகங்கள் முற்றுமுழுதாக குருட்டுத்தனமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி இருந்த நிலையில் தமிழ் மக்கள் தேசிய முன்னணி என்ன செய்கிறது என்பது கூட அனேகமான தமிழ் மக்களை சென்றடைந்திருக்கவில்லை. மாறாக அவர்களுக்கு எதிரான செய்திகள் மட்டுமே மக்களை சென்றடைந்தன.
இத்தேர்தல் முடிவானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ‘மஹிந்த பூச்சாண்டி’ காட்டி தமிழர் தலையில் தமது ஒற்றை ஆட்சி தீர்வை நியாயபடுத்த முயல்வதற்கு உதவக்கூடும்.
ஆனால் சிங்கள தேசியவாதத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாத நிலையில் (அது தொடர்ந்தும் 45% ஆக உள்ளநிலையில் ) தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுகொடுப்பு என்னும் பெயரில் தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாடுகளை கைவிட்டுவருவதானது மேலும் பலவீனமான நிலைக்கு தமிழ் தேசியத்தை கொண்டுசெல்லவே வழிவகுக்கும்.
சிங்கள தேசிய வாதத்தை உண்ணிப்பாக அவதானிக்குமிடத்து தனியே சிங்களத்துடன் கதைப்பதன் மூலம் தமிழருக்கான தீர்வை பெற்றுவிடலாம் என்பது தொடர்ந்தும் மாயமானாகவே இருக்கும் என்பது இலகுவில் புரியக்கூடிய ஒன்று.
-லோ. விஜயநாதன்-