2007ம் ஆண்டின் ஆரம்பம் போரின் போக்கைத் தீர்மானிக்கும் ஆண்டாக மாறியிருந்த நிலையில் இந்தியப் பத்திரிகை நிருபர் முரளி ரெட்டியின் பார்வை இவ்வாறாக இருந்தது.
மகிந்தவின் போக்கு பெரும்பான்மை சிங்கள மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
இதனை அவர் தேர்ந்தெடுத்திருப்பது அதில் அவருக்கு இருந்த நம்பிக்கையா? அல்லது தேர்தலை மையமாகக்கொண்ட அரசியலா? என்பதைத் தீர்மானிப்பது கடினமாகவே இருந்தது.
இரண்டும் கலந்ததாக இருக்குமென்பதே எனது அபிப்பிராயம். பிரச்சனைக்கான தீர்வின் சமன்பாடு, அதற்கான தீர்வு என்பவற்றை மகிந்த மிகவும் விபரமாகவே கூறுகிறார்.
அவரது பிரச்சனைக்கான வரவிலக்கணமே வித்தியாசமானது.
அவரது விளக்கம் மிகவும் அப்பட்டமானது. ராணுவத் தீர்வே அது.
சமகாலத்தில் அரசியல் தீர்வு குறித்து பேசுவதெல்லாவற்றிற்கும் பூஜ்ய அளவே கவனம் செலுத்துவதாகும்.
2007 இல் கோதபய தன்னுடன் பேச வருமாறு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்தார். அச் சந்திப்பு மிகவும் சூடானதாக அமைந்தது.
அவர் மிகவும் நிதானமாக தீட்டப்பட்ட திட்டத்துடன் அமர்ந்திருந்தார்.
2007இன் ஆரம்பத்தில் கிழக்குப் பிரதேசம் அரசின் கைகளில் விழும் நிலை காணப்பட்ட அந்த வேளையில் நான் மகிந்தவைச் சந்தித்த வேளையில் அவர்கள் வடக்கை வைத்திருக்கட்டும்.
நாம் கிழக்குடன் சமாளிக்கிறோம் என்றார். ஆனால் இச் செய்தியை நான் அப்போது வெளியிடவில்லை. ஏனெனில் இதனை உத்தியோக பூர்வ சந்திப்பிற்கு வெளியில் தெரிவித்ததாலும், அதனை நான் அப்போது வெளியிட்டிருந்தால் அடுத்தடுத்த சந்திப்பின்போது அவர் எதையுமே கூறாமல் தவிர்க்கலாம் என்ற அச்சத்தினாலும் நான் எழுதவில்லை.
அந்த வேளையில் வடக்கை நோக்கிச் செல்லும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை. இவ்வாறு அப் பத்திரிகையாளரின் அபிப்பிராயம் இருந்தது.
2007ம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் ஆளும் சுதந்திரக்கட்சி தனது அதிகார பரவலாக்க யோசனைகளை வெளியிட்டிருந்தது.
அதில் அதிகார பரவலாக்கத்திற்கான அலகு எது? என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தது. பழைய யோசனைகளுக்கும், புதிய யோசனைகளுக்குமிடையே காணப்பட்ட மிக முக்கிய வேறுபாடாக அவை காணப்பட்டன.
அதில் மாவட்ட சபைகளே அலகாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து பல தரப்புகளிலிருந்தும் கடுமையான விமர்சனம் எழுந்தது.
ஆனால் ஜே வி பி இனர் இம் முன் மொழிவு ஒற்றை ஆட்சி முறைக்கு விரோதமானது. 2005ம் தேர்தல் பிரச்சாரத்தில் சமஷ்டிக்கு எதிராக கூறிய பின் இணங்கிச் செல்வதாக குற்றம் சாட்டினர்.
ஆனால் புலிகளுக்கு வெளியில் செயற்பட்ட தமிழ் அரசியல் சக்திகள் மாவட்ட சபைகளுக்கான அதிகார பரவலாக்க முறை ஏற்கெனவே இரு தடவைகள் பரீட்சித்து தோல்வி அடைந்த ஒன்று என விமர்ச்சித்தனர். இப் பின்னணியில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இது அரசின் இறுதி முடிவு அல்ல என அறிவித்தார்.
2007ம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் கடும் பிளவுகள் வெளிப்பட்டன. TMVP அமைப்பு கருணாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டது.
கருணா- பிள்ளையானிடையேயான பிளவிற்கு நிதி முக்கிய ஒன்றாக காணப்பட்ட போதிலும் வேறு பல பிரச்சனைகளும் முக்கிய பங்கு வகித்துள்ளன.
அதாவது கட்சியை யார் தலைமை தாங்குவது? என்ற விவாதங்களும் காணப்பட்டன. கருணா கட்சியை துணைப்படை என்ற நிலையிலிருந்து புதிய வலிமையான கட்சியாக மாற்ற முனைந்தார். இருப்பினும் இவை அரசின் தேவையைப் பூர்த்தி செய்யும் அமைப்புகளாகவே பொதுவாக கருதப்பட்டன.
இவ் அமைப்புகள் குறிப்பாக கருணா குழு, மற்றும் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியனவற்றின் செயற்பாடுகள் குறித்து அப்போதைய அமெரிக்க தூதுவராலய செய்திகளின்படி இவை அரசின் புலிகளுக்கு எதிரான போரில் புலிகளுக்கு உதவுவோரைக் கடத்துவது, பயமுறுத்தி மௌனமாக்குவது, சம காலத்தில் அரசாங்கம் அவற்றை மறுப்பது எனத் தொடர்ந்தன.
அப்போது வெளியாகிய இரகசிய செய்திகளில் சில ராணுவ அதிகாரிகள் இத் துணைப்படைகளை செயலிழக்கச் செய்ய எண்ணியதாகவும், ஆனால் கோதபய தலையிட்டு அவர்கள் ராணுவத்தால் செய்ய முடியாத அலுவல்களை மேற்கொள்வதால் தலையிட வேண்டாம் எனத் தடுத்துள்ளார்.
தகவல் அறிந்த வட்டார செய்திகளின்படி சந்திரிகா அரசாங்கம் நீண்ட காலமாகவே இவ் அமைப்புகள் பணக் கஷ்டம் காரணமாக இதர குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக இத் துணைப்படைகளுக்கு பணம் வழங்கி வந்தது.
மகிந்த அரசு தமக்கிருந்த பணப் பிரச்சனை காரணமாக EPDP , கருணா குழுவினரை பணம் படைத்த தமிழ் வியாபாரிகளிடமிருந்து கடத்திப் பணம் பெறுமாறு கோதபய அனுமதித்தார்.
இதனால் சட்டம் ஒழுங்கு சிதைந்து குறிப்பாக கொழும்பு, வவுனியா ஆகிய பகுதிகளில் பணம் பறித்தலும், கடத்தலும் அதிகரித்திருந்ததாக பதிவுகள் உறுதிப்படுத்தின.
ஓரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தமக்கு கருணாவினால் தமக்கு உயிராபத்து உண்டு என அச்சம் தெரிவித்ததாகவும், பல உறுப்பினர்கள் ( முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ) தமக்கு உயிராபத்து உள்ளதாக தனிப்பட்ட சந்திப்புகளின்போது தெரிவித்தனர்.
2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தின்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை EPDP தலைவர் தேவானந்தாவின் உதவியோடு கருணா நிறைவேற்றியதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்து, இன்னொரு உறுப்பினர் ரவிராஜ் மரணத்திலும் கருணாவே பின்னணியில் இருந்ததாக கூறியிருந்தார்.
மொத்தத்தில் கிழக்கிலும், வடக்கிலும் அரச சார்பு அரசியல் தலைவர்களாக கருணா, தேவானந்தா ஆகியோரை அமர்த்தி அப் பகுதிகளை அதிகார பரவலாக்கம் வழங்கினாலும் நீண்ட காலத்திற்கு தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே நோக்கமாக இருந்தது.
சோல்கெய்ம், ராஜபக்ஸ நேரடிச் சந்திப்பு
2007ம் ஆண்டு யூன் மாத நடுப்பகுதியில் எரிக் சோல்கெய்ம், நோர்வே தூதுவர் ஆகியோர் மகிந்தவை ஒரு வருடங்களின் பின்னர் ஜெனிவாவில் சந்தித்தனர்.
பிரச்சனைகளை மிகவும் நேரடியாகவே பேசினர். அதாவது புலிகள் தொடர்பாக அரசின் நோக்கம் என்ன? அனுசரணையாளர் என்ற வகையில் நோர்வேயின் பணி என்ன? என்பதை அறிவதே நோக்கமாக இருந்தது.
மகிந்தவின் பதில் வழமை போலவே பயமுறுத்தலும், உறுதிமொழி அளிப்பதுமாக இருந்தது. பிரபாகரன் பகிரங்கமாக வன்முறையை நிறுத்தி நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருவதாக உறுதியளித்தால் மாத்திரமே ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படும் இல்லையேல் தொடரும் என்றார்.
அத்துடன் நோர்வே அங்கு வரத் தேவையில்லை. பதிலாக நோர்வேயிலிருந்தே புலிகளுடன் தொடர்புகொண்டு அதனைச் செய்யலாம் என்றார்.
மகிந்தவின் இம் முடிவுக்கு காரணம் போர் படிப்படியாக வடக்கை நோக்கி விஸ்தரிக்கப்பட்டிருந்தது.
தூதுவர் கிளிநொச்சி சென்றால் அது ராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையலாம் என்பதே நோக்கமாக காணப்பட்டது. தற்போது நோர்வே தனது ராஜதந்திரத்தினை தொலைபேசி வழிகள் மூலமாகவே தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
தாம் ராஜதந்திர வழிகளை கைக்கொள்ளாத இரு தரப்பாருடன் செயற்படவேண்டி ஏற்பட்டுள்ளதாக நோர்வே தரப்பினர் கூட்டுத் தலைமை நாடுகளுக்குத் தெரிவித்தனர்.
ராஜபக்ஸ சிங்கள தேர்தல் தொகுதிகளிலேயே கண்ணாக உள்ளார். தமிழர் பிரச்சனைக்கான தீர்வில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை. மறுபக்கத்தில் பிரபாகரன் முழுமையாகவே போரில் கவனத்தைக் குவித்துள்ளார்.
அரசுடன் தொடர்பு கொள்வது இலகுவாக இருந்தது. ஆனால் புலிகள் நிலமையை அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் முக்கிய தலைவர்களுடன் இடைவிடாத தொடர்புகள் இல்லை.
அத்துடன் புலிகளின் மூத்த தலைவர்கள் எவரும் பாலசிங்கத்தின் பின்னர் நாட்டிற்கு வெளியில் இல்லை. புலிகளுடன் தொடர்புகளைப் பேணுவதே சோல்கெய்ம் இன் முக்கிய செயற்பாடாக இருந்தது.
கிழக்கு அரசின் கைகளில் விழுந்த பின்னணியில் கூட்டுத் தலைமை நாடுகளைச் சந்தித்த பின்னர் நோர்வே தூதுவர் கிளிநொச்சி சென்றார்.
அங்கு புலிகள் தீர்மானமாகவும், முனைப்போடும் ஆனால் கவலையுடனும் இருப்பதை அவதானித்தார். அச் சமயத்தில் அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டின் முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாக கூறிக்கொண்டிந்தது.
ஆனால் இவை யாவும் நேரத்தைக் கடத்துவதற்கான வழிமுறை என தூதுவர் கருதினார். 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மதிக்கும்படி அரசாங்கத்தினை வற்புறுத்த சர்வதேச சமூகம் தவறுவதாக தமிழ்ச்செல்வன் விமர்ச்சித்தார்.
இப் பின்னணியில் இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பது கடினமாக இருப்பதாக அமெரிக்க தூதரகம் கருதியது.
சர்வகட்சி மாநாட்டின் முடிவுகள் ஏதாவது தீர்வை முன்வைத்தாலும் அதனை புலிகள் ஏற்பார்களா? என்பது கடினமாக இருந்தது.
இத் தருணத்தில் அமெரிக்க தூதுவராலயம் புதிய அணுகுமுறைகளில் கவனத்தைச் செலுத்தியது. அதாவது புலிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தால் அடுத்த நகர்வு என்ன? என்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
அதாவது வட அயர்லாந்து பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றது போன்று நோர்வையை விட புதிய நாடு ஒன்றின் அனுசரணையைத் தேடலாம்.
அது இரு தரப்பாரையும் தொடர்ந்து ஈடுபட ஊக்கமூட்டும் என்பதால் கூட்டுத் தலைமை நாடுகளை செய்யும்படி கோரலாம் எனக் கருதினர்.
கிழக்கு சுத்தப்படுத்தப்பட்டது
2007ம் ஆண்டு யூலை மாதம் கிழக்கு மாகாணத்தின் விதியைத் தீர்மானித்தது. யூலை 11ம் திகதி கிழக்கு விடுவிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
தொப்பிக்கல வனப் பிராந்தியமே எஞ்சியிருந்தது. வெற்றியின் பெருமிதத்தை அரசு கொண்டாடியது. பத்திரிகைகள் அக் காட்சிகளை நாடு முழுவதும் எடுத்துச் சென்றன.
கிழக்கின் புதிய விடியல் என யூலை 19ம் திகதியை தேசிய விடுமுறையாக அரசு அறிவித்தது. தொப்பிகல பிரதேசத்திலிருந்து புலிகள் வடக்கிற்கு ஏற்கெனவே ஓரளவு சென்றுவிட்ட நிலையில் அதனை வெற்றிகொள்வது ராணுவத்திற்குப் பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை.
அரச தரப்பினரின் வெற்றிக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து 5 நாட்களுக்குள் திருகோணமலையிலிருந்த உயர் அரச நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டார்.
இது புலிகள் முற்றாக அகற்றப்பட்டார்கள் என்பதை நம்பகமற்றதாக்கியது. அரசின் வெற்றிக் கொண்டாட்டங்களின்போது மகிந்தவின் உரை 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நிராகரிப்பதற்கான நியாயங்களாக அமைந்தன.
கிழக்கின் தோல்வி குறித்து தமிழ்ச் செல்வன் தெரிவிக்கையில் தாம் தோல்வியைத் தழுவவில்லை எனவும், ராணுவ உத்திகள் நேரம், காலம், சூழல் என்பவற்றில் தங்கியுள்ளதால் அது தோல்வி அல்ல எனவும், எம் மனிதனும் தனது மண்ணில் அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
தமக்கான புதைகுழியை தாமே தேடியிருப்பதை சிங்களப்படைகள் விரைவில் உணர்வார்கள் என்றார்.
( மீண்டும் அடுத்த வாரம் )