கடந்த 8 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன ஆசிரியையொருவர் சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பகம் கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் கம்பளை கீரப்பனை பிரதேசத்தில் தனது வீட்டுக்கு நூறு மீற்றர் தூர இடைவெளிக்குள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை மாயமாகியுள்ளார்.
இந்நிலையில் அவர் காணாமமல்போய் எட்டு தினங்களின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை விக்டோரியா நீர்த் தேக்கப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் கம்பளை கீரப்பனை பிரதேசமெங்கும் சோக மயமாகியுள்ளது.
அட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த கம்பளை கீரப்பனையைச் சேர்ந்த நிஸன்சலா என்ற 27 வயதுடைய குறித்த பட்டதாரி ஆசிரியை சம்பவதினமான கடந்த முதலாம் திகதி கடமை முடிந்து பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் இரவாகியும் வீடு வந்து சேராததையடுத்து உறவினர்கள் கம்பளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
மேற்படி முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து சம்பவதினத்தன்று குறித்த ஆசிரியை வீடு திரும்பிய காட்சி ஆசிரியையின் வீட்டிலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராவில் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை கண்டிப் பகுதியில் கடந்த நான்கு தினங்களாக மகாவலி கங்கையில் பெண்ணொருவரின் சடலமொன்று மிதந்து செல்வதாக கம்பளைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கட்டுகஸ்தோட்டை, குண்டசாலை, வத்துகாமம், தெல்தெனிய ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து கம்பளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே நேற்றுக்காலை விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து குறித்த ஆசிரியையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த ஆசிரியைக்கு இம்மாதம் 29 ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருடன் பதிவுத்திருமணம் செய்ய ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.