தென் சீனக் கடலில் பயணித்த அமெரிக்க போர்க் கப்பல் தமது பயணப் பாதையை மாற்றிச் செல்லும்படி செய்தது சீனப் போர்க்கப்பல்.
தம்முடைய கப்பலுக்கு மிக அருகிலும், தொழில்முறையற்ற தன்மையோடும் சீனக் கப்பல் பயணித்து வந்ததாகவும் அதனால் அமெரிக்கக் கப்பல் பாதையை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது அமெரிக்க கடற்படை.
இந்த சம்பவம் நடந்தபோது சீனா உரிமை கொண்டாடிவரும் சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள கேவன் மற்றும் ஜான்சன் பாறைத் தொடர்களைக் கடந்து யு.எஸ்.எஸ். டிகாடர் போர்க்கப்பல் சென்றுகொண்டிருந்தது.
அப்போது சீனாவின் லுயாங் போர்க்கப்பல் டிகாடரை நெருங்கி வந்ததது. அப்போது டிகாடருக்கும் லுயாங் கப்பலுக்கும் வெறும் 41 மீட்டர் தொலைவே இருந்தது என்றார் அமெரிக்க கடற்படை கமாண்டர் நாட் கிறிஸ்டன்சென்.
“கப்பல் செலுத்தும் சுதந்திரத்தை” நிலைநாட்டுவது என்ற பெயரில் என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல்கள் மேற்கொள்ளும் பயணங்கள் சீனாவை கோபப்படுத்திவருகின்றன.
சீனாவுக்கும், சர்ச்சைக்குரிய தீவுகள் மற்றும் பாறைத் தொடர்களுக்கு உரிமை கோரிவரும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அவ்வப்போது தகராறு முற்றும் இடமாக தென் சீனக் கடல் மாறிவருகிறது. இந்தக் கடல் பரப்பு முக்கியமான கப்பல் போக்குவரத்துத் தடங்களைக் கொண்டிருக்கிறது.
சர்ச்சைக்குரிய தீவுகள் மற்றும் பாறைத் தொடர்களுக்கு பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் உரிமை கோரிவருகின்றன.
ஆனால் ‘நைன்-டேஷ் லைன்’ (ஒன்பது கோட்டுப் பாதை) எனப்படும் மிகப்பெரிய பகுதிக்கு சீனா உரிமை கோரிவருகிறது.
அத்துடன் பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதாகவும், சீண்டல்களில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க கடற்படை மீது அடிக்கடி குற்றம் சாட்டுகிறது சீனா.
ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்தபோது கேவன் மற்றும் ஜான்சன் பாறைத் தொடர்களில் இருந்து 12 கடல் மைல் தொலைவுக்குள் பயணித்தது யு.எஸ்.எஸ். டிகாடர்.
நாடுகள் 12 கடல் மைல் தொலைவு வரை தங்கள் பிரதேச கடற்பரப்பாக உரிமை கொண்டாடலாம் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது.
இந்நிலையில் இத்தீவுகள் மீது சீனா கொண்டாடிவரும் உரிமையை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று காட்டுவதற்காக 12 கடல் மைல்களுக்கும் குறைவான தொலைவில் இந்தத் தீவுகளுக்கு அருகே செல்கிறது அமெரிக்க கடற்படை.
டிகாடர் கப்பல் மீது சீனக்கப்பல் ஏறத்தாழ மோத வந்துவிட்டது என்று கூறுகிறது அமெரிக்கா.
“தென் சீனக் கடலின் தீவுகளுக்கு அருகில் அனுமதி இல்லாமல் அடிக்கடி கடற்படை கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா.
இதன் மூலம் சீனாவின் இறையான்மையும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன, பிராந்திய அமைதியும் ஸ்திரத் தன்மையும் பாதிப்புக்குள்ளாகிறது” என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.