என்னையும் அறியாமல்
உன்னுள்ளே நான் தொலைந்தேன்
காரணங்கள் தெரியாமல்
என்னையே நான் மறந்தேன்
உன் புன்னகைக் காண தினம் தவித்தேன்
கண்களில் கணை தொடுத்து காயங்கள் கொடுக்கின்றாய்
புன்னகையில் மலராகி காயத்தை ஆற்றுகின்றாய்
உள்ளத்தில் நீ புகுந்து மாயங்கள் செய்கின்றாய்
என்னையே உனதாக்கி உன்னுள்ளே மகிழ்கின்றாய்
தத்தை மொழி பேசி என் எண்ணத்தை சிறை பிடித்தாய்
உன்னுள்ளே நான் தொலைந்தேன்
என்னை உன்னிலன்றி எங்குசென்று தேடுவேன்
பார்த்திடும் பார்வைகள் ஆசைகள் சொல்லிடும்
இதயங்கள் இரண்டும் வானில் பறந்திடும்
உன் நினைவுகள் நாளும் என் மனதினில் ஒளிர்ந்திடும்
உருகிடும் மெழுகாய் என் உள்ளமும் உருகிடும்
இளமையின் நினைவுகள் இதயத்தைத் திறக்கும்
உள்ளங்கள் இரண்டும் தன்னிலை மறக்கும்
பொங்கிடும் உணர்வுகளை கண்களும் உரைக்கும்
விழிகளில் வானவில் கனவுகள் தொடுக்கும்
தவழும் தென்றல் மொட்டுக்களை அவிழ்க்கும்
மெல்லிய புன்னகை பூக்களும் சிந்தும்
இளமையின் தாகம் மோகத்தைக் கூட்டும்
மயங்கிய பெண்மை நாணத்தைக் காட்டும்
மனதில் இன்பங்கள் ஊற்றெடுக்கும்
இளமனம் இரண்டும் இனிதாய் கைகோர்க்கும்
மெல்லிய பூக்கள் மஞ்சத்தை நிறைக்கும்
நனைந்த மனது உண்மைகள் உரைக்கும்
வலிகள் கூட சுகமாய் மாறும்
தேனெடுக்கும் வண்டினத்தை பூக்கள் மன்னிக்கும்
—
சசி எழில்மணி
திருக்கழுக்குன்றம்