2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பதை என்னால் தனித்து தீர்மானிக்க முடியாது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆசிர்வாதமும் பசில் ராஜபக் ஷவின் இணக்கமும் தேவை அவர்களின் தீர்மானத்தின் பிரகாரமே அது தொடர்பில் முடிவெடுப்பேன் அத்துடன் எனது அமெரிக்க குடியுரிமையை எந்நேரத்திலும் இரத்து செய்ய நான் தயாராக உள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபஷ்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நாட்டு மக்களுக்கு அரசியலில் இருந்த நம்பிக்கை எதிர்பார்ப்புகள் அனைத்தும் சிதைவடைந்து விட்டன. அவர்கள் தற்போது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனைக் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டுமக்கள் அரசியல் வாதிக்கும் அப்பாற்பட்டு நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்த தலைவன் என்ற நன்மதிப்பை வைத்துள்ளனர்.
நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கு இவரைப் போன்ற ஒருவர் தேவை என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளர். தற்போதைய நிலையில் அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்நிலையில் மக்கள் தமக்காக சேவை செய்யக் கூடிய அடுத்த தலைவன் யார் எனத் தேட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் சிலர் நான் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாகவும் எதிர்பார்த்துள்ளனர்.
இது என்னால் தனித்து எடுக்கக் கூடிய முடிவல்ல மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதம் இன்றி நான் எச் செயலையும் செய்வது கிடையாது.
அவ்வாறு என்னால் தனித்த செய்யவும் முடியாது. அதே போல் தான் பசில் ராஜக்ஷவும் அரசியல் திட்டம் மற்றும் அதை நிர்வகிப்பதில் அவருக்குள்ள அனுபவம் என்பன முக்கியமானது.
அரசியலில் அவருக்கு பாரிய புலமை இருக்கின்றது.பிரதேச சபைகள் முதல் கொண்டு அரசில் தொடர்பு அனுபவம் அவரிடமே இருக்கின்றது. ஆகவே அவறுக்கு நான் ஜனாதிபதி வேட்பாளராவதில் இணக்கமா என்பதை பொருத்தே எனது தீர்மானம் அமைந்திருக்கும்.
நான் இலங்கைக் குடி மகன் எனினும் நான் அமெரிக்காவுக்கு சென்றதும் அங்கும் பிரஜாவுரிமை கிடைத்தது. இந்நிலையில் நான் இரட்டை பிராஜவுரிமையைக் கொண்டுள்ளேன்.
இந்த அரசாங்கம் ராஜபக்ஷ குடும்பத்தினரை பழிவாங்குவதற்காக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்து இரட்டைப் பிரஜா உரிமையைக் கொண்டுள்ளவர்கள் இலங்கையில் அரசியலில் ஈடுப்பட முடியாது என்ற ஷரத்தை புகுத்தியுள்ளனர்.
இருப்பினும் நான் அரசியலில் ஈடுப்படுவதற்கு அது ஒரு தடையல்ல. எவ்வேளையிலும் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய நான் தயாராகவே உள்ளேன்.
கடந்த மூன்று வருடகாலமாக இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தில் நாட்டுக்கு சேவை செய்தவர்களின் பின்னால் சென்று பழி வாங்கியதே தவிர நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எதையும் செய்ய வில்லை. அரசியலமைப்பு திருத்தம் முதல் அனைத்தும் அவர்களின் பழிவாங்கல் செயற்பாடுகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டன.
சர்வதேசத்தை வெற்றிக்கொண்டதாகக் கூறும் அரசாங்கம் மத்திய வங்கியை கொள்ளையடித்த அர்ஜுன் மகேந்திரனை சர்வதேசத்தின் உதவியுடன் நாட்டுக்கு கொண்டு வர முடியாமல் உள்ளது.
இதுவா இவர்கள் சர்வதேசத்துடன் கொண்டுள்ள உறவு. விடுதலைப்புலிகளின் தலைவர்களுள் ஒருவரான கே.பி யை மூன்று அதிகாரிகளை அனுப்பி இலங்கைக்கு கொண்டு வந்தேன்.
அவரை நாட்டுக்கு கொண்டு வரும் வரை அது குறித்து யாரும் அறிந்திருக்க வில்லை. ஆனால் இது வரை அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர யாரை இந்த அரசாங்கம் சிங்கப்பூருக்கு அனுப்பியது?.
லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யார்? எக்நெலியகொடவை காணாமல் செய்தது யார் என்பது குறித்து இந்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இவ்விசாரணைகளை மேற்கொள்ள சரியான வழி இருந்த போதிலும் ஆட்சியாளர்கள் எம் மீது சேறு பூசுவதற்காக அவ்விசாரணைகளை வேறு திசைகளில் இட்டுச்செல்கின்றனர்.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளையும் தமது செயல்களுக்கு துணை சேர்த்துக்கொள்கின்றனர். அவ் அதிகாரிகளுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். அநியாயங்களுக்கு துணை போக வேண்டாம். எதிர்காலத்தில் அவற்றுக்கு நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும்.
நல்லிணக்கத்தின் மூலம் சர்வதேசத்தை வெற்றிகொண்டதாகக் கூறும் அரசாங்கத்தால் அண்மையில் பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் விடயத்தைப் பேசி தீர்வு காண முடியாமல் போனது ஏன். புலம்பெயர் புலி அமைப்புகளின் திட்டப் படி செயற்படும் அரசாங்கத்தால் இதைக் கூடவா செய்ய முடியாமல் போனது.
தனி ஈழத்துக்கு இடம் கொடுத்து நாட்டைத் துண்டாக்குவதல்ல நல்லிணக்கம். அதை செய்வதற்கு நாட்டுக்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை.
தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் எதிர்காலம் குறித்து மாத்திரமே சிந்திக்கின்றனரே தவிர அவர்கள் தமிழ் மக்கள் குறித்து சிறிதளவும் சிந்திப்பது கிடையாது.
நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இந்த அரசாங்கம் என்ன செய்தது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கில் பாலங்களை நிர்மாணித்தோம்.
வீதிகளை அபிவிருத்தி செய்தோம் வடக்கிற்கான இரண்டு புகையிரத வீதிகளை நிர்மாணித்தோம். மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள் குடியமர்த்தினோம,.
மக்களின் காணிகளில் 90 சதவீதமானவற்றை மீண்டும் அம் மக்களுக்கு கையளித்தோம். வடக்கில் தேவையற்ற இராணுவ முகாம்களை அகற்றி முக்கியமான முகாம்களை மாத்திரம் வைத்துக்கொண்டோம்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக மாகாண சபை தேர்தலை நடத்தினோம், ஒரு நாட்டின் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதோடு அவர்களின் பொருளாதா ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறான ஒரு நடவடிக்கையையே நாம் வடக்கு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க அத்திவாரமிட்டோம் ஆனால் இந்த அரசாங்கம் நல்லிணக்கம் என்பதை வாய் வார்த்தைகளால் மாத்திரமே நடைமுறைப்படுத்துகின்றதே தவிர செயற்பாட்டில் எதுவும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.