‘பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் குறிப்பிடும் அளவிற்கு எந்தவொரு சர்ச்சையோ, சம்பவமோ நிகழவில்லையே… வார இறுதியில் வரப்போகும் கமல், எதைப் பற்றித்தான் பேசப் போகிறாரோ என்று நேற்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
ஆனால், கோடு போட்டால் மேடு போட்டு விடும் அபாரமான கதைசொல்லி என்பதை கமல் நிரூபித்தார். ‘என்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கை முன்னிட்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பல கோணங்களில் பிழிந்தெடுத்தது சிறப்பு.
‘Weird’ என்று சொல்லக்கூடிய விஷயங்களும் நடந்தன. பொன்னம்பலம் பற்றி கமலுக்கு எழுதிய அநாமதேய பிராதைப் பற்றி விசாரிக்கும் போது முன்னும் பின்னுமாக பேசி மறுத்து குழப்பினார், டேனி. சபை நாகரிகமின்றி, நாடகத்தனமாக கமல் அந்தக் கடிதத்தை தூக்கி எறிந்தாலும் ‘என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என்று கோபித்துக்கொண்டது ஒருவகையில் நியாயமானது.
‘எனக்கு அஞ்சு நிமிஷம் போதும். இங்க இருக்க எல்லோருடைய முகத்திரையையும் கிழிச்சிருவேன்’ என்று கொலைவெறியுடம் ஆவேசமாக கூறிய வைஷ்ணவி ‘சரி அஞ்சு நிமிஷம். நான் தர்றேன். கொசஞ்சம் கிழிங்களேன்’ என்று கமல் சொன்னதும்.. ‘அது வந்து.. என்னால பண்ண முடியும்’னுதான் சொன்னேன்.
ஆனா எனக்கு விருப்பமில்லை’ என்று மறுத்தார். (வாடா.. வாடா.. என் ஏரியாவிற்கு வாடா..) பிறகு தான் புண்பட்ட காரணத்தைச் சொன்னபோது அது அத்தனை ஒன்றும் பெரிதாக இல்லை.
வாய்ப்பு காலிங்பெல்லை அடிக்கும்போது எழுந்து போய் மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்வது முறையாகாது. அதனால் ஏற்படும் இழப்பு நமக்குத்தான்.
யாஷிகாவிற்கும் மஹத்திற்கும் உள்ள உறவைப் பற்றி, ஒரு தகப்பனுக்கே உள்ள கவலையும் கருணையும் கண்களில் தெரிய யாஷிகாவிற்கு கமல் செய்த உபதேசம் அட்டகாசம். ‘அன்பு கிடைக்குதோ, இல்லையோ. கொடுத்துடணும்’ என்று அவர் சொன்னது வேத வாக்கியத்திற்கும் மேலே.
“எனக்குப் புரியும். நானும் இந்த மாதிரி நிறைய அன்பு கொடுத்திருக்கேன். சிலது திரும்பி வரல. அதனாலதான் கவிதை வருது. கண்ணீர் வருது. ‘’ச்சீ.. இந்தப் பசங்களே இப்படித்தான்னு ஒரு கிழவன் மாதிரி முகஞ்சுளிக்க மாட்டேன்.
எனக்குப் புரியும்” என்று அவர் சொன்னது கிழவர்களுக்கு மட்டுமானதல்ல, பழமைவாத இளைஞர்களுக்கும் சேர்ந்தது.
இன்றைய நாளில் வேறென்ன நிகழ்ந்தது என்பதைப் பார்ப்போம்.
**
கமல் அரங்கத்தில் நுழையும் போது பின்னணயில் ஒலிக்கும் இசை இல்லை. அமைதி. இதற்கான காரணம் வெளிப்படை. திரு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரையும் எழுந்து நிற்க வேண்டினார் கமல்.
‘தமிழ் உலகில் ஒரு பிக் பாஸ் – கலைஞர்’ என்று தன் அஞ்சலிக்குறிப்பைத் துவங்கிய கமல், திரைத்துறையில் அற்புதமான வசனங்களின் மூலம் கருணாநிதி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார்.
காஃபி வித் அனு நிகழ்ச்சியில், கமலின் கவிதைத் திறனை அவர் பாராட்டிய காணொளியை வெளியிட்டு நெகிழ்ந்து போனார்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் 55வது நாள் காட்சிகள் ஒளிபரப்பாகின. காலையில் பிக்பாஸ் வீட்டின் சுப்ரபாதம் ஒலித்தது. சென்றாயனால் வாழ்க்கை முழுவதும் மறக்கவே முடியாத பாட்டு. ‘டேரா… டேரா… டேரா பைட்டா காதல் இருக்கு’
‘நான் என்ன இந்த வீட்டில் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எதிர்பார்க்கிறேனா?’ என்று சொல்லிக்கொண்டிருந்த மும்தாஜ், காலையுணவைப் பற்றி டேனியிடம் விசாரித்து, ‘அது வேண்டாம்’ வேறு செய்து கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
‘மைதா வேணாம். ஒத்துக்காது. கோதுமை வாங்கலாம்னு இதுதான் சொல்லிச்சு. இப்ப மாத்திச் சொல்லி தொல்லை பண்ணுது. கமல் சார் கிட்ட சொல்லிட வேண்டியதுதான்” என்று சென்றாயனிடம் புலம்பினார், டேனி.
‘கடந்த வாரத்தில் வந்த விருந்தினர்களை விடவும் இந்த வாரம் வந்த ஹரீஷ் – ரைசாவைப் பார்த்தவுடன் பிக் பாஸ் வீட்டில் சிலரிடம் மாற்றம் தெரிகிறது’ என்று சொல்லிக்கொண்டிருந்தார், பாலாஜி. ‘ஹீரோவாகி விட்ட ஹரீஷை, மஹத் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாராம். வைஷ்ணவி உடற்பயிற்சியெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்’. (ஆல் தி பெஸ்ட் வைஷ்ணவி!).
அகம் டிவி வழியே அகத்திற்குள் வந்தார், கமல். ‘நேரா எவிக்ஷன்னுக்கு போயிடலாமா?” என்று சிறிது நேரம் போக்கு காட்டிவிட்டு ‘அப்படில்லாம் உடனே சொல்லிடுவேனா’ என்று போட்டியாளர்களை சத்தாய்த்துவிட்டு கிளம்பினார்.
திரும்பி வந்த அவர், ‘எனக்கு அட்ரஸ் பண்ணி ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு. யார் எழுதினது. அவங்களா ஒத்துக்கிட்டா பெரிய மனுஷன்.
இல்லைன்னா. வெறும் மனுஷன்’ என்றதும் சில தயக்கங்களுக்குப் பிறகு ‘நான்தான்’ என்று டேனி ஒப்புக்கொண்டார். ‘பொன்னம்பலம் பெண்களைப் பற்றி தவறாக பேசுகிறார். என்னைப் பற்றியும் கமல் சாரிடம் தப்புத்தப்பாக சொல்கிறார். அவரிடம் பொய்த்தனம் இருக்கிறது’ என்பது அந்தக் கடிதத்தின் சாரம்.
முன்ன அவர் மேல கோபம் இருந்துச்சு சார். இப்ப இல்ல. கடிதம் எழுதும்போது அது பொய். எந்தவொரு விஷயத்திற்கும் இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக வருவதில்லை. அதை சோதித்துப் பார்க்கத்தான் எழுதினேன்.
கடிதம் எழுதி ஒரு வாரமாச்சு. அன்பு வந்து மூணு வாரமாச்சு” என்று குழப்பமாக கூறினார் டேனி. ‘இந்த உலகத்திற்கு அவர் ஏதோ சொல்ல வர்றார்’ என்பதுதான் புரிந்ததே தவிர, என்ன சொல்கிறார் என்று கமலைப் போலவே எனக்கும் புரியவில்லை. கடிதத்தை விட்டெறிந்த கமல், ‘இனி என் நேரத்தை இம்மாதிரி வீணடிக்காதீர்கள்’ என்றார்.
இதைப் போலவே வைஷ்ணவியும் தனக்கு தரப்பட்ட வாய்ப்பை வீணடித்தார். ‘அஞ்சு நிமிஷத்துல கிழிச்சுடுவீன்னீங்களே.. இப்ப என்னதான் கிழிக்கறீங்கன்னு பார்க்கலாம்’ என்று கமல் சொன்னதற்குப் பிறகு அவரால் எதையும் கிழிக்க முடியவில்லை.
‘என்னால முடியும் சார். ஆனா செய்ய மாட்டேன்’ என்றது வெட்டி வீறாப்பு. இது ஒருபக்கம் அவரது நல்லியல்பை சுட்டினாலும் மனதில் உள்ளதை வாய்ப்பு கிடைக்கும் போது கொட்டிவிடுவதும் முக்கியமானது.
‘அப்ப இப்படியேதான் மனசுல இருக்கற சொல்லாத நடிச்சிட்டு இருக்கப் போறீங்களா?’ என்று கமல் சுட்டிக்காட்டியது சரியானது.
“சண்டை போடறவங்களை இந்த வீட்ல மறுபடியும் பார்க்க வேண்டியிருக்கு’ என்றொரு காரணத்தை டேனி சொன்னதும் ‘உலகமும் அப்படித்தானே. மறுபடியும் அவர்களை பார்க்க வேண்டியிருக்கும். ஸாரி, தாங்க்யூ சொல்ல வேண்டியிருக்கும் பாலாஜி –நித்யா விவகாரமும் அதானே’ என்றார் கமல்.
“மஹத்கிட்ட திறமை இருக்கு. ஆனால் சட்டென்று வருகிற கோபம் பெரிய பலவீனம். அதைச் சுட்டிக்காட்டத்தான் அவருடைய பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்’ என்றார் பொன்னம்பலம்.
“மிமிக்ரில பாத்தீங்கன்னா, அது செய்யப்படுபவர் அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். ‘என் குரல் மாதிரி இல்லையே’ என்று அழிச்சாட்டியம் செய்வார்.
கொஞ்சம் சாயல் இருந்தாகூட நான் கைத்தட்டுவேன். மஹத்தின் வயதில் விமர்சனங்களை ஏற்க முடியுமா?’ என்று சொன்ன கமல் அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார்.
“சென்றாயன்..உங்க புகார் என்ன?” என்றதும் ‘தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா…’என்கிற ஜனகராஜின் காமெடியைப் போல ‘ஐஸ்வர்யா என்னை நாய்’னு சொல்லிட்டாங்க சார்” என்று கடந்த வார புராணத்தை மறுபடி ஆரம்பித்தார்.
அந்த ‘நாய்’ மிக நன்றியுள்ளது போல… அவர் மனதிலிருந்து இன்னமும் நகராமல், அங்கேயே இருக்கிறது!. கமல் எடுத்துக்கொடுத்தும் அவரால் பாயின்ட்டிற்கு வர முடியவில்லை. ‘வைஷ்ணவி இன்னுமும் திருந்தலை’ என்றார் அடுத்தபடியாக.