யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக, இன்று (16) பகல், நீண்ட நேரமாகத் தரித்து நின்ற காரொன்றால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக, நீல நிறமுடைய கார் ஒன்று காலையில் இருந்து தரித்து நிற்பதை அவதானித்த பாடசாலை நிர்வாகத்தினர், அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கார் நின்ற இடத்துக்கு யாரையும் செல்லவிடாது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வெளியேறும் தருணத்தில், அங்கு வந்த இருவர் தரித்து விடப்பட்ட கார் தங்களுடையதெனக் கூறி காரில் ஏற முற்பட்டனர். எனினும், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, குறித்த இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர்கள், யாழ்ப்பாணத்துக்கு காலையில் வருகை தந்த போது, விபத்து ஏற்பட்டதாகவும் அதனால் காரை ஓரமாக நிறுத்தி விட்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றதாகவும், விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.