சிவகங்கை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இருக்கையில் ஒருவர் அரிவாளுடன் அமர்ந்தார். இதைக் கண்ட வழக்கறிஞர்கள், ஊழியர்கள் பதறிப் போய் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் விசாரணையின் போது, “காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த முனியசாமி என்பது தெரியவந்தது. இவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரியவந்தது. கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் முனியசாமி கைது செய்யப்பட்டு, ஜாமீன் பெற்றார்.
மேலும் தொடர்ந்து சில வழக்குகளில் தொடர்புடைய அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன்பேரில் இவரை ஆஜர்படுத்திய நிலையில் வாராவாரம் குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் அவர் கையெழுத்திட நீதிமன்றம் வந்தபோது வழக்காடும் இடத்தில் யாரும் இல்லாததால் நீதிமன்றத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இருந்த அரிவாளை எடுத்து வந்து நீதிபதி இருக்கையில் கருப்பசாமி மாதிரி அமர்ந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அந்த நபர் மீது ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீஸ்.