2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக நீரோட்டத்திற்குள் திரும்பிய ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளையும், இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு கரணமாகவிருந்த தமிழரசுக் கட்சியையும் கொண்டதாக காணப்படுகின்றது.
நான்கு கட்சிகளின் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்ற போதும் கட்சி சார்ந்த கட்டமைப்போ அல்லது நிதி, நிர்வாக விடயங்களில் ஒழுங்கான பதிவுகளோ காணப்படவில்லை.
ஒவ்வொரு கட்சிகளும் தனித் தனிக் கட்சிக் கட்டமைப்புக்களையே பேணி வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பெயரால் அதன் வீட்டுச் சின்னத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்றது.
இதனால் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் அதிகமாவே உள்ளது.
தமது கட்சி சின்னத்தை விட்டுக் கொடுத்தமைக்காக இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி தான் என்ற நிலைப்பாட்டில் அதன் தலைமை செயற்பட்டு வருகின்றது.
போர்குற்ற மீறல்கள், மனிதவுரிமை மீறல்கள் என்பன தொடர்பான கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம் முதல் தற்போதுள்ள அரசியலமைப்பு விவகாரம் மற்றும் வடமாகாண சபை விவகாரம் வரை தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவுகள் மக்கள் மத்தியிலும் அதன் பங்காளிக் கட்சிகள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனம் அகிம்சை வழியிலும், அதன் பின் ஆயுத வழியிலும் போராடிய நிலையில் இன்று மீண்டும் அகிம்சைக்கு திரும்பியிருக்கிறது.
கடந்த கால அகிம்சைப் பேராட்ட படிப்பினைகளும், ஆயுதப் போராட்ட படிப்பினைகளும் கண்முன்னே இருந்தும் அந்த படிப்பினைகளை தற்போதைய தலைமைகள் சரியாக கையாளுகின்றதா என்ற கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது. அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைமை நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
இணக்க அரசியல் என்ற பெயரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிரசுக் கட்சி மைத்திரி – ரணில் அரசுடன் சரணாகதி அரசியல் என்ற நிலைக்கு சென்றுள்ளது.
இதன்காரணமாகவே பங்காளிக் கட்சிகளிடத்திலும் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஈபிஆர்எல்எப் கட்சி கடுமையாக விமர்சித்து வந்திருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியும் பிழையாக செல்வதாகவும், மாற்றுத் தலைமை வேண்டும் என்பதையும் அந்தக் கட்சி பகிரங்கமாகவே கூறிவருகின்றது.
இந்த நிலையில் மௌனம் காத்து வந்த ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் வடமாகாண சபை விவகாரத்துடன் தமது மௌனத்தை கலைத்திருந்தன.
பகிரங்கமாக தமிழரசுக்சுக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு அவை ஈபிஆர்எல்எப் கட்சியுடன் இணைந்து சென்றிருந்தன.
அக் கட்சிகள் தாமாகவே அவ்வாறு ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தனவா அல்லது வடமாகாண சபை விவகாரத்தை தமிழரசுக் கட்சி கையாண்ட விதம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி நிலை அவர்களை அவ்வாறு செய்ய தூண்டியதா என்பது வேறு விடயம்.
ஆனால் பங்காளிக் கட்சிகள் மூன்றும் ஒருமித்து செயற்பட முடியும் என்பதை அவை வெளிப்படுத்தியிருந்தன.
தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, பங்காளிக் கட்சிகளின் கூட்டு இணைவு, முதலமைச்சருக்கு அதிகரித்து வந்த ஆதரவு என்பன தமிழரசுக் கட்சியை நிலைகுலையச் செய்திருந்தது.
தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மக்கள் சந்திப்புக்களையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்பதையும் தவிர்க்க வேண்டிய சூழலையும் அது உருவாக்கியிருச்தது.
தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பொது நிகழ்வுகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியிருந்தது.
அதனால் மதபெரியார்கள், பங்காளிக் கட்சித் தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி மற்றும் எதிர்கட்சி இணைந்து ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக ஒரு மாற்றுத் தலைமையோ அல்லது சம்மந்தருக்கு போட்டியாக ஒரு தலைவரோ உருவாகுவதை தமிழரசுக் கட்சியோ அல்லது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனோ விரும்பப் போவதில்லை.
அதன் காரணமாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டு, அவரது செல்வாக்கை இழக்கச் செய்யும் செயற்பாடுகள் முன்னகர்த்தப்படுகிறதா என்று எண்ணவேண்டியுள்ளது.
வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணகள் இடம்பெற்று இரு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அதற்கு சாட்சியங்கள் சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவித்த முதலமைச்சர் ஏனைய இரு அமைச்சர்கள் மீதான விசாரணைகளை நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் கூட்டமைப்பின் தலைவருக்கும், முதலமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பையடுத்து அந்த விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
விரைவில் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க இருப்பதால் விசாரணகள் இடம்பெற்று குழப்பங்கள் ஏற்பட்டால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என சம்மந்தரால் கூறப்பட்டதற்கு இணங்க முதலமைச்சர் அமைதி காப்பதாக பேசப்படுகிறது.
அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் அவருக்கு மக்கள் அலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் முதலமைச்சர் தற்போது எடுத்திருக்கும் நிலையானது அவரும் ஒரு அரசியல்வாதி ஆகிவிட்டாரா என்ற எண்ணத்தை அவரை நம்பிய மக்களிடத்தில் உருவாக்கியும் இருக்கிறது.
மாகாண சபைக்கு கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக அயூப் அஸ்மின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அவர் தனது அமைப்பின் கொள்கையில் இருந்து விலகி ஒரு தமிழரசுக் கட்சி உறுப்பினராகவே செயற்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்தும் தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.
மற்றைய ஆசனத்தை சுழற்சி முறையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு வருடம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சி சார்பாக முல்லைத்தீவில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் அவர்களுக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.
ஆனால், தேர்தல் தோல்வியையடுத்து தமிழர் விடுதலைக் கூட்டனி கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து மேரி கமலா குணசீலன் தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்படுவதுடன் அந்தக் கட்சியின் மாவட்ட மட்ட உறுப்பினராகவும் உள்ளார்.
அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்திற்கு மேலாக மாகாணசபை உறுப்பினராக இருந்தார்.
பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் அவர்களை பதவிநீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரிகமலாவை பதவிநீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை.
இரண்டாவதாக ஈபிஆர்எல் எப் கட்சி சார்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.நடராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதன் பின் ரெலோ அமைப்பு சார்பாக வவுனியா வைச் சேர்ந்த செந்தில்நாதன் மயூரன் அவர்களுக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.
அவரது ஒரு வருடம் நிறைவடைந்த கையுடனேயே, ஜே.ஆரின் பாணியில் பதவிவிலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக்கட்சி, பதவியிலிருந்த மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவிவிலகல் கடிதத்தினை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்ததுடன் அவ்விடத்திற்கு யாழ் வணிகசங்க தலைவர் ஜெயசேகரம் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஜெயசேகரம் வடமாகாண சபைத் தேர்தலில் ஈபிஆர்எல்எப் சார்பாக போட்டியிட்ட போதும் அவர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்தே செயற்பட்டு வந்தார். அந்த நன்றி விசுவாசத்திற்காக மாகாண சபை உறுப்பினர் பதவி கிடைத்தும் இருக்கின்றது.
சுழற்சி முறை ஆசனத்தைப் பொறுத்தவரை இம்முறை அந்த ஆசன பங்கீடு புளொட் அமைப்புக்கு வழங்கப்பட வேண்டியது. புளொட் அமைப்புக்கு வழங்குவதாக தமிழரசுக் கட்சி தலைமை இணக்கமும் தெரிவித்திருந்தது.
ஆனால் மயூரன் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு அவசர அவசரமாக ஜெயசேகரம் தமிழரசுக் கட்சி சார்பாக நியமிக்கப்பட்டமை புளொட் அமைப்பை மட்டுமன்றி பங்காளிக் கட்சிகளையும் சினமடைய வைத்துள்ளது.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு தமிழரசுக் கட்சி எடுத்த நகர்வுக்கு அவர்களால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
பங்காளிக்கட்சிகளும், தமிழரசுக் கடசியின் சில உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்கு சார்பாகவும், அவரது நேர்மையான மக்கள் நலன்சார்ந்த செயற்பாட்டுக்கு சார்பாகவும் செயற்பட்டமை அந்த சிக்கலை உருவாக்கியிருந்தது.
அதனால் தமது உறுப்பினர்களை அதிகரிக்கும் ஒரு திட்டமாகவும், முதலமைச்சர் அணிக்கு எதிரான அணியை பலப்படுத்தும் நோக்கில் தற்போது ஜெயசேகரத்திற்கான பதவி வழங்கப்பட்டுள்ளது.
யாழ் வணிக சங்கத் தலைவரான இவர் வடமாகாண முதலைமைச்சரின் இணைத் தலைமையில் மாபெரும் மக்கள் சக்தியாக எழுக தமிழ் பேரணி நடைபெற்ற போது அதற்கு எதிராக செயற்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறாக தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான கட்சி ஜனநாயகமற்ற செயற்பாடுகள் வலுத்திருக்கும் நிலையிலும், தமிழரசுக் கட்சிக்கு எதிராக மக்களிடத்திலும் விமர்சனங்கள் அதிகரித்து இருக்கும் நிலையிலும் புதன்கிழமை மாலை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகியன் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளன.
இதில் அந்தக் கட்சியின் தலைவர்கள் பங்குபெற்றாத போதும் அக்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் தலைவர்களும், சில மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், முன்னாள் வவுனிய நகரசபை உபநகரபிதா சந்திரகுலசிங்கம், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிவம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்தும் உள்ளன.
தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து காரசாரமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மாதாந்தம் இப்படியான ஒன்றுகூடல்கள் தொடரவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மூன்று கட்சிகளும் கூட்டாக மாவட்ட மட்டத்தில் செயற்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளை பங்காளிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் அதாவது கிராம மக்கள் மட்டத்தில் செயற்படுகின்ற தலைவர்கள் பகிரங்கமாக எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும், அவர்களது ஆதரவு மக்கள் மத்தியிலும் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து எழுந்திருக்கின்ற அதிருப்தி நிலை குறித்து பங்காளிக் கட்சித் தலைவர்களும் பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.
அவர்கள் இந்த நிலையில் தமது கட்சி உறுப்பினர்கள் குறித்தும், மக்கள் குறித்தும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேசப்படும் இந்த சூழலில் தமிழ் மக்கள் விரும்புகின்ற ஒரு தீர்வுத் திட்டத்தை பெற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருகிறது.
தமிழரசுக் கட்சியின் சரணாகதி அரசியலுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய தேவை பங்காளிக்கட்சிகளுகக்கு ஏற்பட்டிருக்கிறது.
உட்கட்சி ஜனநாயகத்தை மதித்து தமது கூட்டு கட்சி பிரச்சனையை தீர்க்க முடியாத கூட்டமைப்பு தலைமை தமிழ் மக்களின் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையிலேயே மாற்றுத் தலைமை பற்றி பேசப்படுகிறது. வடக்கு முதலமைச்சர் மாற்றுத் தலைமையாக வருவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றார்.
அவர் கூட்டமைபின் ஒற்றுமையயை குழைப்பவராக தான் இருந்து விடக்கூடாது என கருதுவதாக தெரிகிறது.
ஒற்றுமை என்ற பெயரில் வலிந்து திணிக்கப்படுகின்ற உப்புச் சப்பற்ற ஒரு தீர்வை தமிழ் மக்கள் ஏற்கத் தான் வேண்டுமா என்பதையும், மக்கள் தமது உரிமைக்காக இழந்த இழப்புக்கள் குறித்தும், அவர்களது கடந்தகாலம் குறித்தும் வடக்கு முதலமைச்சரும் சிந்திக்க வேண்டியவராகவே உள்ளார்.
மறுபுறம் ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய பங்காளிக் கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் பேசக் கூடிய ஒரு இணைத்தலைவராக தமது கட்சி சார்பாக முதலமைச்சரை முன்நிறுத்த முன்வரவேண்டும்.
இணைத்தலைவராக சி.வியை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான நகர்வுகளுக்கு முடிவு கட்டக் கூடிய அல்லது கடிவாளம் போடக் கூடிய ஒரு நிலமை உருவாகும்.
இது தமிழ் மக்கள் நலன்சார்ந்த அரசியல் ஒரு சிலரின் கைகளில் இருந்து மக்கள் மயப்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.
ஆகவே, தனித் தலைமையா, இணைத்தலைமையா, மாற்று தலைமையா என்பதை பங்காளிக் கட்சிகளும், முதலமைச்சருமே முடிவு எடுக்க வேண்டும்.
இவர்கள் எடுக்கப்போகும் முடிவே தமிழ் அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும். அல்லது கிடைப்பதை பெறுவோம் என்ற செயற்பாட்டோடு சரணாகதி அடையும் நிலையே உள்ளது.
நரேன்!!