பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க, உங்களுக்கும் உரிமையிருக்கிறது என்று சமூக ஆர்வலர்களால் உலகம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “ஹோலாபேக்” என்ற இயக்கம் இணையங்களில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், ஒரு நாளின் பத்து மணி நேரத்தில் ஒரு பெண் எத்தனை முறை தொல்லைக்கு ஆளாகிறாள் தெரியுமா? என்ற கேள்வியோடு, ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார்கள் ( https://www.youtube.com/watch?v=b1XGPvbWn0A) வெளியிடப்பட்ட ஒரு நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்கவே இந்த இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம், ரோப் பிளிஸ் என்பவர் பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைக்கு எதிராக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
கூடவே இவரது தோழியும் அடிக்கடி அதைப்பற்றி சொல்ல தீவிரமடைந்து இந்த காணொளி தயாரித்துவிட்டார்.
இதற்கு, தாமாகவே நடிப்பதாக சொல்லி முன்வந்திருக்கிறார் அமெரிக்கவைச் சேர்ந்த நடிகையும் அதெலட்டுமான ஷோசனா பி ராபர்ட்.
கிட்டத்தட்ட பத்து மணி நேரம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில், கையில் இரண்டு மைக்குளை மறைத்துக் கொண்டு நடக்க, அவருக்கு முன்னால் ரோப் காமிராவை மறைத்து கொண்டு சென்று எல்லாவற்றையும் படம் பிடித்திருக்கிறார்.
இதில், ஷோசனா தெருவில் நடந்து செல்லும்போது இளைஞர்கள் பலர் அடிக்கும் கமென்ட்டுகள் தெளிவாய் விழுந்திருக்கின்றன.
எல்லாவிதாமான பாலின வன்முறைகளுக்கும், இந்த தெருக்களில் நடக்கும் வன்முறைதான் ஆரம்பமாக இருந்திருக்கிறது. பெரும்பாலும், ஆண்கள் நிறத்தினால்தான் குற்றம் செய்ய தூண்டப்படுகிறார்கள் என்றும், இவர்களது பத்து மணி நேர உலாவின்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமாக, பெரும்பாலானோர் இதில் பெண்களை தரக்குறைவாக பேசியிருக்கிறார்களாம். நான் அவர்களை கண்டு கொண்டாலும் இல்லையென்றாலும் எனக்கு தொல்லை வந்து கொண்டுதான் இருந்தது என்று சொல்லி இருக்கிறார் ஷோசனா.
இந்த தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை பின் தொடர்வது, அவர்களை தாக்குவது போல் வருவது, தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பது எல்லாம் பெண்களை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் பெரும்பாலும் இருக்கிறது.
பயந்தோமானால், இன்னும் நம் மேல் அதிகமாக தங்களின் சக்தியை பிரயோகிக்க ஆரம்பிப்பர். வயது வரம்பின்றி எல்லா வயதினப் பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர். இவர்களின் ஒரே நோக்கம் பொதுஇடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை குறைக்கவும், இவற்றைப் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான்.
இதுவரை 26 நாடுகளிலிருந்து நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும் இந்த இயக்கம், இதுபோல் பொது இடத்தில் நீங்கள் சந்தித்த வன்முறைகளை ஸ்மார்ட் போன் மூலமாக படமோ, வீடியோவோ எடுத்து அனுப்பவும் சொல்கின்றனர்.
“நாம் யாரென்று காட்டும் உரிமை நமக்கு இருக்கிறது, மற்றவர்களின் கூற்றுப்படி இருக்க வேண்டும் என்றில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் யாருடைய தொலைக்கும் நான் செவிசாய்க்கமாட்டேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாகவே இருக்க முழு உரிமையிருக்கிறது” என்று சொல்கிறார்கள் இவர்கள்.
வன்முறை நடக்கும்போது அமைதியாய் இருந்து விடுகிறோம். யாரும் கவனிக்கவில்லை என்ற தைரியம் அவர்களை இன்னும் இன்னும் சீண்ட ஆர்வத்தை தூண்டுகிறது. அதனை முதலில் தகர்த்தெறிய வேண்டும்.
உங்களின் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் விழிப்புணர்வு அடையவும், அவர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வழி வகுக்கும். யாரும் இதற்கு பயப்பட தேவையில்லை என்று சொல்லியிருக்கும் இவர்களது வலைப்பூவில் ( Blog), ஏராளமான பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்களாம்.