பாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை அணி வெற்றி இலக்கை இலகுவாக எட்டி இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் வெற்றியை ருசித்தது.
இவ் வெற்றியின் மூலம் இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் 1–1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிந்துள்ளது.
இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்ட சசிகலா சிறிவர்தன அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை திக்குமுக்காட வைத்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் தொடரை முழுமையாக தோற்ற இலங்கை மகளிர் அணி, இருபதுக்கு 20 தொடரை வெற்றிகொள்ளும் முனைப்புடன் களமிறங்கியது.
ஆனாலும் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை மகளிர் அணி இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான், 16 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து இலங்கை அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்துவீசி அசத்த பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் சசிகலா சிறிவர்தன 4 விக்கெட்டுக்களையும், குமாரி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்தக் களமிறங்கிய இலங்கை அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இதில் சஞ்சீவனி 20, ஜெயாங் கனி 13, இமல்கா 11, ரெபேகா 19, சசிகலா சிறிவர்தன 6 ஓட்டங்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.