“என் கணவர் என்னை ஏற்க மறுத்த நிலையில், தற்போது என் பெற்றோரிடம் உள்ளேன்.”
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண் சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகரில் தன் கணவர் குடும்பத்தோடு வசித்துவந்தார்.
அப்போது வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தான் படித்த நர்சிங் கல்லூரியின் நிறுவனர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் மாமியார் சிவகங்கை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் துரைராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “சிவகங்கையில் ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் நான் 2018-ம் ஆண்டு படித்துவந்த நிலையில், கல்லூரியின் முதல்வர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அது தொடர்பாக என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதனால் எனது படிப்பை நிறுத்திவிட்டு எனக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, திருமணத்துக்கு அரசு சலுகைகள் பெற கல்லூரியில் உள்ள எனது அசல் சான்றிதழ்களைப் பெறுவதற்குச் சென்றேன். அப்போது கல்லூரியின் முதல்வர் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11-ம் தேதி எனது திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பிறகு எனது உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால், மருத்துவரிடம் பரிசோதனை செய்த போது, நான் மூன்றரை மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதையடுத்து, என் கணவர் வீட்டில் இருந்த என்னை என் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினர். பின்னர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கல்லூரி முதல்வரை கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமையால் நான் கர்ப்பமானது என் மனசாட்சிக்கு புறம்பானது. என் கருவை கலைக்க அரசு மருத்துவமனைக்குச் சென்றேன்.
ஆனால், அரசு மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். என் கணவர் என்னை ஏற்க மறுத்த நிலையில், தற்போது என் பெற்றோரிடம் உள்ளேன். எனவே, எனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எனது கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்து மருத்துவர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கருவை கலைக்க சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.