தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் என்பவரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளார்.
இவர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு நாடுகடத்தப்பவுள்ளார். இவரது புகலிட கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், அவர் தற்போது நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.
நாடு கடத்தல் தொடர்பிலான அறிவித்தல் சாந்தரூபனுக்கு அவுஸ்திரேலியா எல்லை பாதுகாப்புப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த நபர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் உயிராபத்தை எதிர் நோக்கலாம் எனவும், எனவே, அவரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.