“நல்லது, கெட்டது இரண்டையும் ஏத்துக்கக்கூடிய ஆள் நான். உங்க கருத்தியல்படி நான் தவறா விளையாடியிருக்கலாம். பார்வையாளர்கள் என்மீது வெச்ச அனைத்து விமர்சனங்களையும் ஏத்துக்கிறேன்.
பொதுவாக அமைதியா இருக்கிற நான், சில இடங்கள்ல மட்டும் பேசுனத்துக்குக் காரணங்கள் இருக்கு. அதாவது, நான் இல்லாத பிரச்னைகள்ல தலையிட்டுப் பேச விரும்பலை.
பிக் பாஸ் வீட்டுக்குள்ள என்னோட சுயத்தை இழக்க விரும்பல. அதுக்காக நான் சரியா விளையாடினேன்னு சொல்லலை. நானும் தவறுகள் பண்ணியிருக்கேன்!” – `பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான பின்னணியைச் சொல்கிறார், ரித்விகா.
`பிக் பாஸ் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?”
“பிக் பாஸ் சீஸன் 1 நடந்துக்கிட்டு இருந்தப்போ, வைல்ட் கார்ட் ரவுண்டுக்கு என்னைக் கூப்பிட்டாங்க, சரினு சொன்னேன். ஆனா, `அடுத்த நாளே, `நீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகணும்’னு சொன்னாங்க. அப்போ அவங்கக்கிட்ட இரண்டு நாள் டைம் கேட்டேன்.
`டார்ச் லைட்’ படத்தோட ஷூட்டிங் இருக்கிறதா சொன்னேன். அவங்க அதை ஏத்துக்கல. பிறகு, எனக்குப் பதிலாக சுஜா வருணி உள்ளே போயிட்டாங்க. பிக் பாஸ் சீஸன் 2-க்கு நானே அவங்களுக்கு கால் பண்ணி, கலந்துக்க விரும்புறதாச் சொன்னேன். இன்டர்வியூல என் பெர்ஃபாமன்ஸ் பிடிச்சுப் போய் செலக்ட் பண்ணாங்க.”
“வீட்டுக்குள்ள போனவுடனே உங்களுக்கு எந்தப் போட்டியாளரைப் பிடிச்சிருந்தது?”
“ஆரம்பத்துல எனக்கு யாரையுமே தெரியாது. நானும் யாஷிகாவும் `ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’ படத்துல சேர்ந்து நடிச்சிருந்தோம்.
பாலாஜி, ஜனனி, சென்றாயன், மும்தாஜ்… எல்லோரும் சினிமாவுல நடிச்சிருக்கிறதுனால தெரியும். மத்தபடி, ஷாரிக், மஹத், ஐஸ்வர்யா இவங்களை எனக்குத் தெரியாது. முதல் 4 வாரத்திலேயே நான் எலிமினேட் ஆகி வெளிய வந்திடுவேன்னுதான் நினைச்சேன்.
ஏன்னா, அங்கே நண்பன்னு சொல்லிக்கிறதுக்கு ஒருத்தர்கூட எனக்குக் கிடையாது. சப்போர்ட் இல்லை. 8 வாரங்களுக்குப் பிறகுதான் எல்லோர்கிட்டேயும் பேச ஆரம்பிச்சேன். ரம்யாவை எனக்கு பெர்சனலா ரொம்பப் பிடிக்கும். எல்லோரிடமும் அவங்க நல்லவிதமா பேசுவாங்க; பழகுவாங்க.”
`மத்தவங்ககூட பழகுறதுக்கு ஏன் உங்களுக்கு வெகுகாலம் ஆச்சு?”
“என்னதான் எல்லோரும் செலிபிரிட்டியா இருந்தாலும், பிக் பாஸ் வீட்டுக்குள்ள அவங்க போட்டியாளர்கள்தாம்! அவங்களைப் பார்த்து பிரமிச்சுப் போகணும்னு அவசியம் கிடையாது. எனக்குச் சாதாரணமாவே ஒருத்தர்கூட பழகுறதுக்கு டைம் ஆகும். வீட்டுக்குள்ளேயும் நான் அப்படித்தான் இருந்தேன். என் இயல்பு அதான்.”
“வீட்டுல நடந்த பிரச்னைகளுக்குக்கூட ரித்விகா ரியாக்ட் பண்ணலையே?!”
“பிரச்னை நடந்தப்போ நான் ரியாக்ட் பண்ணாதது என் தவறுதான். குறிப்பா, ‘ராணிமகாராணி’ டாஸ்க்ல நான் ஐஷ்வர்யாவை எதிர்த்துப் பேசியிருக்கணும். ஏன்னா, பாலாஜி அண்ணா அந்தச் சமயத்துல எனக்கு நல்ல நண்பரா இருந்தார். ஐஸ்வர்யா குப்பையைக் கொட்டியதுக்கு நான் குரல் உயர்த்தியிருக்கணும். `ராணி என்ன செஞ்சாலும் அதை மக்கள் ஏத்துக்கணும்’ங்கிற மனநிலையில இருந்துட்டேன்.”
“பிக் பாஸ் முதல் சீஸனைவிட இரண்டாவது சீஸன்ல வெளிப்படைத்தன்மை இல்லைனு சொன்னது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க”
“பிக் பாஸ் முதல் சீஸன்ல போட்டியாளர்களுக்கு மெச்சூரிட்டி லெவல் அதிகமா இருந்துச்சு. அவங்களுக்குள்ள நல்ல புரிதல் இருந்துச்சு. முக்கியமா, சினேகன் எல்லா விஷயத்திலும் தலையிட்டுப் பிரச்னைகளைத் தீர்த்து வெச்சார். இரண்டாவது சீஸன்ல `யார் என்ன பண்ணா நமக்கென்ன’னு எல்லோரும் இருந்தாங்க.
டாஸ்க் பண்ணும்போது நாங்க எல்லோரும் சின்னக் குழந்தைங்க மாதிரி அடிச்சுப் பிடிச்சு விளையாடினோம். எஜமான் டாஸ்க்ல பொண்ணுங்க சூப்பரா விளையாடினோம். நாங்க யாரும் பசங்களை எதுக்காகவும் கட்டாயப்படுத்தல. வீட்டுல இருக்கிற வேலைகள் அனைத்தையும் நாங்களே செஞ்சுக்கிட்டோம்.”
“வீட்டுக்குள்ளே பிடிவாதமா இருந்தது யார்?”
“மும்தாஜ்தான். சில விஷயங்களை சொன்னா கேட்டுப்பாங்க. பல விஷயங்கள்ல பிடிவாதமா இருப்பாங்க. குறிப்பா, டீ போடுற விஷயத்துல! இந்தச் சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கணும்னு எனக்குத் தெரியலை.”
“அதிகமா புறம் பேசிய நபர் யார்?”
“வைஷ்ணவினு எல்லோரும் சொன்னாங்க. ஆனா, டேனியல்தான் அதிகமா புறம் பேசினார். ஆனா, டாஸ்க் விளையாடும்போது மத்தவங்க யோசிக்காத பாயின்ட்ல இருந்து யோசிச்சு விளையாடி, ஜெயிச்சிடுவார். டேனி ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு போட்டியாளரும்கூட!”
“நல்ல என்டர்டெயினர் யார்?”
“பாலாஜி அண்ணா, வைஷ்ணவி ரெண்டுபேரும்தான்!. இவங்கதான் ஏதாவது காமெடி பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நமக்கு நேரம் போறதே தெரியாது. சென்றாயன் அண்ணா டென்ஷன் ஆகுறதுகூட ஜாலியாதான் இருக்கும்.”
“உங்களைத் தவிர வேற யார் டைட்டில் வின்னர் ஆக தகுதியானவங்கனு நினைக்கிறீங்க?”
“ஜனனி, யாஷிகா, ஐஸ்வர்யா!.”
“வைல்ட் கார்ட் என்ட்ரி உங்களுக்கு எப்படி இருந்தது?”
“ `நிகழ்ச்சிக்கு நடுவுல வேற ஒருத்தர் வந்துட்டாங்களே?’ங்கிற எண்ணம் எனக்கு வந்ததில்லை. அவங்களால நாம மாறப்போறதில்ல. விஜி வைல்ட் கார்டுக்குத் தகுதியான ஒரு ஆள்தான். உள்ளே இருக்கும்போது ஒருநாளைக்கூட அவங்க வீணடிக்கலை. டாஸ்க் எல்லாத்தையும் பிரமாதமா பண்ணாங்க.”
நீங்களும் ஐஸ்வர்யாவும் வீட்டுல இருந்த கடைசி நாள் எப்படி இருந்தது?”
“கடைசி நாலு பேர் இருந்தப்போவே, எல்லோரும் ஒண்ணாதான் இருப்போம், சமைப்போம், சாப்பிடுவோம், பேசுவோம், விளையாடுவோம். இருந்தாலும், அப்பப்போ தனிமையை உணர்ந்தோம்.
நேரம் போறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஜனனி மற்றும் விஜி எலிமினேட் ஆனதும், இன்னும் அழுத்தமா உணர்ந்தோம். ஜனனியோட எலிமினேஷன் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு.
இத்தனை நாளா நல்லவிதமா விளையாடிக்கிட்டு இருந்த ஒருத்தரை கண்ணைக் கட்டிக் கூட்டிட்டுப் போனது அதிர்ச்சியா இருந்துச்சு.
அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர்றதுக்குள்ள விஜி வெளியே போயிட்டாங்க. கடைசியா நானும் ஐஸ்வர்யாவும் இருந்தப்போ, ரொம்ப டென்ஷனா இருந்தது. கடைசி நாளை அமைதியா இருந்தே கடத்திட்டோம்.”
“தமிழர்களுக்கும், மற்ற மாநிலத்தவர்களுக்கும் அப்படியென்ன சண்டை?”
“ `தமிழ்ப் பொண்ணும் அந்த மேடையில நிற்கணும்; நீங்களும் நில்லுங்க’னு நான் சொன்னதை பலரும் தவறா புரிஞ்சுக்கிட்டாங்க. தமிழ் நாட்டுல பொறந்து, தமிழ் மண்ணுல வளர்ந்த யாரும் மற்ற மாநிலத்தவர்களை அந்நியமா நினைக்க மாட்டாங்க. `வந்தாரை வாழவைக்கும் ஊர் தமிழ்நாடு’. யாரையும் நாம விரட்டி அடிச்சது கிடையாது.
தமிழ் மக்கள் மற்ற மொழி மக்கள்கிட்ட பாசமா இருக்கும்போது, ஒரு போட்டியில நான் மட்டும் எப்படி அவங்களை ஒதுக்குவேன்?! `நீங்களும் இருங்க, நாங்களும் இருக்கணும்’னு சொன்னேனே தவிர, `நாங்க மட்டும்தான் இருக்கணும்’னு ஒருபோதும் சொன்னதே இல்லை.”
`வீட்டுல இருந்து வெளிய வந்ததும் யார்கிட்ட பேசுனீங்க?”
“ஓவியாகிட்ட இருந்துதான் முதல் கால் வந்தது. நான் நல்லா விளையாடியிருக்கிறதாவும், எதிர்காலத்துக்கு வாழ்த்துகளும் தெரிவிச்சாங்க. ஆரவ் ட்விட்டர்ல மெசேஜ் பண்ணி வாழ்த்தினார். ரெண்டு நாள் யார்கிட்டயும் ஃபோன் பேசக் கூடாது, நல்லாத் தூங்கணும்னு நினைச்சேன். ஆனா, தூக்கம் வரலை; பிக் பாஸ் வீட்டை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். பலபேர் வீட்டுக்கு வந்து வாழ்த்தினாங்க.!”