வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை மகன் என தமிழ் வயோதிபத் தாய் ஒருவர் அழைக்க, அவரது அன்பில் உருகிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் அந்தப் பெண்ணின் காலில் வீழ்ந்து வணங்கிய சம்பவம் நேற்று முன்தினம் வவுனியாவில் இடம்பெற்றது.
வன்னிப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சேவையைப் பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வயோதிபத் தாயொருவர் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நன்றி தெரிவித்தார். குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பத்திற்கு பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.
“அவர் மக்களுக்கு நல்ல வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளார். பிரதிப் பொலிஸ்மா அதிபரால் எனது பிள்ளைகளின் நலனுக்காக வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது.
அவரை எனது மகனுக்குச் சமனாகவே என்னால் நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் குடும்பத்திற்கு அவர் செய்த சேவையை மறக்க முடியாது“ என்று தெரிவித்து கண்ணீர் மல்கினார்.
இதை கேட்டதும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னக்கோன் எழுந்து அந்தத் தாயை அரவணைத்து, கண்கலங்கினார். யாரும் எதிர்பாராத விதமாக தாயின் காலில் வீழ்ந்து வணங்கினார். இந்தச் சம்பவம் கலாச்சார மண்டபத்தில் கூடியிருந்தவர்களை மனதுருகச் செய்தது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த வயோதிப தாயே அவர். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவரது பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து வன்னிப்பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் பொலிஸாரின் பங்களிப்புடன் அவருக்கான நிரந்தரவீடு அண்மையில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.