இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை.வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள்.
வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம்.
சதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன? யாரால், ஏன் அவை தோற்றுவிக்கப்பட்டன?
இந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன? விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அதைவிட அதிர்ச்சிகரமானது, புலிகளோடு நெருங்கிய தொடர்புடைய சிலர் இறுதிவரை சரியாக விசாரிக்கப்படாதது.
“இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்… “தலமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமன் எழுதிய புதிய தொடர் இலக்கியா வாசகர்கள் உங்களுக்காக..
முன்னுரை
கொலையும் படுகொலையும் ஒன்றல்ல. படுகொலைக்கான காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பழி வாங்குவதற்காக. வெகுமதி பெறுவதற்காக. எதிரி என்று கருதப்படுபவரை நீக்குவதற்காக. லட்சியத்தை நிலைநாட்டுவதற்காக. சித்தாந்தத்துக்காக.
மகாத்மா காந்தி, கென்னடி, மார்ட்டின் லூதர் கிங், முஜிபுர் ரஹ்மான் என்று சரித்திரத்தில் பதிவான, சரித்திரத்தை உலுக்கிய படுகொலைகள் ஏராளம்.
இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் பழிவாங்கும் வன்மத்தைக் காட்டிலும் அரசியலே பிரதானமாக இருந்தது. காந்தி, இந்திரா, ராஜிவ். இந்தியாவை உலுக்கியெடுத்த மூன்று பிரதான படுகொலைகள் இவை.
ஜனவரி 30, 1948 அன்று நாதுராம் கோட்ஸேவால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திரா காந்தி அவருடைய சீக்கியப் பாதுகாவலர்களால் அக்டோபர் 31, 1984 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஞ்சாபில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் அதிரடிக்குப் பழிவாங்கும் வகையில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இந்திராவின் மகன், ராஜிவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று அரசியல் இன்னமும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், மற்ற இரு படுகொலைகளைக் காட்டிலும் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது, இந்தியா நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது ஒரு முரண்நகை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசமான இந்தியா, தடுமாறிய தருணம் அது.
இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட தருணமும்கூட. ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக நான் நியமிக்கப்பட்டேன்.
இந்தியா சந்தித்த மிகப் பெரிய வழக்கு அது. உலகளவில்கூட, இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழக்கில் ஈடுபட்டிருந்த காலத்தில், ஏகப்பட்ட சிக்கல்களை, சவால்களை, புதிர்களை நான் சந்திக்கவேண்டியிருந்தது.
அந்த அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்கமுடியாது. மிகக் கவனமாகத் திட்டமிட்டு, மிகத் துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்ட படுகொலை அது.
ராஜிவைக் கொன்றது ஏன் என்பதற்கு வலுவான காரணங்கள் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்படுகின்றன. இந்திய அமைதிப்படை (ஐ.பி.கே.எஃப்) இலங்கையில் நிகழ்த்திய ஆபரேஷன் பவானுக்குப் பழி தீர்க்கவேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்று ராஜிவ் பிரதமர் ஆகியிருந்தால், தனி ஈழம் சாத்தியமாகாது. எனவே, அவர் நீக்கப்படவேண்டியவர். எனவே, நீக்கப்பட்டார்.
கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்பதைக் கண்டுபிடித்த பிறகும், ஆதாரங்கள் அகப்பட்டபிறகும், வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகும், பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலே இருந்தன.
இன்னமும்கூட, சில சந்தேகங்கள், சந்தேகங்களாகவே நீடிக்கின்றன. சில குழப்பங்கள் தீர்க்கப்படாமலே கிடக்கின்றன. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பலர் விசாரிக்கப்படவில்லை.
சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலர், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை ஆரம்பித்த தினம் தொடங்கி, வழக்கு முடிவுக்கு வந்த தேதி வரையிலான அத்தனை முக்கிய விவரங்களையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.
சில முக்கிய புகைப்பட, ஆவண ஆதாரங்களை ஆங்காங்கே இணைத்துள்ளேன். விசாரணை அதிகாரி என்னும் முறையில், இந்த வழக்கு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறேன்.
கே. ரகோத்தமன்
1. செய்தியாக வந்த குண்டு
பொதுவாக பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கு இரவு பத்தரை மணி பெங்களூர் மெயிலைத்தான் விரும்புவேன். ஏறிப் படுத்துவிட்டால் நிம்மதியாகத் தூங்கலாம்.
விடியும் நேரம் சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும். பதற்றமின்றி அப்போதும் தூங்கலாம். ரயில்வே ஊழியர்கள் வந்து எழுப்பி இறக்கி அனுப்பி வைப்பார்கள். சுகமான பயணம். நிம்மதியான தூக்கம்.
வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டு அலுவலகம் போனால் பயணக் களைப்பு சற்றும் தெரியாது. அன்றைக்கும் அப்படித்தான். ஒரு பழைய கேஸ் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தேன். போன வேலை முடிந்ததும் இரவு பெங்களூர் மெயிலில் ஏறிப் படுத்தேன்.
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி. வண்டி கிளம்பியதுதான் தெரியும். தூங்கிவிட்டேன். காலை சென்னை சென்ட்ரலுக்கு வண்டி வந்து நின்று இறங்கியபோது சட்டென்று என்னவோ புதிதாகப் பட்டது.
ரயிலில் இருந்து இறங்கிச் சென்றவர்களைத் தவிர, ரயில் ஏற வருகிற மக்கள் யாரையுமே காணோம். போர்ட்டர்கள்? பிளாட்பாரக் கடைகள்? அட, யாராவது ரயில்வே ஊழியர்கள்? என்ன ஆயிற்று சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு? மெல்ல நடந்து வெளியே வந்தேன்.
வாசலில் எப்போதும் க கார் நிற்கும் இடத்தில், காரையும் காணோம், டிரைவரையும் காணோம். அடக்கடவுளே, நான் எப்படி கேகே நகர் சிபிஐ குவார்ட்டர்ஸுக்குப் போய்ச் சேருவேன்? என்ன சார், எதாவது பிரச்னையா? கடந்து போன ஒரு ரயில்வே ஊழியரின் தோள் தொட்டுச் சட்டென்று கேட்டேன்.
திரும்பியவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. ஏதோ அவசர காரியத்தை முடித்துவிட்டு எங்கோ ஓடத் தவிக்கிற பதற்றம். ‘ஆமா சார்! ராஜிவ் காந்திய கொன்னுட்டாங்க!’ என் கார் ஏன் வரவில்லை என்பது புரிந்துவிட்டது.
இன்றைய பொழுது அசாதாரணமாக மட்டுமே கழியப்போகிறது. ஏதாவது வண்டி கிடைக்குமா என்று பார்த்தபடியே சாலையில் நடக்கத் தொடங்கினேன்.
பஸ்கள் ஓடவில்லை. கார்கள் கிடையாது. ஆட்டோ இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக டூ வீலர்கள் மட்டும் கடந்து போயின. யாரையாவது கைகாட்டி நிறுத்தி ஏறிச் செல்வது தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது. நிறுத்தலாமா என்று யோசித்தபடியே எழும்பூர் வரை நடந்துவிட்டேன்.
அதற்குமேல் நடக்க முடியாது என்று தோன்றிவிட்டது. ஒரு பி.சி.ஓவில் நுழைந்து டிராவல் ஏஜென்சி வைத்திருக்கும் என் நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். எக்மோரில் இருக்கிறேன். நான் வீட்டுக்குப் போயாக வேண்டும். ஏதாவது உதவி செய்யுங்கள்.
நண்பர் கார் அனுப்புவது கஷ்டம் என்று சொன்னார். எங்கும் கலவரம். ஓடுகிற வண்டிகளையெல்லாம் அடித்து நொறுக்குகிறார்கள். யார்? தெரியாது. கலவரக்காரர்கள். அவ்வளவுதான்.
சரி, ஒரு டூ வீலராவது அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் நண்பர் யாரையோ பிடித்து அனுப்பி வைத்தார்.
கேகே நகர் சிபிஐ குவார்ட்டர்ஸுக்கு நான் வந்து சேர்வதற்குள் ஒருவாறு எனக்கு நிலவரம் புரிந்துவிட்டிருந்தது.
தமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூரில் கொன்றுவிட்டார்கள். குண்டு வெடித்திருக்கிறது.
அவரோடு சேர்த்து வேறு பலரும் பலி. காயமுற்றோர் இன்னும் நிறைய. தேசத்தை ஏன், உலகத்தையே அதிரச் செய்த அந்த மாபெரும் படுகொலைச் சம்பவம் நடந்த இரவு, எந்த விவரமும் தெரியாமல் நான் பெங்களூர் மெயிலில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன்.
நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதிலும் ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது. அன்றொருநாள்தான் உறக்கம்.
அதுவும் நிம்மதியான உறக்கம். நான் சென்னையில் கால் வைத்த மே 22ம் தேதி தொடங்கி, வழக்கு விசாரணை முடிகிற வரைக்கும் தூக்கமாவது ஒன்றாவது?
மிஸ்டர் ரகோத்தமன், சென்னை வந்து சேர்ந்துவிட்டீர்களா? உடனே சிபிஐ தலைமையகத்துக்குப் புறப்பட்டு வரவும். குளித்துவிட்டு, அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடினேன்.
சாஸ்திரி பவன். காத்திருந்த சக டி.எஸ்.பிக்கள், மேலதிகாரிகள், மேலுக்கு மேலதிகாரிகள், அனைவரிடமும் பதற்றம் இருந்தது.
சம்பவம் அளித்த அதிர்ச்சி சற்றும் குறையாத பதற்றம். திட்டமிட்ட படுகொலை. அது ஒன்றுதான் சந்தேகமில்லாத ஒரே விஷயம்.
மற்றபடி யார் செய்தார்கள், எத்தனை பேர், எதற்குச் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள், மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம், யார் செய்யப்போவது எதுவும் தெரியாது. யாருக்கும் தெரியாது.
டெல்லியிலிருந்து உயரதிகாரிகள் வருகிறார்கள், காத்திருக்கவும் என்று மட்டும் தகவல் தரப்பட்டது. காத்திருந்தோம். நான் அதற்குமுன் கொலை வழக்குகளில் அதிக அனுபவம் பெற்றவன் அல்லன்.
பொருளாதாரக் குற்றப் புலனாய்வில்தான் பல்லாண்டு காலம் இருந்து வந்திருக்கிறேன். லஞ்ச ஊழல் வழக்குகள். வரி ஏய்ப்பு வழக்குகள். நிதி மோசடி வழக்குகள்.
தற்செயலாக பெங்களூரில் நடந்த ஒரு வழக்கறிஞர் கொலை வழக்கில் புலனாய்வு செய்யச் சொல்லி என் மேலதிகாரி உத்தரவிட (ரஷீத் கொலை வழக்கு என்னும் அந்தப் புகழ் பெற்ற வழக்கில், கர்நாடக மாநில காவல் துறை அதிகாரிகள் முதல், முன்னாள் அமைச்சர் ஜாலப்பா வரை பலபேர் சிக்கினார்கள் என்பது தனிக்கதை), அதை வெற்றிகரமாக நடத்தி முடித்ததுதான் நான் ஈடுபட்ட ஒரே கொலை வழக்கு.
அந்த வழக்கை நான் விசாரித்து, முடிவை நோக்கி நகர்ந்த விதம்தான் ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக என்னைத் தேர்வு செய்ய வைத்திருக்கிறது என்பது பின்னால் எனக்குத் தெரிந்தது.
ஒரு பெரிய தலைவரின் படுகொலை ஏற்படுத்திய அதிர்ச்சியுடன் வழக்கினுள் நுழைந்தேன். அடுத்தடுத்து எத்தனை எத்தனை அனுபவங்கள்!
ஒன்றை ஒன்று தூக்கிச் சாப்பிடும்படியான திடுக்கிடும் அனுபவங்கள்.
தமிழகமெங்கும் பரவி, மிக வலுவாகக் கால் ஊன்றி, ஒரு பெரிய சதித்திட்டத்தைச் சற்றும் பிசகாமல் செய்து முடிக்குமளவுக்கு வலுவான விடுதலைப் புலிகள் என்னும் இயக்கத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதைக் காட்டிலும், நமது காவல் புலனாய்வு அரசு அதிகார நீதித் துறைகளின் சகல பரிமாணங்களையும் ஆழ அகலங்களையும், அவரவரது பிரத்யேக நியாய அநியாயங்களையும் புரிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பு என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய விஷயம் என்பேன்.
இந்தியாவில் மூன்று மாபெரும் படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முதலாவது, மகாத்மா காந்தி படுகொலை. அடுத்தது, இந்திரா காந்தி படுகொலை. மூன்றாவது இது. ராஜிவ் காந்தி படுகொலை.
முதலிரண்டு வழக்குகளில் அதிக முடிச்சுகள் கிடையாது. நேரடிக் காரணங்கள். நூல் பிடித்த மாதிரி செய்தவர்களையும் செயலுக்கான நோக்கத்தையும் நெருங்கிவிட முடிந்தது.
ராஜிவ் படுகொலையைப் பொருத்தவரை, புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று முதல் முதலில் உலகைக் காணும் பாவனையுடன்தான் சிபிஐ வழக்கை அணுகத் தொடங்கியது.
பணி எனக்குத் தரப்பட்டது. அளித்தவர், அன்றைய சிபிஐ இயக்குநர் ராஜா விஜய் கரன். என்னிடம்தான் அந்தப் பொறுப்பை அளிக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்திச் சொன்னவர்கள் அன்றைய சிபிஐயின் கூடுதல் இயக்குநர் எஸ்.கே. தத்தா மற்றும் டி.ஐ.ஜி எஸ். ரமணி ஆகியோர்.
அப்படித்தான் நான் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாகப் பதவியமர்த்தப்பட்ட டி.ஆர். கார்த்திகேயன் ஐ.பி.எஸ் அவர்களிடம் ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்ற வாய்ப்புப் பெற்று சென்று இணைந்தேன்.
தொடரும்..(தொடர்ந்து வாசியுங்கள் பல சுவையான தகவல்களுடன் தொடர்கிறது இத்தொடர்)
(தொகுப்பு:கி.பாஸ்கரன்-சுவிஸ்)