இலங்கையின் தேர்தல்களில் சீனாவின் அநாவசியமான தலையீடுகள் குறித்து அரசாங்கம் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீன நிறுவனம் வழங்கிய நிதி குறித்து பரந்தளவில் விசாரணைகளை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது.
தேசிய அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளைப் பெற்று வெளிநாடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குறித்த நிதியை கண்டறியும் நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு சீன நிறுவனம் வழங்கிய 112 கோடி ரூபா
குறித்து அரசாங்கம்
கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிதி ஐக்கிய அரபு எமிரேட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை வினாவியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரிய கடிதம் ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஊடாகவே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கப்பெற்ற இந்த நிதி ஐக்கிய அரபு எமிரேட்டில் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் மிக நெருங்கிய உறவுகளை கொண்டிருந்த சீனா 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி நிதி வழங்கியுள்ளது. 7.6 மில்லியன் டொலர்களை சீனா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை ஒரே தடவையில் வழங்காது தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பதாக 3.7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 6 ஆயிரத்து 78 ஆயிரம் டொலர்களை தேர்தல் பரப்புரைக்கு தேவையான பொருட்கள் அச்சிடுவதற்காகவும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2 ஆயிரத்து 97 ஆயிரம் டொலர்கள் தேர்தல் பரப்புரைகளை மையப்படுத்தி ஆதரவாளர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல கட்டங்களாகவே சீனா நிதியை வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
இதனடிப்படையில் சர்வதேச தரப்பு ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற மிகவும் நம்பிக்கையான தகவலின் அடிப்படையிலேயே நிதி பதுக்கப்பட்ட இடம் குறித்து விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதே போன்று நாட்டின் தேர்தல்களில் அநாவசியமாக தாக்கம் செலுத்தும் வகையில் செயற்பட்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதி வழங்கிச் செயற்பட்ட குறித்த சீன நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரை தேசிய அரசாங்கம் திருப்பியனுப்பியுள்ளது.
இதே வேளை சீன நிறுவனம் மஹிந்த ராஜபக்வின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கியமை குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த 25 ஆம் திகதி செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியின் அடிப்படையாகக் கொண்டு பரந்தளவில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.