வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்பு அரசியல் கட்சிகளிடையே தொற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும், அவை எதற்குள்ளேயும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், அதிகம் மௌனமாகிப் போனவர் அவர் தான்.
2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரட்டை அர்த்தத்துடன் வெளியிட்ட அறிக்கையே, அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இன்று வரை தொடருகின்ற முரண்பாடுகளுக்குப் பிரதான காரணம்.
அதற்குப் பின்னர் தான், அவரை வீழ்த்துகின்ற சூழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதனை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்கமாகவே கூறியுமிருந்தார்.
2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், நடக்கப் போகின்ற முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற கேள்வி உள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைத்திருந்தால், உள்ளூராட்சித் தேர்தல் களத்தின் நிலையை முற்றாகவே மாற்றியமைத்திருக்க முடியும் என்றே பலரும் கருதுகின்றனர்.
அதாவது, தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயார்படுத்த அவர் இணங்கியிருந்தாரேயானால், இப்போது போன்றில்லாமல், தமிழ்த் தேசிய கோசத்துடன் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை இரண்டாகவே இருந்திருக்கும் என்பது பலரதும் கணிப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவு பெற்ற அணியுமே பிரதான சக்திகளாக மோதியிருக்கும். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வலுவான போட்டியாகவும் அமைந்திருக்கும்.
தமிழ் மக்கள் பேரவை, தேர்தலில் நேரடியாக ஈடுபடுவதை – அல்லது தேர்தலில் போட்டியிடும் தரப்புகளை ஆதரிப்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன், விரும்பவில்லை. அதனால் தான், கஜேந்திரகுமார்- சுரேஸ் பிரேமச்சந்திரன் அணிகள் பிரிந்து போயின.
எவ்வாறாயினும், சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த அணியில் இருந்து விலகி, ஆனந்தசங்கரியுடன் இணைந்து கொண்டமைக்கு, கூட்டமைப்புக்கு எதிரான பலமான அணியொன்று உருவாவதைத் தடுக்கும் இந்தியாவின் சதியே என்றும் சிலரால் கூறப்படுகிறது.
இதுபோன்ற கருத்துக்கள் பரவினாலும் கூட, முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாற்று அணிக்குத் தலைமையேற்கத் துணிந்திருந்தாரேயானால், தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பிரவேசத்துக்கு அவர் பச்சைக்கொடி காண்பித்திருந்தாரேயானால்- நிச்சயமாக, சுரேஸ் பிரேமச்சந்திரனால் ஆனந்தசங்கரியின் பக்கம் நகர்ந்திருக்க முடியாது.
அவ்வாறு நகர்ந்திருந்தாலும், அதற்கு தகுந்த நியாயத்தை அவரால் கூற முடியாமல் இருந்திருக்கும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையை அரசியலில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று எடுத்த முடிவு, மாற்று அணி ஒன்றுக்கான களத்தையும் தற்காலிகமாக மூடியிருப்பதுடன், இந்த உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்புகளில் இருந்தும் அவரை விலக்கி வைத்திருக்கிறது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறித்து தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் என்ன தான் விமர்சனங்களை முன்வைத்தாலும், வடக்கில் அவருக்கான ஆதரவுத் தளம் ஒன்று இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
அவ்வாறான ஒருவர் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களை எவ்வாறு வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன்- தமிழரசுக் கட்சியுடன் முரண்பாட்டு நிலையில் இருந்து வந்த விக்னேஸ்வரன் இப்போது, அந்த நிலையில் இருந்து சற்று பின்வாங்கியிருக்கிறார்.
அவ்வப்போது சில மறைமுக சாடல்களை வெளிப்படுத்தினாலும், வெளிப்படையாக அவர் மோதலுக்குத் தயாராக இருப்பது போல காட்டிக் கொள்வில்லை.
அவரது இந்த அணுகுமுறையே, அவரை மாற்றுத் தலைமையாக முன்னிறுத்த முயன்ற தரப்பினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இப்போது, மாற்றுத் தலைமையை உருவாக்கும் கனவில் இருப்பவர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு தெரிவாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் சில கருத்துக்களையும் முன்வைத்திருந்தார். ரெலோ பிரிந்து சென்று தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த சூழலில், அதுபற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர் வேண்டா வெறுப்பாக, பிரிந்து போனவர்கள் திரும்ப வருவார்கள், ஒன்றாக போட்டியிடுவார்கள் என்று மாத்திரம் கூறிவிட்டு நழுவினார்.
ஆனாலும், பின்னர் அன்று மாலையே செய்தியாளர்களிடம் தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
அதன் போது அவர், பிளவுக்கான காரணத்தை சூசகமாக வெளிப்படுத்தியதுடன், அது சரி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளையும் மறைமுகமாகவே கூறியிருந்தார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்புக்கும்,
அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி, யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார்.
சுயநலம் மேலோங்கும் போதே பிளவுகள் ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியதுடன், அத்தகைய பிளவுக்கு இரண்டு முன்னுதாரணங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.
முதலாவதாக, கொள்கைக்காக தந்தை செல்வா, தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து, சென்று புதிய கட்சியை உருவாக்கிய உதாரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாவதாக, போர் நிறைவடையும் தறுவாயில் சுயநலக் காரணங்களுக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர் என்று மற்றொரு காரணத்தையும் கூறியிருந்தார்.
கொள்கைக்காக, சுயநலக்காரணங்களுக்காக பிளவுகள் ஏற்படுவது வழக்கம் என்றும் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளுக்கான காரணத்தை நீங்களே கண்டறியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, அவர் சுயநலக் காரணங்களுக்காக ஏற்படும் பிளவுகளை, அதே சுயநலன்களே சரி செய்வதற்கும் உதவக் கூடும் என்றும் கூறியிருந்தார்.
பிளவுபடுத்தலினால் இருப்பை இழக்கும் ஆபத்துகள் இருப்பதால், ஒன்றுபடுவார்கள் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதனை விபரிக்கப் போய் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை தவிர்த்திருந்தார்.
கூட்டமைப்புக்கான தனது ஆதரவு நிபந்தனைக்குட்பட்டது என்பதை இந்தக் கருத்தின் ஊடாக அவர் வலியுறுத்தியிருந்தார்.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கும் நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாருக்காகவும் பரிந்து பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவரை முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தது. எஞ்சியுள்ள பதவிக்காலத்தை முரண்பாடுகளைக் கடந்து கூட்டமைப்புடன் பயணிக்கும் முடிவில் முதலமைச்சர் இருப்பதாகத் தெரிகிறது. எனவே அவரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்ய முடியாது.
அதுபோலவே, ஆனந்தசங்கரி தலைமையிலான கூட்டணியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இருந்தாலும், அந்தக் கூட்டமைப்பின் கொள்கைகள், முதலமைச்சரின் கொள்கைகளுடன் ஒத்துப் போகக் கூடியதல்ல.
ஒன்றாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஸ் பிரேமச்சந்திரனும், உள்ளூராட்சித் தேர்தலுக்காக களமிறங்கிய பின்னர் அக்கப்போரில் ஈடுபட்டதும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
ஆக, இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவை வெளிப்படுத்த முடியாத நிலையில் ஒரு நடுநிலைத் தரப்பைப் போல இருக்கவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரும்புவதாகத் தெரிகிறது.
ஏறச் சொன்னால் ஒருவருக்குக் கோபம், இறங்கச் சொன்னால் இன்னொருவருக்குக் கோபம் ஏற்படும். எனவே, இந்தக் கட்டத்தில் அமைதியாக- ஒதுங்கியிருப்பதே மேல் என்று அவர் அமைதி காக்க முனையலாம்
ஆனாலும், தன்னைச் சுற்றி ஓர் ஆதரவாளர் படையை வைத்துக் கொண்டிருக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை வழிப்படுத்தாமலும் இருக்க முடியாது.
2015இல் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள் என்று அறிக்கை வெளியிட்டது போல எதையாவது ஓர் அறிக்கையை அவர் கடைசி நேரத்தில் வெளியிடலாம். ஆனாலும், அது, 2015 இல் வெளியிடப்பட்டது போல, இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஏனென்றால், 2015ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே வருமாறு வெளியிடப்பட்ட அறிக்கை, அந்த தேர்தலில் தாக்கத்தை செலுத்தவில்லை. எனவே அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்.
அத்துடன் தன்னை யாரும் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் முனைவார் போலவே தெரிகிறது.
-கபில்-