யாழ்.நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருட முற்பட்ட நபரை அப்பகுதியில் நின்றவர்கள் மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்.கஸ்தூரியார் வீதியில் நேற்று (04) திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றுக்கு செல்வதற்காக அருகில் உள்ள கடையொன்றின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
சில நிமிடங்களில் அந்த மோட்டார் சைக்கிளை வேறொருவர் உருட்டி செல்வதை அருகில் இருந்த கடைகார்கள் கண்ணுற்று, மோட்டார் சைக்கிளை உருட்டி செல்பவரிடம் விசாரித்துள்ளனர். அதன் போது அவர் தனது மோட்டார் சைக்கிள் எனவும், எரிபொருள் முடிவடைந்தமையால் உருட்டி செல்வதாக தெரிவித்துள்ளார்.
அவ்வேளை அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அது தனது மோட்டார் சைக்கிள் என உரிமை கோரிய போது, மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர், தனது மோட்டார் சைக்கிள் என உரிமையாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதை அடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தனது மோட்டார் சைக்கிள் பத்திரங்களை எடுத்து அங்கிருந்தவர்களிடம் காண்பித்த போது, திருடி சென்றவர் அங்கிருந்து தப்பியோட முயன்ற வேளை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.