ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளைத்தாண்டி சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த வழக்கு பற்றி அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளைக் கண்முன் நிறுத்துகிறது.
வழக்கறிஞர் திருமுருகனிடம் ரவிச்சந்திரன் கூறியதைப் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் புத்தகம் ஆக்கியுள்ளார். கடந்த மூன்று இதழ்களில் வெளியானதன் தொடர்ச்சியாக, அந்தப் புத்தகத்தில் உள்ள மர்மங்கள் சில…
வரலாறு போர்களால் மட்டுமல்ல, படுகொலைகளாலும் நிரம்பியது. அதிலும், ‘அரண்மனைச் சதி’ எனப்படும் உட்பூசல்களும் துரோகங்களும் ஏராளம்.
சுதந்திர இந்தியாவில் மூன்று பெரிய படுகொலைகள் நடந்துள்ளன. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய மூவரின் படுகொலைகளுக்குப் பின்னுள்ள உண்மையான சதியையும் அதற்கான காரணத்தையும் இந்த நாட்டு மக்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை. இம்மாதிரியான மூடிமறைப்பு நடவடிக்கைகள் வரலாறு முழுக்கவே நடந்துள்ளன.
‘பாவம் ஓரிடம், பழி ஓரிடம்’ என்பார்கள். ராஜீவ் காந்தி படுகொலை எனும் பாவத்தைப் புரிந்தவர்கள் அதிகாரத்தின் பலனைச் சுவைக்க, புலிகள் இயக்கமும் அதன் ஆதரவாளர்களும் பழியைச் சுமந்தார்கள்.
இன்னும் சுமந்துகொண்டி ருக்கிறார்கள். ராஜீவ் படுகொலையில் குற்றச் சாட்டுக்குள்ளான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையும் கைதான 26 தமிழர்களும் இந்தியத் துணைக்கண்ட அரசியல் சதுரங்கத்தில் பலியிடப் பட்ட வெட்டுக்காய்கள் என்பதை இன்று உலகம் அறிந்திருக்கிறது.
குண்டு வெடித்த நேரத்தில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்று சம்பவ இடத்திலிருந்து விரைந்து தப்பிச்சென்றது. ‘அதில் இருந்தவர்கள் யார், என்ன செய்தார்கள், அதில் என்ன இருந்தது’ என இன்றுவரை இந்தியப் புலனாய்வுப் பிரிவுகளோ, உளவுப் பிரிவுகளோ விடை சொல்லவில்லை.
ராஜீவ் படுகொலை நிகழ்ந்து 26 ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும், அந்தச் சதித்திட்டத்தின் பின்னணி என்ன, உண்மைச் சூத்திரதாரிகள் யாவர், ராஜீவைக் கொல்லப் பயன்பட்ட வெடிகுண்டு எது, திட்டத்தை நிறைவேற்ற உதவிய நிதியாதாரம் எங்கிருந்து எப்படி எவரிடமிருந்து வந்தது என்பதற்கெல்லாம் இன்னமும் விடை இல்லை.
சி.பி.ஐ வசமிருந்த முக்கிய ஆதாரமான 7.5.91 தேதி வயர்லெஸ் செய்தியைப் புறந்தள்ளிவிட்டு, சம்பந்தமில்லாத அப்பாவிகள் 26 பேர்மீது சதிப்பழி சுமத்திவிட்டு, உண்மைச் சதிகாரர்களைத் தப்பவிட்டார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எனது சொந்த ஊர். ஈழத்தமிழர் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு அங்கு சென்றேன். புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். பயிற்சி பெற்றேன். களங்களில் பங்கெடுத்தேன்.
தமிழகத்தில் செயல்பட வேண்டும் என்பதால், இயக்கத்திலிருந்து விலகி இங்கே வந்தேன். புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டம்மானிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.
சி.பி.ஐ குற்றச்சாட்டு தொடர்பாக ஆய்ந்து, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட என்மீதான தீர்ப்புரை ‘பதினாறாவது குற்றவாளியாகிய ரவிச்சந்திரன் ஓர் இலங்கை குடிமகன்’ எனத் தொடங்குகிறது. அது, சி.பி.ஐ செய்த போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஒரு சிறுதுளியின் வெளிப்பாடு.
1991 மே 21-ம் தேதி ராஜீவ் படுகொலை நடந்தது. 24-ம் தேதி என்னைத் தேடி வந்தார் சிவராசன். அங்கே இருக்கும்போதே எனக்குச் சிவராசனைத் தெரியும்.
‘‘ஏதாவது பிரச்னையா?’’ என்றேன்.
‘‘ஆமாம்’’ என்றார். ‘‘ஒரே போலீஸ் தொல்லையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த இயக்கப் பெண் ஒருவரை உங்களுக்குத் தெரிந்தவர் வீட்டில் வைத்துப் பாதுகாக்க முடியுமா?’’ என்றார்.
அவர்தான் சுபா.
ஈழத்திலிருந்து கிளம்பும்போது, ‘‘இயக்க வேலைகளில் நீ தலையிடக் கூடாது’’ என்று சொல்லிப் பொட்டம்மான் அனுப்பி வைத்தார். அதைமீறி என்னிடம் உதவி கேட்டார் சிவராசன். இதுவே முரணானது.
அன்றைய தினம்தான் தனு படம் நாளிதழ்களில் வெளியாகியிருந்தது.
சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னதாகப் பத்திரிகைகளில் போட்டோ வெளியாகும் அளவுக்குத் தமிழ்நாட்டு போலீஸின் லட்சணம் இருந்தது.
இதை அவர்களுக்குக் கொடுத்த அதிகாரி, துறைரீதியான விசாரணையிலிருந்து தான் தப்புவதற்காக சி.பி.ஐ சொன்னதையெல்லாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வேலைகளில் கடைசிவரை இருந்தார்.
‘தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொண்டோம். கண்ணாடியை யார் போட்டோ எடுக்கச் சொன்னது. எத்தனை பிரச்னை தெரியுமா?’ என்று சுபா கோபம் கொண்டார்.
இங்கிருந்து தப்பி நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் சிவராசன் ஆர்வம் காட்டவில்லை. பிறகு அவர் எங்கோ சென்று தலைமறைவாகிவிட்டார்.
பொட்டம்மான் கட்டுப்பாட்டில் சிவராசன் இல்லை என்பதைப் பின்னர் உணர்ந்தேன். கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் மே 24-ம் தேதியே அவர் ஈழம் சென்றிருப்பார்.
அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்து, இந்தக் காரியங்களைச் செய்துள்ளார். இந்த நடவடிக்கைகளை அறிய சி.பி.ஐ முயற்சி செய்யவில்லை.
கைதுசெய்யப்பட்ட அப்பாவிகள்மீது கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, போலியான ஆதாரங்களை உருவாக்கினார்கள். மல்லிகை அலுவலகத்தில் நடந்த சித்ரவதைகள் மூலமாக இந்தக் குற்றச்சாட்டுகளை அனைவரும் ஒப்புக்கொண்டதுபோல எழுதிக்கொண்டார்கள். இதற்கு, தியாகராஜன் இப்போது கொடுத்துவரும் பேட்டிகளே சாட்சிகள்.
இந்திராகாந்தி மறைவுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு கடந்திருக்கும். அப்போதே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., ‘ராஜீவ் படுகொலை செய்யப்படுவார்’ எனத் துல்லியமாகக் கணக்கு போட்டு அறிக்கை தயாரித்தது.
1986 மார்ச் மாதத் திலேயே, ‘ராஜீவுக்குப் பிந்தைய இந்தியா’ எனும் தலைப்பிட்டு 23 பக்க ரகசிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து, அமெரிக்காவின் முக்கியக் கொள்கை வகுப்பாளர்களிடம் சி.ஐ.ஏ கொடுத்தது.
அதில், ‘சீக்கியத் தீவிரவாதிகள் அந்தப் படுகொலையை நடத்தக்கூடும்’ எனக் கணித்திருந்தது. ‘அப்படிக் கொல்லப்பட்ட பிறகு ராஜீவின் இடத்தை பி.வி.நரசிம்மராவ் அல்லது பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நிரப்புவார்கள்.
விரைவிலேயே அந்தச் சம்பவம் நடந்தேறும்’ என சி.ஐ.ஏ தன் அறிக்கையில் உறுதியாகக் கூறியிருந்தது.
‘ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப் படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே சி.ஐ.ஏ இப்படி முடிவு செய்தது ஏன்? எதன் அடிப்படையில்?’ எனும் நியாயமான கேள்விகள் எழும்.
இதற்கான விடை, ஒருவேளை அந்த சி.ஐ.ஏ-வின் ரகசிய அறிக்கையிலேயேகூட இருக்கலாம். ஆனால், அந்த ரகசிய அறிக்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானபோதுகூட அதிலிருந்த தகவல்கள் மறைக்கப்பட்டு, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுதான் வேதனை!
டெல்லியிலிருந்த தன் தூதர்மூலமாக யாசர் அராபத் ஒரு செய்தியை அனுப்பினார். ராஜீவ் காந்தியைக் கொல்ல மிகப்பெரிய சதி நடப்பதாக அராபத் சொல்லி அனுப்பினார்.
தனிப்பட்ட முறையிலும் ராஜீவிடம் அவர் இதைச் சொன்னார். அந்தச் சதியின் வேர், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்திடமோ, அமெரிக்க சி.ஐ.ஏ-விடமோதான் செல்லும்.
இந்த இரண்டு நாடுகளும் ராஜீவ்மீது அதிருப்தியில் இருந்தவை. சந்திராசாமி, கே.பி., சிவராசன் என்ற முக்கோண விசாரணையில் பல மர்மங்கள் உள்ளன. ‘இவை விசாரிக்கப்பட வேண்டும்’ என்று நீதிபதி ஜெயின்கூடச் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரை, ராஜீவ் கொலை வழக்கு அதன் இறுதிநிலையை எட்டவில்லை; சொல்லப் போனால், அதன் துவக்கத்தையே இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களோடு முடிக்க நினைக்கிறார்கள். ஆனால், முடிக்கப்பட வேண்டிய வர்கள் வெளியில் இருக்கிறார்கள்.
(முற்றும்)