14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய உறவினர் ஒருவரும் மற்றும் தரகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் ஏனைய 5 பேர் தலைமறைவுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் மற்றும் தரகர் உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் தரம் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோத்திற்குட்படுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த புதன்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த சிறுமியின் தரகரைக் கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசி தரகரைக் கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் உறவினர் ஒருவரை கைதுசெய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சிறுமியை அவரது உறவினர் ஒருவர் வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த தரகர் மற்றும் ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் விபச்சார நடவடிக்கையில் குறித்த சிறுமியை ஈடுபடுத்தியுள்ளதாகவும், அத்துடன் குறித்த விபச்சாரத்திற்கு ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபா பணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் தலைநகரில் இரண்டு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது .
உறவினர் , தரகர் ஆகியோரை கைதுசெய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரையும் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்