பிரித்தானியாவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தன் வாடிக்கையாளர் முகத்தில் மிளகாய் பொடி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் மாகாணத்தின் பிரின்ஸ் ஆஃப் பெங்கால் உணவகத்தில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த உணவகத்துக்கு இரவு உணவு உட்கொள்ள தன் மனைவி மிச்சலுடன் சென்றிருந்தார் டேவிட் எவன்ஸ்(வயது 47).
தந்தூரி சிக்கன் உள்ளிட்ட சில உணவு வகைகளை டேவிட் ஆர்டர் செய்திருந்த நிலையில் தந்தூரி சிக்கனின் சுவை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதனால் அதிருப்தி அடைந்த டேவிட், உணவை சமைத்த கடை உரிமையாளர் கம்ருல் இஸ்லாமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த இஸ்லாம், டேவிட்டின் முகத்தில் தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அள்ளி வீசியுள்ளார்.
இது குறித்து டேவிட் கூறுகையில், இந்த நிகழ்வை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொலிஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் வரும்வரை அரை மணி நேரத்திற்கும் மேலாக குளிர்ந்த நீரில் கண்களை நனைத்தபடி இருந்தேன்.
அந்த நேரத்தில் என் மனைவியை தவிர வேறு யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.