விசாகப்பட்டினம்: இலங்கை அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் தோற்றது.
அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. இரண்டு போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலை நிலவ, 3வது மற்றும் கடைசி போட்டி விசாகப்பட்டினம், ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்தது.
டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இலங்கை தொடக்க வீரர்களாக குணதிலகா, தரங்கா களமிறங்கினர்.
குணதிலகா 13 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த சமரவிக்ரமா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தரங்கா அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்.
இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தனர்.
சமரவிக்ரமா 42 ரன் எடுத்து (57 பந்து, 5 பவுண்டரி) பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 17 ரன் எடுத்து சாஹல் சுழலில் கிளீன் போல்டானார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தரங்கா 95 ரன் எடுத்து (82 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) குல்தீப் சுழலில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.
இதனால் இலங்கை அணி 44.5 ஓவரிலேயே 215 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
27 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்திருந்த இலங்கை அணி, மேற்கொண்டு 55 ரன்னுக்கு கடைசி 8 விக்கெட்டையும் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பந்துவீச்சில் குல்தீப், சாஹல் தலா 3, ஹர்திக் பாண்டியா 2, புவனேஷ்வர், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
கேப்டன் ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 7 ரன் எடுத்து தனஞ்ஜெயா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார்.
அடுத்து தவானுடன் ஷ்ரேயாஸ் இணைந்தார். இருவரும் இலங்கை பந்துவீச்சை சிதறடித்து 2வது விக்கெட்டுக்கு 135 ரன் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 65 ரன் எடுத்து (63 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) திசாரா பந்துவீச்சில் லக்மல் வசம் பிடிபட்டார்.
தவான் – தினேஷ் கார்த்திக் ஜோடி உறுதியுடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் தவான் தனது 12வது சதத்தை பதிவு செய்தார்.
இந்தியா 32.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தவான் 100 ரன் (85 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), கார்த்திக் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதும், ஷிகர் தவான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி நாளை மறுநாள் கட்டாகில் நடக்கிறது.
தொடர்ச்சியாக 8வது தொடர் வெற்றி
இலங்கை அணிக்கு எதிராக நடந்த 3வது போட்டியில் வென்று 2-1 என்ற கனக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா, தொடர்ச்சியாக 8வது தொடரில் வென்று ஆஸ்திரெலியாவின் சாதனையை சமன் செய்தது.
இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீசுக்கு அடுத்த இடத்தை இந்தியா, ஆஸி. அணிகள் பிடித்துள்ளன.
*ஒருநாள் போட்டிகளில் தனது 12வது சதத்தை விளாசிய தவான், 4000 ரன் மைல்கல்லையும் கடந்து அசத்தினார். அதிவிரைவாக 4000 ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் (95வது இன்னிங்ஸ்) 2வது இடம் பிடித்தார். கேப்டன் விராத் கோஹ்லி (93 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார்.
2017ல் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 1000 ரன் கடந்த 3வது வீரர் என்ற பெருமை இலங்கையின் உபுல் தரங்காவுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மாவுக்கு அடுத்த இடத்தை தரங்கா பிடித்துள்ளார்.
*விசாகப்பட்டினத்தில் விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 5 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது.