வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் சுருங்கத் தொடங்க, தமிழ்த் தேசிய அரசியலில் பரபரப்புத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
ஏனென்றால், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்ப்புக்குரியதொன்றாக மாறியிருக்கிறது.
வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது, இலங்கையில் மாத்திரமன்றி, வெளியுலகினாலும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்ற விடயம். ஏனென்றால், வடக்குடன் பல்வேறு நாடுகள் பல்வேறு தொடர்புகளை வைத்திருக்கின்றன.
இலங்கையின் ஏனைய 8 மாகாணங்களையும் விட வடக்கின் மீது தான் சர்வதேச கவனம் குவிந்திருக்கிறது.
வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சருடன்- உலகின் முக்கியமான நாடுகளின் பிரதமர்கள், வெளிவிவகார அமைச்சர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் வந்து சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார்கள்.
இதுபோன்று வேறெந்த மாகாணத்துக்கும் சர்வதேச முக்கியத்துவம் கிடைத்தது இல்லை.
இத்தகைய நிலையில் வடக்கு மாகாணசபையில், அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்ற கேள்வி இப்போதே எழுந்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
கடந்த 2013 ஆம் ஆண்டு, வடக்கு மாகாணசபைக்கு முதன்முதலாகத் தேர்தல் நடத்தப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் இரண்டு கட்சிகள் தான் அரங்கில் இருந்தன.
ஆனாலும், மாகாண சபைகளை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், அதற்கான தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒதுங்கிக் கொண்டது.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே, அப்போதிருந்த மஹிந்த – டக்ளஸ் கூட்டணியுடன் வலுவாக மோதியது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
ஆனால், இப்போது தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் நடத்தும் மூன்று அணிகள் அரசியல் அரங்கில் இருக்கின்றன. இவை மூன்றும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் முடிவுடனும் இருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆகியவற்றுடன், ஈபிஆர்எல்எவ்- தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து அமைத்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகியனவே அவை.
இந்த மூன்று அணிகளுடன், இன்னொரு தமிழ்த் தேசிய அரசியல் அணியும் களத்தில் குதிக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன. அது தான் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனின் கூட்டணி.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான விரிசல் கிட்டத்தட்ட ஒட்ட வைக்க முடியாதளவுக்கு சென்று விட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது முன்னைய கொள்கைகளுடன் இல்லை என்றும், அப்படியிருக்கும் போது, தனக்கு எப்படி மீண்டும் போட்டியிட அங்கிருந்து அழைப்பு வரும் என்றும் கேள்வி எழுப்பி – ‘முற்றுப்புள்ளி வைக்கும்’ அளவுக்கு கருத்தை வெளியிட்டிருக்கிறார் விக்னேஸ்வரன்.
அதுமாத்திரமன்றி, வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து போட்டியிடுவது அல்லது புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடுவது என்ற யோசனைகள் தம் முன் இருப்பதையும் அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.
தற்போதைக்கு அவர், மாகாணசபைத் தேர்தலுக்காக புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கக் கூடும்.
அவ்வாறாயின், தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் அணிகள் நான்காக அதிகரிக்கலாம். அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் இணைந்து போட்டியிடும் வாய்ப்புகள் இல்லை என்று நிராகரிக்க முடியாது.
அரசியல் ரீதியாக இது சாத்தியமாகலாம். ஆனால் கொள்கை ரீதியாக இது சாத்தியப்படுமா என்பது சிக்கலான கேள்வி. ஏனென்றால், விக்னேஸ்வரன் தனது பிந்திய அறிக்கையில் வலியுறுத்தியுள்ள “நிறுவன மயப்படுத்தப்பட்ட- ஒழுக்கம் சார்ந்த அரசியலை முன்னெடுப்பது” என்ற விடயம், அவரது கூட்டணியை பரந்துபட்ட ஒன்றாக உருவாக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரனின் தலைமையை ஏற்றுக் கொண்டவை.
ஆனாலும், உள்ளூராட்சித் தேர்தலிலும், அதனையடுத்தும் இந்தக் கட்சிகளின் செயற்பாடுகள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்க்கின்ற ஒழுக்கம் சார்ந்த அரசியலுக்கு ஏற்புடையது என்று கூற முடியாது.
அரசியல் என்பது சந்தர்ப்பவாதக் கூட்டு என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் தான், உள்ளூராட்சி சபைகளில் ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சிகளும் நடந்து கொண்டன.
இதில் எந்தக் கட்சியும் எந்தக் கட்சியையும் பார்த்து விமர்சிக்கின்ற தகுதி கிடையாது. அந்தளவுக்கு உள்ளூராட்சிகளில் ஆட்சியமைப்பதற்காக, தமது நிலையில் இருந்து தரம் தாழ்ந்து போயின.
எனவே, விக்னேஸ்வரன் ஒரு முறையான ஒழுக்கம் சார்ந்த அரசியல் பாதையை வகுக்க முற்படுவாரானால், இப்போதுள்ள எந்த தமிழ்த் தேசியக் கட்சியையும் அவரால் அரவணைக்க முடியாது.
அவ்வாறு அரவணைப்பாரேயானால், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்த்து எத்தகைய விமர்சனங்களை அவர் முன்வைத்தாரோ, அதே விமர்சனங்களைக் கொண்ட கட்சிகளுடன் தாமும் கூட்டணி வைப்பதற்காக வெட்கப்பட நேரிடும்.
அது அவரது அரசியல் அறத்தையும், நேர்மையையும் கூட கேள்விக்குட்படுத்தும்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருந்தது. அதற்கான சமிக்ஞைகளை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஆனால், இப்போதைய நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவரை மாற்றுத் தலைமையாக, ஏற்றுக் கொண்டு அவருக்குக் கீழ் அணி திரளத் தயாராக இருக்கிறதா என்பதில் நிறையவே சந்தேகங்கள் உள்ளன.
அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, எலி கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை தன்பக்கம் இழுத்து, வடக்கில்- குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், ஒரு பலமான சக்தியாக தன்னை நிரூபித்திருக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியாக தன்னைப் பலப்படுத்துவதற்கு இந்த அணி தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.
இப்படியான நிலையில், மீண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் செல்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராகுமா என்று தெரியவில்லை.
அதுபோலவே, இந்தியாவுடனான உறவுகள் விடயத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன.
கடைசியாக நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கூட விக்னேஸ்வரன் அதனைத் தெளிவாகக் கூறியிருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்திய சார்பு நிலையை விரும்புவதாக அவரது அண்மைய கருத்துக்கள் உணர்த்துகின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சீனாவை நம்ப வேண்டும் என்ற தொனியில் செயற்படுகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
இந்தநிலையில், கொள்கை சார் கூட்டு ஒன்றை உருவாக்க முனையும் போது, இந்த விடயம் இடிக்கும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தல் வெற்றிக்காக ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்குவதானால், அதில் எந்தக் கட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். அதில் தவறு இல்லை.
ஆனால் அவரோ, கொள்கை ரீதியாக ஒன்றுபட்ட கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றி பேசுகிறார், ஒழுக்கம்சார்ந்த அரசியல் அணி ஒன்றைப் பற்றிப் பேசுகிறார்.
அப்படிப்பட்ட நிலையில் அவர் சாதாரணமான- தேர்தல் வெற்றிக்கான ஓர் அரசியல் கூட்டணியை அமைக்க முனைந்தால், அவரது நிலையும் தாழ்ந்து போகும்.
அடுத்து நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் பற்றி அவர் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாமல் இருப்பது பற்றி அவர் விமர்சித்திருக்கிறார். கூட்டமைப்புக்குள் சர்வாதிகாரத்தனம் மேலோங்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இத்தகைய நிலையில், நிறுவன மயப்படுத்தப்பட்ட ஓர் அரசியலை அவர் முன்னெடுக்க முனையும் போது, அவர் உருவாக்க நினைக்கும் கூட்டணியை பதிவு செய்து கொள்வாரா என்ற கேள்வி உள்ளது.
அவ்வாறு பதிவு செய்யப்படும் போது, அதில் இணையும் கட்சிகள் தமது அரசியல் அடையாளங்கள் அனைத்தையும் கைவிடத் தயாராக இருக்கின்றனவா என்ற கேள்வியும் உள்ளது.
உண்மையைச் சொல்லப்போனால், தமிழ்த் தேசியத்தை வைத்து அரசியல் நடத்தும் எந்தக் கட்சியுமே, தமது தனித்துவ அரசியல் அடையாளத்தை தொலைப்பதற்குத் தயாராக இல்லை. அதனைத் தொலைத்து விட்டு இன்னொரு கூட்டணிக்குள் அடைக்கலம் தேடிக் கொள்ளப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவ்வாறு ஒன்றிணைந்திருந்தார்களோ, அதுபோலத் தான் இணைந்திருக்கப் போகிறார்கள். அவ்வாறான நிலையில் விக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் எந்தளவுக்குச் சாத்தியமாகும்?
இப்படியான சிக்கல்கள் உள்ள சூழலில், வடக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறு அணுகப் போகின்றன? என்பது அதிகம் எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.
நிச்சயமாக ஒரே அணியாக இவை இணையப் போவதில்லை. குறைந்தது இரண்டு அணியாகப் போட்டியிடலாம். சிலவேளைகளில் மூன்று, நான்கு அணிகளாகவும் பிரிந்து நிற்கலாம்.
இப்படியான நிலையில், பேரினவாதக் கட்சிகளும், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கட்சிகளும் மேலும் பலம் பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
உள்ளூராட்சி சபைகளில் தமது கண்ணைத் தாமே குத்திக் கொண்டது போலத் தான், தமிழ்த் தேசியக் கட்சிகள் செயற்படத் தயாராகின்றன போலவே தெரிகிறது.
-என். கண்ணன்-