சிறிய கைத்துப்பாக்கியோடு ‘தம்பி’யாக ஆயுதப்போராட்டத்தில் முதலடி எடுத்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை, முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்பு நந்திக் கடலோரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகளாகின்றன.
தகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்திராத ஆரம்ப நாட்களில் யாழ்ப்பாணத்துக் கிராமங்களிலும் வன்னியின் காடுகளிலும் சிறு இளைஞர் குழுவாக, கெரில்லாப் படைப் பிரிவுகளாக, மரபு வழிப் படையணிகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள்.
வற்றாத நிதிவளம், அதி சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பு, பலம் வாய்ந்த தாக்குதல் அணிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, எந்த ஒரு போராட்ட அமைப்பினாலும் முடியாமல் போன கடல், வான் சார்ந்த கட்டமைப்புகளையும் கொண்டிருந்த, தமிழர்களின் பெரும்பான்மையான பிரிவினரால் ஆதரிக்கப்பட்டு வந்த ஒரு பலமான விடுதலை அமைப்பு நந்திக்கடலில் கரைக்கப்பட்ட ஒரு பிடி சாம்பரோடு முற்றாக அழிக்கப்பட்டமையானது கற்றுக் கொள்வதற்கு எமக்கு நிறைய பாடங்களை தந்திருந்தாலும் கற்றுணர்வதற்கு இதுவரை யாரும் தயாராக இல்லை.
பிரபாகரன் என்ற தனி மனித ஆளுமையின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நியாயமான காரணங்கள் பல இருந்தன.
காலத்திற்கு காலம் தான் சார்ந்திருந்த சூழ்நிலைகளை தயவு தாட்சண்யமின்றி அறம் சார்ந்தும், மீறியும் கையாள்வதில் பல வெற்றிகளைப் பெற்றிருந்த அவரால் அல்கைதாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்பு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களை கையாளுவதில் இறுதிவரை வெற்றிகளைப் பெறமுடியாமல் போய் விட்டது.
எரிக் சொல்ஹெய்மின் மொழியில், அவர் கற்றுக்குட்டியாகவே இருந்து விட்டார்.
தனது ஆரம்ப காலங்களிலேயே, புலிகள் அமைப்பின் முதற் தலைவராக செயற்பட்ட உமாமகேஸ்வரனை அமைப்பிலிருந்து வெளியேற்றினார்.
புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து தங்கத்துரை தலைமையிலான ரெலோ இயக்கத்துடன் இணைந்து, பின்பு அதிலிருந்து விலகி கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெயரை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டு செயற்பட்டார்.
அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணிக்கும் இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான பிளவினை வடக்கு கிழக்கில் தனது அமைப்பின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார்.
தமிழ்நாட்டுத் திராவிட அரசியலின் இரு துருவங்களாக திகழ்ந்த எம்.ஜீ.ஆர் ற்க்கும் மு.கருணாநிதிக்குமிடையேயான முரண்பாட்டினை பயன்படுத்தி எம்.ஜீ.ஆர் மூலம் தமிழ்நாட்டில் வலுவாக பின் தளம் ஒன்றினை உருவாக்கினார்.
பல விடுதலை அமைப்புகளால் வரிகள் என்ற பெயரில் குடாநாட்டு மக்களிடம் பெறப்பட்டுவந்த நிதி மொத்தத்தையும் தமது இயக்கமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஈவு, இரக்கமற்ற படுகொலைகள் மூலம் சக போராளி அமைப்புகளை களத்திலிருந்து முற்றாக அகற்றி, மதம் வர்த்தகம் ஊடகம் சார்ந்த மாபியாக்களின் துணையோடு தன்னையே ஏகத் தலைவராக்கினார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பயன்படுத்தி, வடமாராட்சியில் தங்கியிருந்த தனது பாதுகாப்பை ‘ஒப்பரேசன் லிபரேசன்’ என்கின்ற இலங்கை இராணுவத்தின் படை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து உறுதிப்படுத்தினார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் இந்தியப் படைகளின் பிரசன்னத்தையும் ஒப்புக் கொள்ள மறுத்த பிரபாகரன், வேறு வழியின்றி சுதுமலையில் அடையாளத்திற்கு ஆயுதங்களை கையளித்து பின்பு இந்திய இராணுவத்துடனான போரை ஆரம்பித்து இறுதியாக நித்திகைக்குளம் காட்டுப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நிலையில், பேரினவாத சிங்கள ஆட்சித் தலைவர் பிரேமதாசாவின் உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டதோடு இந்தியப் படைகளையும் வெளியேற வைத்ததோடு..,
இந்திய ஆட்சியின் ஆதரவுடன் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவத்தையும் வெளியேற்றுவதற்காக போராட்ட இயக்கங்களின் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் மக்களின் பொதுஎதிரியான சிறீலங்காப் படைகளுடன் கரம் கோர்த்தார் – அன்று தாங்கள் செய்ததை தந்திரோபாயம் என்று சொன்ன புலிகள் பின்னாளில் இதையே மற்றவர்கள் செய்தபோது துரோகத்தனம் என்று பட்டம் சூட்டியிருந்தனர்.
காலத்துக்கு காலம் மாறி வந்த அரசாங்கங்கள் தமது இருப்புக்காக மேற்கொண்ட பேச்சுவார்த்தைக் காலங்களையெல்லாம் தனது படைபலப் பெருக்கத்திற்காக பயன்படுத்தினார்.
இந்தியாவினதும் மேற்குலகத்தினதும் பிராந்திய நலன்களுக்காக பணிக்கமர்த்தப்பட்ட அனுசரணையாளரான நோர்வே நாட்டினரைப் பயன்படுத்தி போராடத் தேவையான வளங்களையும் இயக்கத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் போதுமானளவு நிதியையும் பெற்றுக்கொண்டார். இவை அனைத்துமே புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையிலும் ஏறுமுகமாகவே தோன்றியிருக்கும்.
ஆனாலும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த் திசையில்,
அவரது சகா மைக்கலுடன் ஆரம்பித்த இயக்க உட்கொலைகள் மாத்தயா, கருணா ஆகியோருடனான முரன்பாடுகளால் இறுதிவரை நீண்டு சென்று கொண்டிருந்தது.
புளொட் அமைப்பின் சுந்தரத்துடன் ஆரம்பித்த சக இயக்கங்கள் மீதான வேட்டையாடல்கள் சிறீசபாரட்ணம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என பிரபாகரனின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தவண்ணம் தான் இருந்தது.
அதிபர் ஆனந்தராசாவுடன் ஆரம்பித்த கல்விமான்களின் படுகொலைகள் ரஜனிதிரணகம, நீலன் திருச்செல்வம் எனத் தொடர்ந்தது.
சிங்களப் படையினரை குறிவைத்த கிளைமோர்களும், கரும்புலிகளும் சிங்கள மக்களின் அரசியல் பிரதிநிதிகளையும் அப்பாவி மக்களையும் பலியெடுக்கத் தொடங்கின.
தமக்குச் சார்பான அரசாட்சியாளர்களின் இனப் படுகொலைகளை கண்டுகொள்ள விரும்பாத சர்வதேச சமூகம் போராட்ட அமைப்புக்களை கட்டுக்குள் கொண்டுவர, இயலாத பட்சத்தில் கூண்டோடு அழிக்க அதே விதமான நிகழ்வுகளைத்தான் முன்னிலைப் படுத்துகின்றன.
ரஜிவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய விளைவுகளால் வழங்கல்களுக்கான வழிகள் யாவும் அடைபட்டுப் போன நிலையில், அப்படுகொலை ஓர் துன்பியல் நிகழ்வு என்று மறைமுகமான மன்னிப்பும் அவரால் கேட்கப்பட்டது.
இத்தனை விடயங்களும் புலிகளைப் பொறுத்தவரையில் இறங்குமுகமாகவே அமைந்திருந்தன என்பதை பிரபாகரன் உணரவில்லை, ஆனாலும் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். பிரபாகரனை ஒருவழிக்கு கொண்டுவர முடியாத தனது இயலாமை குறித்து தனது இறுதி நாட்களில் கவலையுடனிருந்தார்.
திலீபனின் மரண மேடையில் வைத்து ‘நீ முன்னால் போ, பின்னால் நான் வருவேன்’ என சொல்லி அனுப்பிய பிரபாகரனின் ஆணையின் பேரில் தங்களை ஆகுதியாக்கிய பல நூறு கரும்புலிகளினதும் நாற்பதாயிரத்திற்கும் மேலான மாவீரர்களினதும் உயரிய தியாகங்களின் மீது நின்று கொண்டு தனது படைத்துறை வெற்றிகளை மட்டுமே சிந்தித்த அவருக்கு,
தன்னால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டு காலப் போக்கில் அவரிடமே முழுமையாக ஒப்படைக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் விடுதலையை வென்றெடுப்பதில் அரசியல்ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் செயற்பட வேண்டியதன் அவசியம் புரியாமல் போனதுதான் தமிழர் தாயகத்தினதும் தமிழ் மக்களுனதும் சாபக்கேடாக அமைந்தது.
அரசியல், இராஜதந்திர தவறுகளுக்கு புறம்பாக நான்காவது ஈழப்போரில் படை நடவடிக்கைகளின் தந்திரோபாயங்களில் இடம்பெற்ற மாபெரும் தவறுகளின் விளைவுகளே முள்ளிவாய்க்கால் முடிவாகும்.
மரபுவழிப் படையணிகளும் அதனால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசமும் ஒரு விடுதலை அமைப்பிற்கு கிடைக்கக் கூடிய சர்வதேச அங்கீகாரத்துற்கு அவசியமானது என நியாயப் படுத்தினாலும் கிழக்கிலிருந்து புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்டன் பின்பு மீண்டும் கெரில்லா தாக்குதல் முறைகளுக்கு ஒரு பகுதிப் படைகளை ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.
சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் இன்றி சிங்கள அரசியல் தலைமைத்துவம் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளால், போருக்கான வாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசபடைகள் பிரபாகரனின் மரணம் வரை போரைக் கொண்டு சென்றிருந்தன.
படையணிகளின் மீளமைப்புக்காக ஒரு நாள் அவகாசத்தக் கூட பிரபாகரனுக்கு விட்டுக் கொடுக்காத அரசாங்கம், அவருக்கு உதவி வரக்கூடிய அனைத்து வழிகளையும் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்புடன் அடைத்துவிட்டது.
இருந்தும் பிரபாகரன் தனது மரபு வழிப்போரை மாற்ற முயலவில்லை. தமது கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடந்த அத்தனை பொதுமக்களையும் தமது பாதுகாப்புக்காக தம்முடனேயே அழைத்துச் சென்று பலி கொடுத்த கொடுமையைத்தான் கண்டோம். மக்களே இல்லாத மண்ணில் படையினரின் முன்னேற்றம் மிக இலகுவாக அவர்களே எதிர்பார்க்காத வேகத்தில் நடந்தேறியது.
காலத்திற்கு காலம் மரணம் நெருங்கிய வேளைகளிலெல்லாம் எதிரிக்கெதிரி நண்பனாகி பிணை எடுக்கப்பட்ட பிரபாகரனை இறுதியுத்தத்தில் பிணையெடுக்க உலகின் சகல தரப்பினரும் தயங்கியதன், மறுத்ததன் விளைவே அவரது அவலமான மரணமாகும்.
பிரபாகரனின் மாற்றமுடியாத நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கை, சாத்தியமில்லாத ஒன்றாக அவரால் உணரப்பட்டிருந்தாலும் அவர் பற்றி உருவகப்படுத்தப்பட்டிருந்த விம்பத்தை மாற்ற அல்லது உடைத்து வெளியேற அவரால் முடிந்திருக்காது.
அவரை உருவேற்றி வளர்த்திருந்த தமிழ்த் தேசியவாதிகளும், வியாபார ஊடக அமைப்புகளும் அதற்கு இடம் கொடுத்திருக்காது.
துரோகத்தனமானவர், நம்பமுடியாதவர் என இந்திய இராஜதந்திரி ஜே. என். டிக்சிற் அவரைப் பற்றிக் சொல்வதாக கூறிக் கேள்விப்பட்டுள்ளோம். 2019 ல் டிக்சிற்றைப் போன்ற மனநிலையில் இருந்த பலரை இராஜதந்திர சமூகத்தில் காண முடிந்தது.
ஏனைய விடுதலை அமைப்புகளிடமிருந்து புலிகள் அமைப்பை வேறுபடுத்திய, பெருமைப்படுத்திய, உயர்வாக மதிக்க வைத்த சயனைட் குப்பியை இறுதிவரை பிரபாகரன் பயன்படுத்தாமல் போனது அவருக்கு மட்டுமல்லாது அவரது தலைமைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் களங்கமாகி விட்டது.
ஒரு தனிமனிதனாக பிரபாகனிடம் காணப்பட்ட பலமான குணாம்சங்களும் நடத்தைகளும் ஒரு இனத்தையே ஆட்டு மந்தைகள் போல அவரின் பின்னாலே கேள்விக்கிடமின்றி தலையைக் கவிழ்ந்த வண்ணம் பயணிக்க வைத்தது. தமது வரலாறு முழுதும் பிரபாகரனும் எம்மக்களிடம் இதைத்தான் எதிர்பார்த்தார்.
கேட்பவற்றை தாருங்கள், எதையும் கேட்காதீர்கள், எல்லாம் எமக்குத் தெரியும் என்ற போக்கே கோலோச்சியது.
ஆனாலும் பிரபாகரனின் அரசியல் நோக்கங்களற்ற இராணுவ முனைப்புகள் யாவும், அவரை நம்பி பின்னால் வந்த ஓர் தேசத்தை, தேசிய இனத்தை வாழவைக்க ஒரு முழுமையான மக்கள் தலைவனாக, புரட்சியாளனாக, தேசியத் தலைவனாக முன்னெடுக்க வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் புறம்தள்ளி விட்டது.
நடைமுறை வாழ்வில் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் அரச படைகளின் பிரசன்னத்தை உருவாக்கியதும் அரசியல் வாழ்வில் உளுத்துப்போய் உதவாது என வீசப்பட்டுக் கிடந்த தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்து போலித் தேசியவாதிகளுக்கு கூடாரம் அமைத்துக் கொடுத்ததுமே தமிழர்களுக்கு பிரபாகரன் தந்துவிட்டுச் சென்ற முதுசங்களாகி விட்டன.
எஸ்.ஜே.வி, அமிர்தருக்குப் பின் பிரபாகரன் என்பவர் தமிழர்களின் 30 வருட ஆளுமை. அந்த ஆளுமையின் வீழ்ச்சியில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் ஏராளம்.
எமது மக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமானால் 70 வருட கால வரலாற்றின் உண்மைகள் அறியப்படவேண்டும். அறிவு பூர்வமாக சுய விமர்சனம் செய்ய வேண்டும்.
பிரபாகரன் என்கின்ற பலமான கட்டமைப்பு சரிந்து வீழ்ந்து உயிர்பறிக்கப்பட்டு 09 ஆண்டுகளாகின்றன, ஆனாலும் அவருக்காக ஒரு தீபத்தைக் கூட ஏற்றி அஞ்சலி செலுத்த முடியாத படி எமது மக்கள் அவர்களது தலைவர்களாலேயே(?) முடமாக்கப்பட்டுள்ளார்கள்.
பிரபாகரன் மீண்டும் வருவார் என்று, அரசியல் பிழைப்பு நடாத்த தமிழ்நாட்டிலும், பொருளாதாரப் பிழைப்பு நடாத்த புலம்பெயர் தேசங்களிலும் புலிகளும் அவர்களது பினாமி எடுபிடிகளும் உள்ளவரையிலும்,
பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொண்டால் தேசியத்தின் துரோகிகளாகி விடுவோம் என்று அஞ்சிப் பிழைப்பு நடாத்தும் கட்சித் தலைவர்களும், முன்னாள் போராளிகள் சிலரும், ஊடகத் துறையினரும் தாயகத்தில் உள்ள வரையிலும், அந்த மனிதரை விசுவாசித்த மக்களிடமிருந்து இதயபூர்வமான அஞ்சலி அவருக்கு கிடைக்கவே மாட்டாது.
உலகெங்கிலும் தமிழர்களின் முகவரியாக விளங்கிய போராட்டத் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தமுடியாத நினைவேந்தல் நிகழ்வுகளை எத்தனை தடவைகள் எங்கெங்கெல்லாமோ நடாத்தினாலும் அது முழுமையாகாது.
அத்தகைய முழுமையான நினவேந்தலுக்கு தயாராயில்லாத தங்கள் கையாலாகாதனத்தை எண்ணி தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களை எண்ணி தமிழ் மக்களும் வெட்கப்பட்டு கூனி நிற்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது.
நன்றி-அதிரடி இணையம்-