மஹிந்த அணியில் உள்ள கோத்தாபய ராஜபக் ஷவும் சரி, விமல் வீரவன்ச போன்றவர்களும் சரி, தனி சிங்கள மக்களின் ஆதரவுடன் வென்று காட்டுவோம் என்று கங்கணம் கட்டக்கூடிய வகையில் தான் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
இலங்கையில் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் தரப்பு எது- எந்தெந்த மாவட்டங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றதாக இருந்து வந்துள்ளன என்ற விஞ்ஞானபூர்வமான ஒரு ஆய்வு தேவைப்படுகிறது.
கடந்தவாரம், கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியிருந்த விமல் வீரவன்ச, வெளியிட்டிருந்த கருத்து ஒன்றே இவ்வாறான ஒரு விஞ்ஞானபூர்வமான தேடலின் அவசியத்தை உணர்த்தியது.
கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் வெற்றி பெறுகின்ற வேட்பாளர் எவரோ-அவரே, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.
இதுதான் கடந்த வரலாறு என்று குறிப்பிட்டிருந்தார் விமல் வீரவன்ச.
விமல் வீரவன்ச.
இந்த மாவட்டங்களில் குறிப்பாக வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடனேயே தமது தரப்பு செயற்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
கிழக்கில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு 5 வீத முஸ்லிம்களின் வாக்குகள் குறைந்ததால், அவர் கடந்தமுறை தோல்வியடையவில்லை என்றும், கம்பஹா, குருநாகல் மாவட்டங்களில் குறைந்தளவு வாக்குகள் கிடைத்தமையே தோல்விக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட இதே கருத்தை முன்னர் கோத்தாபய ராஜபக் ஷவும் கூறியிருந்தார்.
வெற்றி- தோல்வியை சிறுபான்மையினர் தீர்மானிக்கக் கூடியவர்களாக இல்லை என்றும், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் உள்ள நடுத்தர வர்க்க சிங்களவர்களே தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளனர் என்பது அவரது வாதமாக இருந்தது.
கடந்தமுறை, மஹிந்த ராஜபக் ஷவுக்கு நகர்புற நடுத்தர வர்க்க சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காததால் தான், தோல்வியடைய நேரிட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள- மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் கூட, சிறுபான்மையின மக்களின் ஆதரவு இல்லாமல், வெற்றிபெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
எஸ்.பி.திசநாயக்க, டிலான் பெரேரா போன்றவர்கள் அதனை சில நாட்களுக்கு முன்னரும் கூட உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், மஹிந்த அணியில் உள்ள கோத்தாபய ராஜபக் ஷவும் சரி, விமல் வீரவன்ச போன்றவர்களும் சரி, தனிச் சிங்கள மக்களின் ஆதரவுடன் வென்று காட்டுவோம் என்று கங்கணம் கட்டக் கூடிய வகையில் தான் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதற்காக மஹிந்த ராஜபக் ஷ, தனது பொதுஜன முன்னணி கூட்டணியில் சிறுபான்மையினக் கட்சிகளை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூற முடியாது.
அண்மையில் அவர் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட 10 சிறிய கட்சிகளில், கருணாவின் தலைமையிலான கட்சி, ஈரோஸ், முஸ்லிம் உலமா கட்சி ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன.
பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி, சிறிரெலோ போன்றவற்றை மாத்திரமன்றி, இன்னும் பல சிறிய தமிழ்க் கட்சிகளையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் மஹிந்த தரப்பு ஈடுபட்டு வருவதை மறுப்பதற்கில்லை.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பிரித்து எடுப்பதன் மூலமே, வெற்றியீட்டலாம் என்பதில் மஹிந்த ராஜபக் ஷ உறுதியாக இருந்தாலும் அவரது தரப்பின் வியூகம் வேறு மாதிரியானதாகவே தெரிகிறது,
பெரும்பான்மையை சிங்கள மக்களின் வாக்குகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வதே அது. அதற்காகத் தான், கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்களின் மீது குறிவைத்திருக்கிறது பொதுஜன முன்னணி.
ஏன் இந்த நான்கு மாவட்டங்களின் மீதும் பொதுஜன முன்னணி குறிவைத்திருக்கிறது என்பதற்கு விமல் வீரவன்ச கொடுத்துள்ள விளக்கம் முற்றிலும் சரியானது அல்ல.
கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இதுவரை நடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களில், 6 தேர்தல்களில், ஜனாதிபதியாக தெரிவான வேட்பாளரே வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
2005 இல் மாத்திரம் தோல்வியுற்ற வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அங்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன.
கம்பஹா மாவட்டத்திலும், அதேபோன்று தான், 6 தேர்தல்களிலும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.
1988ஆம் ஆண்டு தேர்தலில், பிரேமதாச ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட போதும், கம்பஹாவில் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்குத் தான் அதிகளவு வாக்குகள் கிடைத்தன.
கண்டி மாவட்டத்தில், 6 தேர்தல்களில், ஜனாதிபதியாக தெரிவான வேட்பாளரே வெற்றியைப் பெற்றுள்ளார்.
2005 இல் மாத்திரம் தோல்வியுற்ற வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருந்தன.
குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 2015 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல் தவிர, ஏனைய 6 தேர்தல்களிலும், ஜனாதிபதியாக தெரிவானவர் தான் வெற்றியைப் பெற்று வந்திருக்கிறார். 2015 இல் மஹிந்த ராஜபக் ஷவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன.
இந்த நான்கு மாவட்டங்கள் மாத்திரமே, இவ்வாறான ஒரு பண்பை கடந்த 7 தேர்தல்களிலும், வெளிப்படுத்தியதா என்றால், இல்லை என்றே கூற வேண்டும்.
எல்லா ஜனாதிபதித் தேர்தல்களிலும், ஜனாதிபதியாக தெரிவான வெற்றி வேட்பாளருக்கு மாத்திரமே சாதகமாக இருந்த ஒரே ஒரு மாவட்டம் பொலன்னறுவ தான். ஆனால் அதனை விமல் வீரவன்ச குறிப்பிடவில்லை.
அத்துடன், விமல் வீரவன்ச குறிப்பிட்ட, 4 மாவட்டங்கள் தவிர, அம்பாந்தோட்டை, கேகாலை, புத்தளம், இரத்தினபுரி, மொனராகல ஆகிய ஏனைய ஐந்து மாவட்டங்களும் கூட, 6 ஜனாதிபதித் தேர்தல்களிலும், ஜனாதிபதியாகத் தெரிவான வேட்பாளரையே ஆதரித்திருந்தன.
எனவே, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல ஆகிய மாவட்டங்களின் வெற்றியை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைப் பெற்று விடலாம் என்று தப்புக்கணக்குப் போட முற்படுகிறது பொதுஜன முன்னணி.
பொதுஜன முன்னணி வேறொரு கணக்கைப் போடுகிறது. அது தனியே கடந்த கால வெற்றியை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டது அல்ல.
இந்த நான்கு மாவட்டங்களும் தான் அதிகபட்ச வாக்காளர்களைக் கொண்டவை. இந்த நான்குமே 10 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டங்களாகும்.
கொழும்பு மாவட்டத்தில் 76 வீதமும், கண்டி 74 வீதமும், குருநாகலில் 91.9 வீதமும், கம்பஹாவில் 90.6 வீதமும் சிங்களவர்கள் வசிக்கின்றனர். இந்த நான்கு மாவட்டங்களிலும் சராசரியாக, 83 சதவீதமான சிங்கள வாக்காளர்கள் இருக்கின்றனர்.
அவர்களில் பெரும்பான்மையானோரை தமது பக்கம் இழுத்துக் கொண்டால், ஏனைய சிங்களப் பகுதிகளில் கிடைக்கும் வாக்குகளைக் கொண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று விடலாம் என்பது இவர்களின் கணக்கு.
அம்பாந்தோட்டை, கேகாலை, புத்தளம், இரத்தினபுரி, மொனராகல போன்ற மாவட்டங்களிலும், அதையடுத்து, கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதிகளவில் ஆதரவு அளித்த அனுராதபுரம், பதுளை, அம்பாறை, காலி, களுத்துறை, மாத்தறை, மாத்தளை போன்ற மாவட்டங்களிலும் பெரும்பாலும் சிங்கள வாக்காளர்களே அதிகம்.
தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு, மலையக மாவட்டங்களில், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றது மிகக்குறைவு.
குறைந்தபட்சமாக 3 தேர்தல்களில், அதாவது, 1994, 1999, 2015 ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
ஏனைய சந்தர்ப்பங்களில் வெற்றி வேட்பாளருக்கு சாதகமாக யாழ்ப்பாண வாக்காளர்கள் வாக்களித்திருக்கவில்லை.
நிலைமைகள் இவ்வாறாக இருந்தாலும், கொழும்பு, கண்டி, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வாக்காளர்களும், அதிகளவு சிங்கள வாக்காளர்களும் இருந்தாலும், யாழ்ப்பாணம், உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாவட்டங்களும், நுவரெலிய மாவட்டமும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகித்து வந்திருக்கின்றன.
2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றியை சிங்கள மக்கள் தீர்மானிக்கவில்லை.
சிங்களவர்களின் ஆதரவை அவர் அதிகம் பெற்றிருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக் ஷவும் சம அளவிலான மாவட்டங்களிலேயே வெற்றி பெற்றிருந்தனர்.
அவ்வாறு ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்ற மாவட்டங்களில் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களும் கூட அடங்கியிருந்தன. ஆனாலும் அவரால் வெற்றியைப் பெறமுடியவில்லை.
காரணம், தமிழ்ப் பகுதிகளில் பல இடங்களில் முற்றாகவும் சில இடங்களில் கணிசமாகவும் – வாக்களிக்க மக்கள் முன்வரவில்லை.
7 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் சுமார் 8500 பேரே வாக்களித்தனர். இரண்டரை இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட வன்னியில் 85 ஆயிரம் பேர் தான் வாக்களித்தனர். மட்டக்களப்பில் 48 வீதமான வாக்குகள் தான் பதிவாகின.
இந்த மூன்று மாவட்டங்களிலும், விடுதலைப் புலிகளின் செல்வாக்கினால் வாக்களிக்க தமிழ் மக்கள் செல்ல வில்லை. அதுவே மஹிந்த ராஜபக் ஷவுக்கு சாதகமாக மாறியது.
அந்த தேர்தலில் மஹிந்த ராஜ பக் ஷ 181,000 வாக்குகளால் தான் வெற்றியைப் பெற்றிருந்தார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு. வன்னியில் வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றிருந்தாலே, முடிவு தலைகீழாக மாறியிருக்கும்.
2015 ஜனாதிபதித் தேர்தலில், சுமார் 58 வீதமான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தும் மஹிந்த ராஜபக் ஷவினால் வெற்றியைப் பெற முடியவில்லை. ஏனென்றால், 84 வீதமான சிறுபான்மையினர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தனர்.
இந்த தேர்தலில், 12 மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவற்றில் மஹிந்த ராஜபக் ஷ உண்மையில் படுதோல்வியைச் சந்தித்தது, வடக்கு, கிழக்கு, மலையக மாவட்டங்களில் தான்.
கம்பஹாவில் 5000 வாக்குகளாலும், பதுளையில் 300 வாக்குகளாலும், புத்தளத்தில் 4000 வாக்குகளாலும், தான் மஹிந்த ராஜபக் ஷ தோல்வி கண்டிருந்தார்.
இதனை பெரிய தோல்வியாகவோ, அவரது பிரதான வெற்றிக்கு ஆபத்தாக அமைந்த தோல்வியாகவோ கருத முடியாது,
கொழும்பில் சுமார் 163,000, கண்டியில் 89,000, பொலன்னறுவையில் 42,000 வாக்குகள் தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகமாக கிடைத்திருந்தன.
இந்த வாக்குகளை, மஹிந்த ராஜ பக் ஷ தான் கைப்பற்றிய, ஏனைய 10 மாவட்டங்களிலும் உள்ள சிங்கள வாக்குகளைக் கொண்டு இலகுவாக சமப்படுத்தியிருக்க முடியும்.
ஆனால், அது தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவில்லை. மட்டக்களப்பில் 168,000, அம்பாறையில் 111,000, யாழ்ப்பாணத்தில் 149,000, வன்னியில் 107,000, நுவரெலியாவில் 127,000, திருகோணமலையில் 88,000, என கிடைத்த சிறுபான்மையின மக்களின் மேலதிக வாக்குகள் தான் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைத் தீர்மானித்திருந்தன.
ஆக, இந்த இரண்டு தேர்தல்களையும் பார்க்கும் போதே, அதிகளவு சிங்கள வாக்காளர்களைக் கொண்ட மாவட்டங்களோ, அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட மாவட்டங்களோ தான் – வெற்றியைத் தீர்மானிக்கும் வல்லமையை கொண்டிருக்கவில்லை என்பது புலனாகும்.
– என். கண்ணன்-