சென்னை பீர்க்கங்கரணையை சேர்ந்தவர் நிலோபர். இவர் ஒரு டிராவல்ஸ் பஸ்சில் திருச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்றிரவு சென்னை திரும்பினார். பெருங்களத்தூரில் பஸ்சில் இருந்து இறங்கிய அவர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் பீர்க்கங்கரணைக்கு சென்றார்.
அப்போது நிலோபர் ஆட்டோவில் ஒரு பையை தவற விட்டார். அதில் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது.
இதையடுத்து நிலோபர் பீர்க்கங்கணை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். போலீசார் அவரிடம் ஆட்டோவில் எங்கு ஏறினீர்கள்? எங்கு போய் இறங்கினீர்கள்? என்பது பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்துக்கு ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த டிரைவர் போலீஸ் நிலையத்துக்குள் சென்று தனது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண் இந்த பையை தவற விட்டு விட்டார் என்று கூறி ஒரு பையை போலீசாரிடம் கொடுத்தார்.
அந்த பையில் நிலோபர் தவறவிட்ட 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை போலீசார் பாராட்டினார்கள். நகை, பணத்தை நிலோபரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் கண்ணன் (வயது 41) என்றும், பெருங்களத்தூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
ஆட்டோ டிரைவர் கண்ணனை இன்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ஆட்டோவில் நகை– பணத்தை தவற விட்ட நிலோபருக்கு தான் வந்த ஆட்டோவின் நம்பர் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாது. போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும் ஆட்டோவை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அடுத்தவர் பணம்– நகை மீது ஆசைப்படாமல் ஆட்டோ டிரைவர் கண்ணன் அதை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தது பாராட்டத்தக்கது.