ஈராக்கின் டியாலா மாகாணத்தின் குவாரா டாப்பா பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 தற்கொலைப் படை தாக்குதலில் 58 பேர் பலியாகினர். குவாரா டாப்பா பகுதியில் உள்ள ஈராக்கின் குர்திஷ் அரசியல் கட்சியின் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை முகாமை நோக்கி ஓடி வந்த ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த குண்டினை வெடிக்கச் செய்தான்.
அடுத்ததாக, அதே பகுதியில் அரசு அலுவலகத்தின் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரு கார்களை ஓட்டிவந்த தற்கொலைப் படையினர் அவற்றை மதில் சுவற்றின் மீது மோதச் செய்ததில், பயங்கர வெடிச் சத்தத்துடன் அந்தப் பகுதியே தீக்கோளமாக மாறியது.
அவ்வழியாக சென்ற பொதுமக்களின் உடல்கள் அப்பகுதி முழுவதும் வெடித்துச் சிதறித் தெறித்தது. இந்த கோரத் தாக்குதல்களில் 58 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமான தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. டியாலா மாகாணத்தின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள இந்த இயக்கத்தில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த 3 ‘ஜிஹாதிகள்’ இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது.