இதனால் 3-வது நீதிபதியின் தீர்ப்பை கேட்க இரண்டு நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தொடரப்பட்டதையடுத்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்தார்.
இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஜனவரி 24-ந் தேதி வழக்கு விசாரணைகளை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இவ்வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு, 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
ஆனால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் 3-வது நீதிபதியின் தீர்ப்பை கேட்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.